இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருமான சிவாஜிலிங்கம் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமையன்று லண்டனிலிருந்து துபாய் வழியாக சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவரிடம், இந்திய மத்திய அரசின் ஆணையை அடுத்து அவருக்கு இந்தியாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக, சென்னை விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் கூறியதாக சிவாஜிலிங்கம் அவர்கள் தெரிவித்தார்.
இந்தத் தகவலை விமான நிலைய குடியேற்றப் பிரிவு வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன.தஞ்சாவூரில் இடம்பெற்ற ஈழத் தமிழிர் வாழ்வுரிமை மாநாட்டுக்காகவும், தனது மருத்து சிகிச்சைக்காகவும் அவர் இந்தியா வந்ததாகக் கூறுகிறார்.
சென்னையிலிருந்து துபாய்க்கு திருப்பி அனுப்பப்பட்ட சிவாஜிலிங்கம், அங்கிருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் தனக்கு மனிதாபிமான உதவிகள் கூட வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
திங்கட்கிழமை இந்த விடயம் தொடர்பாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திடம் தன்னுடைய கடுமையான ஆட்சேபணையை எழுத்துபூர்வமாகவும், இலங்கை வெளிவிவகார அமைச்சகத்துக்கு தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து அநீதி குறித்தும் தெரியப்படுத்தவுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளருமான சிவாஜிலிங்கம் கூறினார்.