ரோமில் நடந்த கிறிஸ்துமஸ் தின பிரார்த்தனைக்கு நடந்து சென்றுகொண்டிருந்த பாப்பரசர் பெனடிக்ட் அவர்கள் மீது பெண் ஒருவர் மோதி அவரை தரையில் தள்ளிவிட்ட சம்பவம் நடந்த சில மணிநேரங்களில், பாப்பரசர் தமது வருடாந்த கிறிஸ்துமஸ் செய்தியை வழமை போல் வாசித்தார்.
புனித பீட்டர் சதுக்கத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள் மத்தியில் அவர் உறுதியான குரலில் உரையாற்றினார்.
நேற்று வியாழக்கிழமை இரவு நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தின்போது பாப்பரசர் காயப்படவில்லை.
ஆனால் வயது முதிர்ந்த பிரஞ்சு கார்டினல் ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
பாப்பரசரை நோக்கி பாய்ந்த பெண்மணிக்கு 25 வயது என்றும், அவர் ஸ்விஸ் மற்றும் இத்தாலி ஆகிய இரு நாட்டு குடியுரிமை உடையவர் என்றும் வத்திகான் தெரிவித்துள்ளது.
ஒரு ஆண்டுக்கு முன்பு இதேநாளில் பாப்பரசர் பிரார்த்தனைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரது பாதுகாவலர்களைத் தாண்டிச் செல்ல இதே பெண் முயன்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அந்த பெண்மணியின் மனநலம் குறித்து மருத்துவ ஆய்வுகள் செய்யப்படுகின்றன.