ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முற்படுகையில் பிடிபட்டு இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள படகில் இருந்த இலங்கைத் தமிழர் ஒருவர் இறந்துள்ளார்.
இந்தோனேஷியாவின் மராக் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகதிகளை ஏற்றிய படகில் தங்கியிருந்த கொழும்பை சேர்ந்த ஜேகப் என்ற 29 வயது நபர் வியாழன் இரவு 11 மணி அளவில் இறந்துள்ளார்.
இவரது உடல் நிலை கடந்த இரு தினங்களாகவே பாதிக்கப்பட்டிருந்ததாகவும், சிகிச்சைக்காக இவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள வேந்தன் என்பவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட நபருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டிருந்தும் அவை பலனளிக்காமல் போகவே அவர் இறந்துள்ளார் என இது பற்றி தமிழோசையிடம் பேசிய இந்தோனேசிய அதிகாரி கூறியுள்ளார்.
சர்வதேச குடியேறிகள் உதவி நிறுவனமான ஐ.ஓ.எம்.முடன் இணைந்து தாங்கள் கப்பலில் உள்ள அகதிகளுக்கு தம்மாலான உதவிகளைச் செய்துவருவதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.