கண்காணிப்புப் பணிகள் தீவிரம்
மும்பையில் தீவிரவாதிகள் புகுந்து வெறித் தாக்குதல் நடத்தியது போல, அடுத்த வருட ஆரம்பத்தில் லண்டனில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் எச்சரித்துள்ளனர். லண்டன் நகரிலுள்ள சில முக்கிய தொழிலகங்களை குறிவைத்து மும்பை பாணியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளமையை அடுத்து, லண்டனிலுள்ள தீவிரவாதத் தடுப்புப் பொலிஸார் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
புலனாய்வுத் தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் முக்கியமான "ஜிகாதிஸ்ட்" இணையத்தளத்தில் சர்ச்சைக்குரிய விடயங்களும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளமையை பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். லண்டனிலுள்ள இரவு களியாட்ட விடுதிகள், விளையாட்டு மையங்கள், பொலிஸ் நிலையங்கள் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல்கள் நடைபெறக் கூடும் என கணிக்கப்படுகிறது. எவ்வித சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் லண்டன் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.