சிரியாவின் அதிபர் பஷர் அல் அஸ்ஸத்துடன் டமாஸ்கஸ் நகரில், தான் அண்மையில் நடத்திய இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாகவும் ஒளிவுமறைவின்றியும் அமைந்திருந்தன என்று லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரி தெரிவித்துள்ளார்.
தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ரஃபிக் அல் ஹரிரியின் படுகொலைக்கு சிரியாதான் காரணம் என்று முன்பு சாத் அல் ஹரிரி குற்றம்சாட்டியிருந்தார்.
இருநாடுகளும் கடந்த காலத்திலிருந்து பாடம் கற்று எதிர்காலத்தில் நல்லுறவை வளர்க்க முயலுகின்றன என்று ஹரிரி குறிப்பிட்டுள்ளார்.
தனிநபர் அடிப்படையில் என்றில்லாமல் இருநாடுகளுக்கும் பயன் தரும் கொள்கைகளின் அடிப்படையில் சிரியாவுடன் நல்லுறவுகளைக் கட்டியமைக்க லெபனான் விரும்புவதாக பிரதமர் ஹரிரி கூறியுள்ளார்.