இராக்கில் பயன்படுத்தப்பட்ட உத்திகளைப் பயன்படுத்தினால் ஆஃப்கானிஸ்தானிலும் உள்நாட்டுக் கிளர்ச்சியைத் தோற்கடிக்க முடியும் என்று மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்கப் படைகளின் தளபதி ஜெனரல் டேவிட் பெட்ரேயஸ் கூறியுள்ளார்.
அமெரிக்கப் படைவீரர்கள் கிராமம் கிராமமாகச் சென்று அங்குள்ள சாதாரண மக்களிடம் இருந்து தாலிபான் அமைப்பின் கடும்போக்கு சக்திகளை தனியாகப் பிரிக்க வேண்டும் என்று ஜெனரல் கூறியுள்ளார்.
இராக்கில் 2007ஆம் ஆண்டு அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பை ஆரம்பித்துவைத்தவர் ஜெனரல் பெட்ரேயஸ்தான். அங்கு சுனி கிளர்ச்சிக்காரர்களை வெற்றி கொண்டு இராக்கில் நடந்துவந்த வகுப்புவாத வன்முறை குறைவதற்கு ஜெனரல் பெட்ரேயஸின் உத்தி வழிவகுத்தது என்று கூறப்படுகிறது.