ஐரிஷ் கத்தோலிக்க சமூகத்தில் சிறார்களை பாதிரிமார் பாலியல் துஸ்பிரயோகம் செய்தது குறித்தும் அதனை கத்தோலிக்க திருச்சபை மறைக்க முயன்றமை குறித்ததும் அந்த சமூகம் வெளியிடும் கோபத்தையும், வெட்கத்தையும் புனித பாப்பரசர் பெனடிக்ட் பகிர்ந்துகொள்வதாக வத்திக்கான கூறியுள்ளது.
கடந்த மாதம் ஐரிஸ் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றினால் அவர் மன அமைதியிழந்து, சஞ்சலத்துடன் காணப்பட்டதாக, ஐரிஷ் ரோமன் கத்தோலிக்க தலைவர்களை பாப்பரசர் சந்தித்ததை அடுத்து வத்திக்கான் கூறியது.
சில கத்தோலிக்க மதகுருமார் திட்டமிட்ட வகையில் பல தசாப்தங்களாக சிறார்களை துஸ்பிரயோகம் செய்ததாகவும், அந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட சிறார்களின் நலனை விட தமது திருச்சபையின் பெயர் கெட்டுவிடாமல் இருப்பதையே ஐயர்லாந்தில் உள்ள திருச்சபையினர் பார்த்துக்கொண்டதாகவும் அந்த அறிக்கை கூறியிருந்தது.