உலகின் செல்வந்த நாடுகள் தாம் வெளியிடுகின்ற வெப்ப வாயுக்களின் அளவில் மேலும் பெரிய குறைப்புகளைச் செய்ய வேண்டும் என்று கோரும் ஒப்பந்தம் ஒன்றின் வரைவு கோபன்ஹேகனில் நடந்துவரும் உலக பருவநிலை மாற்ற மாநாட்டில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் அடுத்த வாரம் உலக நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும்போது அவர்களிடையிலான பேச்சுவார்த்தைக்கு இந்த ஆவணம் அடித்தளமாக அமையும்.
புவியின் வெப்பம் இரண்டு டிகிரி செல்ஷியஸ் மட்டுமே அதிகரிக்க இடம்தருவது என்பது இந்த வரைவுத் தீர்மானத்தின் நோக்கம். ஆனால் இந்த நோக்கத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எவ்வகையில் நிதி கிடைக்கும் என்பதையோ, இந்த ஒப்பந்தம் சட்டப்படி உலக நாடுகள் கடைப்பிடிக்க வேண்டிய விதியாக எப்போது மாறும் என்பதையோ இந்த வரைவு ஆவணம் விளக்கியிருக்கவில்லை.
இந்த வரைவு ஒப்பந்தம் வெளியாகியிருப்பது நல்லதொரு முன்னேற்றம் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுக்கள் வரவேற்றுள்ளன.