வன்னி உன்னி எழும்பவும் முடியாது நொடிந்து கிடக்கிறது.
ஏழைகள் விவசாயிகள் என அதிகமானவர்கள் தற்கொலை செய்கிறார்கள்.
அல்லது பிச்சை எடுக்கிறார்கள்.
ஆண்கள் தமது விந்துகளைச் சிந்துவதற்கு
அனாதரவான பெண்களைத் தேடித்திரிகிறார்கள்.
பெண்கள் விளைந்த சிசுக்களை வீசுவதற்கு பற்றைகளை
அல்லது பாழும் கிணறுகளைத் தேடித்திரிகிறார்கள்.
நான்காம் ஈழப்போருக்கு மாணவர்களை அனுப்பிய
பாடசாலை அதிபர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள்
கல்வி அதிகாரிகளாகி இருக்கிறார்கள்
அல்லது பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள்.
இன்னும் பல அதிகாரிகள் கொள்ளை அடிக்கிறார்கள்,
அடி வருடுகிறார்கள் அல்லது அடியை வருடக் கொடுக்கிறார்கள்.
சில அதிகாரிகள் பெண்களின் மார்புகளைப் பிடிக்கிறார்கள்
அல்லது பிருச்டங்களைப் பிடிக்கிறார்கள்.
அல்லது சிவனே என்று இருந்து விடுகிறார்கள்.
இறுதிவரையும் தலைவணங்காத முன்னாட்
போராளிகளிற் சிலர் சிறைகளில் சித்திரவதைபடுகிறார்கள்
அவர்களின் ஈனக்குரல்களின் அதிர்வு மிக அதிகமென்பதால்
நாய்களுக்கு மட்டுமே கேட்கிறது.
அவையும் ஈழமெங்கும் பரவிக்கிடக்கும்
இராணுவ முகாம்களில் இருந்து கிடைக்கும்
இறைச்சித் துண்டுகளால் இந்திய ராணுவகாலம்
போல் அதிகம் குரைப்பதில்லை.
மேலும் முன்னரைப் போல் இப்போது நாய்களுக்கு
மொழிப்பிரச்சனையும் இல்லை.
விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள்
மரத்துப்போன சமூகத்துள் எறியப்பட்டிருக்கிறார்கள்.
ஆயினும் பெண் போராளிகளுக்கான
வாழ்க்கைத் துணையை தேடும் சங்கமொன்றும்
புலம் பெயர்ந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டிருகிறது.