குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 16 ம் திகதி செவ்வாய் கிழமை .

களவாடப்படும் கடல் வரிசை கட்டி நிற்கும் திட்டங்கள் - தாங்குமா தமிழக கடலும் கடற்கரையும் ? இ.தர்மராஜ

இ.தர்மராஜ்11 ஆகசுட், பிற்பகல் 4:38க்கு  · 13.08.2022 குமரிநாடு.கொம ்இல்

1144 கெக்டர் பரப்பளவில் கடற்கரையில் மணல் அள்ள அரசு அனுமதி.

2015 முதல் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மனு செய்த இரண்டே மாதத்தில் (யுன் 2022) ல் மீண்டும் அனுமதி

கனிமங்கள் நிறைந்த இயற்கை தந்த கொடையான கடற்கரை மணலை அள்ளி அதில் இருந்து புளுட்டேனியம், மோனோசைட்,யேரேனியம்,தோரியம் போன்ற பல கனிமங்களைப் பிரித்தெடுக்கும் திட்டம் தான் இது. இதனால் அப்பகுதிகளில் கதிரியக்க பாதிப்புகள் ஏற்படுவதுமட்டுமில்லாமல், கடலரிப்பு ஏற்பட்டு கடல்நீர் குடியிருப்பு பகுதிகளில் உட்புகுகிறது. இயற்கை மணல்மேடுகள் அழிக்கப்படுவதால் கடல் நீர் விவசாயநிலங்களுக்குள் உட்புகுந்து  நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதால் வாழும்பகுதியை விட்டு மீனவர்கள் தானாக வெளியேறுவார்கள் அல்லது வெளியேற்றப்படும் நிலைக்கு ஆளாவார்கள். இயற்கைக்கு எதிரான இந்த திட்டத்தால் கடலோர மீன்வளமும் நெய்தல் பகுதி விவசாயமும் பாதிக்கப்படுவதோடு , காலநிலைமாற்றமும் (),கடல்நீர்மட்டம் உயர்வும் ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

**************************************************************************

கடலில் காற்றாலைத்திட்டம்

தனுச்கோடி யிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் முதல்கட்டமாக காற்றலைத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் பின்னர் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர்,புதுக்கோட்டை,ராமநாதபுரம்,தூத்துக்குடி,திருநெல்வேலி,கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில்  என எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு காற்றலைத்திட்டம் விரிவுபடுத்தப்பட சாத்தியமுள்ளதாக அடையாளம் கண்டுள்ளார்கள். இந்த காற்றலைத்திட்டங்கள்  எனப்படும் பிரத்தேக பொருளாதார மண்டலங்களில் அமைக்கப்படும்.

கட்டத்தீவை தாரைவார்த்துக்கொடுத்ததன் விளைவாக நம் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளை இலங்கை எடுத்துக்கொண்டு நம் தமிழக மீனவர்களை தொடர்ந்து அழித்துவருகிறார்கள். மீன்பிடிப்பு பகுதிகள் குறைந்து சிரமத்திற்குள்ளாகும் மீனவர்களுக்கு இந்த காற்றாலைத்திட்டம் மிகப்பெரிய அடியாக அமையும்.

இந்த காற்றாலைகள் பின்வரும் காலங்களில் தனியாருக்கு கொடுக்கப்படலாம், விரிவாக்கம் என்ற பெயரிலும், பாதுகாப்பு என்றும் மீனவர்கள் அடக்கிஒடுக்கப்பட்டு தன் இருப்பிடத்தை மறந்து வெளியேற்றப்படும் பெரும் அபாயம் உள்ளது

**************************************************************************

ஆழ்கடல் சுரங்கம்

ஆழ்கடலில் 6 கிலோ மீட்டர் ஆழத்தில் கடலின் தரைத்தளத்தில் இருக்கும் இயற்கையாக உருவான பாலிமெட்டாலிக் நொடல்ஸ் என்ற கனிமத்தை எடுப்பதற்கு சமுத்ரயான் என்ற திட்டத்தை உருவாக்கி உதவியுடன் அமைச்சகம் தயாராகி வருகிறது. கடல்நீரில் உள்ள சிறிய கனிமத்துகள்கள் ஒன்றிணைந்து பல காலநிலை பருவங்கள் வெவ்வேறுபட்ட வெப்பநிலைகளுக்கு ஆட்பட்டு 2 இன்ச் அளவு (சிறிய உருளைகிழங்கு அளவு) இந்த பாலிமெட்டாலிக் நொடல்சு உருவாவதற்கு பல ஆயிரம் வருடங்கள் எடுக்குமாம். அப்படிப்பட்ட கனிமத்தை எடுத்து அதிலிருந்து மாங்கனீசு, நிக்கல், கோபால்ட்,காப்பர் போன்றவற்றை பிரித்தெடுத்து வளர்ச்சிக்கு பயன்படுத்துவதே திட்டம். இயற்கையை ஒருபக்கம் அழித்து மறுபக்கம் இயற்கையை காக்கும் வேடிக்கையான முயற்சியே இது.


பல வளர்ந்த உலக நாடுகளைப்போலவே நம்நாடும் இதில் தீவிர முனைப்பு காட்டுவது அதிர்ச்சியாக உள்ளது. கடலின் இயற்கையான அமைப்பை முற்றிலுமாக தகர்த்து பேராபத்தை ஏற்படுத்தும் திட்டம் என இதை அறிந்தும் செய்ய முனைவது மீனவர்களின் எதிர்காலத்திற்கான பெரிய ஆபத்து.


ஆழ்கடலில் இருந்து இந்த கனிமத்தை எடுக்கும்போது ஏற்படும் கடல் சுற்றுசூழல் பாதிப்புகள் சரிஆவதற்கு பல லட்சம் வருடங்கள் ஆகும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் ()

அரசுகள் தொடங்கும் இந்ததிட்டம் பிறகு ஏர்இந்தியா போல தனியார்க்கு கொடுக்கப்படுமேயானால் கடலை உழுது சல்லடைப்போட்டு சலித்து துடைத்துவிடுவார்கள் வளர்ச்சி எனும் போர்வையில், பிறகு எப்படி போராடினாலும் ஒரு ஆணியைக்கூட உருவ முடியாது ஏனெனில் அனைத்தும் கனரகம்.

***********************************************************************

274 எண்ணெய் கிணறுகள் அமைத்து கைட்ரோ கார்பன் எடுக்கப்போகும் வேதாந்தா

1654 சதுரகிலோமீட்டர் கடல்பரப்பு உட்பட புதுச்சேரி ,விழுப்புரம் பகுதிகளில் 116 கிணறுகளும், 2393 சதுரகிலோமீட்டர் கடல்பரப்பு உட்பட நாகப்பட்டினம் காரைக்கால் பகுதிகளில் 158 கிணறுகளும் அமைத்து ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனம் தயாராகிவருகிறது. இதனுடன் இணைந்து  நிறுவனமும் தனது பங்கிற்கு புவனகிரி,கடலூர்,நாகப்பட்டினம் பகுதிகளில் 67 கிணறுகள் அமைக்க தன்னை ஆயத்தமாகி வருகிறார்கள். இவைகளின் வேலைகள் பல பகுதிகளில் இப்போதே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

மரக்காணம் முதல் நாகப்பட்டினம் வரை கடலும் கடற்கரைகளும் இனி இவர்களின் ஆக்கிரமிப்புகளுக்கு ஆளானால் அப்பகுதி மக்களின் நிலை??  வளர்ச்சி வளர்ச்சி என்றால் இதுதான் வளர்ச்சியா. இதனால் அப்பகுதி மக்கள் வளர்ச்சி அடைவார்களா இல்லை வேதாந்தா வளர்ச்சி அடையுமா? மக்களை வதைத்து வளரும் வளர்ச்சி ஒரு வளர்ச்சியா?

( உத்தேச வரைபடம் இணைக்கப்பட்டுள்ளது)

***********************************************************************

இந்திய கடல்மீன்வள மசோதா 2021 ,  2021

பதிவுக்கட்டணம், உரிமக்கட்டணம், மீன்பிடிக்கட்டணம், அபராதம், சிறைபிடிப்பு, பறிமுதல் , சிறை , கட்டுப்பாடு, கண்காணிப்பு,தடை என பாரம்பரிய மீனவர்கள் வாழ்வை அழிக்கும் அடிமைச்சட்டம் தான் இது. இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு உருவானதால் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது

****************************************************************************

கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய சட்ட திருத்த மசோதா ,2022

பதிவு செய்யாமல் கடலோரப்பகுதிகளில் இயங்கும் இறால் மற்றும் மீன் வளர்ப்பு பண்ணைகள் இச்சட்டத்தின்படி குற்றமான செயலாக கருதப்படுவது நியாயமற்றதாகும் என மிகப்பெரிய குண்டை தூக்கி போட்டுள்ளது இந்த சட்ட திருத்தம். இது தவிர கடலுக்கும் கடற்கரைக்கும் விவசாய நிலங்களுக்கும் நிலத்தடி நீருக்கும் பல தீமை விளைவிக்கும் பல மாற்றங்களை இச்சட்ட திருத்தம் முன்மொழிகிறது.


22.07.2022 அன்று சட்ட திருத்த வரைவு இணையத்தில் வெளியிடப்பட்டு 01.08.2022 க்குள் கருத்துகள் இமெயில் மூலமாகவோ அல்லது குறிப்பிட்ட முகவரிக்கோ அனுப்பி வைக்க வேண்டுமாம். இதற்கு பெயர்தான் மக்கள் கருத்துக்கேட்பாம். இதற்கு கருத்து கேட்காமலேயே இருக்கலாமே. மீனவர்களுகளிடமும் விவசாயிகளிடமும் இணையத்தில் கருத்துகள் கேட்கும் அதிகாரிகளையும் அரசையும் நம்பி எப்படி வாழ்வது.

***********************************************************************

கடலில் பேனா

ஏற்கனவே மெரினா கடற்கரை கல்லறைகளால் நிரம்பி வழிகிறது. ஆளாளுக்கு போட்டி போட்டு மெரினாவில் இடத்தை பிடித்துவருகிறார்கள். இதே நிலைதான் கடலில் பேனா திட்டத்திலும் தொடரும் என்பது அனைவரும் அறிந்ததே. அரசுகள் மாறும்போதும் அதிகாரம் கையில் இருக்கும்போதும்  அனுமதி என்பது நொடிப்பொழுதில் நிகழும். 300 மீட்டர் கடல் பரப்பில் சிலை பின்னர் 500 மீட்டராகும் பின்னர் வலைத்து வலைத்து மெரினா முழுவதும் கடலில் சிலை இருக்கும். இது தற்போதைய கற்பனை என்றாலும் எதிர்கால நியம்.


முன்னால் முதல்வர்களுக்கு நினைவுச்சின்னம் தேவை தான் என்றாலும் கடலை சுற்றுலா தளமாக்க முயற்சிப்பது நம்நாட்டுக்கு பொறுத்தமானதல்ல. துபாய் போன்ற நாடுகளுக்குத்தான் இதுபோன்ற திட்டங்கள் பொருந்தும். ஆகையால் கடற்கரை மேலாண்மை சட்டத்தின்படி  கடற்கரையில் இருந்து 500 மீட்டர்வரை எந்த செயற்கை கட்டுமானங்களும் இல்லாமல் இருப்பது நல்லது. துறைமுகங்கள்,கலங்கரைவிளக்கங்கள் போன்றவற்றை தவிர்க்க இயலாது ஆனால் மற்றவைகளை தவிர்க்கலாமே.

( கட்சி சார்ந்த பதிவாக தனிப்பட்ட முறையில் எடுக்க வேண்டாம் உறவுகளே)

***********************************************************************

இது போன்று நீலப்பொருளாதாரம், சாகர்மாலா என அடிக்கிக்கொண்டே போகலாம்.

கடைசியாக ஒன்று , வளர்ச்சி என்பது மக்களின் வளர்ச்சியோடு சேர்ந்தே இருக்கவேண்டும். மாறாக ஒரு சில முதலாளிகளின் வளர்ச்சி நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி அல்ல என்பதை அரசு இயந்திரங்கள் உணரவேண்டும்.

உலகபணக்காரர்கள் பட்டியலில் இந்தியர்கள் முன்வரிசையில் போட்டிபோட்டுக்கொண்டிருக்கும் வேலையில் பல்லாயிரம் பேர் இங்கே உணவிற்கே வழியின்றி இருக்கிறோம் என்பது கசப்பான உண்மை.

பல சட்டங்கள் மக்களின் கருத்துகள் கேட்கப்படாமலேயே சில ஏசி அறைகளில் தீர்மானிக்கப்படுவது இந்தியா போன்ற நாட்டுக்கு நல்லது அல்ல. மக்கள் கேள்விகள் கேட்க தொடங்கினால் அனைத்தும் மாறும்

என்ற நம்பிக்கையில் உங்கள் அனைவருக்கும் 75 வது சுதந்திரதின வாழ்த்துகள்.

இ.தர்மராஜ்........................ வழக்கறிஞர் சு. கலைச்செல்வன் முகநுாலிருந்து.