குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

மறைந்திருந்து தாக்கும் நோக்கம் என்ன ? தமிழுக்கு எதிரானவர் செயல்கள் இப்படி இருக்கும்!

11.01.2022..... எல்லாவற்றிலும் மேலோட்டமான பார்வையும் அரைகுறையாகத் தெரிந்துகொண்டு பொருளற்ற வாதங்களை முன்வைப்பதும் மெய்ம்மையிலாக் கூற்றுகளை முன்மொழிவதும் இன்றைய தமிழ்ப் பண்பாட்டின் பிரிக்க இயலாப் போக்காக உள்ளது.அரசியலாளர் குறித்துப் பேசவிழைவதாகக் கருதவேண்டாம். பொழுது போக்கு இதழ்களில் கருத்துரைப்பவர் பற்றியதே என் குற்றச்சாற்று. வாய்மை தலையாய அறம், அந்த அறம் ஏனைய அறங்களுக்கெல்லாம்  தலைமைதாங்கும் சிறப்பு வாய்ந்தது என்பதே வள்ளுவர் கருத்து.

.கீழ்ப்பாக்கத்திலிருந்து வெளிவரும் அந்த இதழ் ஒருகாலத்தில் இந்தியநாட்டிலேயே மிகுதியாக விற்பனையாகும் இதழாகக் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தது.நூலிழையில் தமிழர் மேலாண்மையிலிருந்து தடம் மாறித் தமிழ்,தமிழர் என்றாலேயே கசப்பும் காழ்ப்புணர்வும் வெளிப்படுத்துவோரிடம் சிக்கிக்கொண்டது. (இதனைத்தமிழர்கள் உணர்வதில்லை)

நேரடியாகத் தமிழின வெறுப்பை வெளிப்படுத்துவதுடன் மக்கள்மன்றத்தில் செல்வாக்குப் பெற்றுவிட்ட எழுத்தாளர்களின் வழுவும் பிழையும் மலிந்த கூற்றுகளை மறுபதிப்புச் செய்து தமிழியக்கத்தின் மீது வெறுப்பை உமிழ்வது இந்த இதழுக்கு மிக விருப்பமான பொழுதுபோக்கு.

தமிழ்நாட்டின் திரைப்பாவலர்களுள் உண்மையாகவே அரசோச்சிவந்த உடுமலைநாரணகவி, இனியதமிழ்நடையில் இசைப்பாடல்களை யாத்தளித்த காமாட்சிநாதன்,அனைவர் உதடுகளையும் தம் கவிதையின் உறைவிடமாக மாற்றிய பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம், தெள்ளுதமிழ்ப் பாக்களைத் துள்ளும்சந்தத்தில் படைத்த கா.மு.செரீபு, படிமம், குறியீடுஆகியவற்றைத் திரைப்பாடல்களிலேயே வழங்கமுடியும் என மெய்ப்பித்துக் காட்டிய கம்பதாசன்,அணிநலன் செறிந்த பாக்களைத் திரைப்படங்களிலும் அறிமுகப்படுத்தமுடியும் என்பதற்குச் சான்றாக விளங்கிய கு.மா.பாலசுப்பிரமணியம்,எளிமையும் இனிமையும் கருத்தோட்டமும் கைகோர்த்துவரும் பாடல்களை வழங்கிய மருதகாசி எனப் பல்வேறு கவிஞர்கள் திரைப்பாக்களிலேயே முதிர்ச்சியும் கலைநயமும் தவழச் செய்த அருஞ்செயல் தமிழ்நாட்டின் தனிப் பெருமைகளில் ஒன்றாகும்.எனினும் ஒரு பாவலரை மட்டுமே தமிழர் போற்றிப் புகழ்ந்துவருகிறார்கள்.

அந்தப் பாவலரின் திரைப்பாடல் திறம் சிறப்பு வாய்ந்தது என்பதில் மாறுபட்ட கருத்து நமக்கில்லை.ஆயினும் அவர் தமிழ்ப்புலமை மிக்கவர் எனக் கருதுதல் பிழை.

தம்மைத் தமிழுக்கு அதிகாரியாகக் கருதி அவர் குமுதவாய் திறந்து  மொழிந்த  “உளறல்களை”  இந்த இதழ் இப்போது வாரந்தோறும் வெளியிட்டுவருகிறது. 12.1.2022 நாளிட்டு வெளிவந்துள்ள இதழில் ஒரே கல்லில் இரு மாங்காய்களாகக் குறளையும் தமிழியக்கத்தையும் பழித்துரைத்த அவர் பிழையுரையை வெளியிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளது.

தனித்தமிழ்  “உண்மையான பொருளைத் தருவதில்லை “என்பது அந்தப் பாவலரின் கண்டுபிடிப்பு.

இதற்குச் சான்றாகப் பல சொற்களைக் கூறி,இறுதியில் தமிழ்நாட்டு அரசு தன் இலச்சினையில் பொறித்திருக்கும்  “வாய்மையே வெல்லும் “என்னும் தொடரில் குற்றம் கண்டுபிடித்துள்ளார்.

‘சத்தியமேவ சயதே ‘என்பதை ‘வாய்மையே வெல்லும்  ‘ என்று   மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

சத்தியம் என்றால் மனம்,வாக்கு,காயம் ஆகிய மூன்றினாலும் நேர்மையாக இருத்த்ல்  என்று பொருள்.

வாய்மை என்பது வாய்ச்சொல் நேர்மை என்பதை  மட்டும்  குறிக்கும். “ என்கிறார்.

தம் கூற்றுக்குத் துணையாக  “வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும் தீமை இலாதசொலல்-குறள்291 “எனும் குறளை மேற்கோளாகக் காட்டுகிறார்.இக் குறள்மூலம் மூன்றில் ஒரு பங்குதான் அவர் வாய்மையைப் புரிந்துகொண்டுள்ளார்.

மனம்.மொழி.மெய் ஆகிய மூன்றாலும் பொய்யாமையைக் கடைப்பிடித்தலே வாய்மையாகும்.

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன். –குறள் 294


மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானம் செய்வாரின் தலை.  –குறள் 295


புறந் தூய்மை நீரான் அமையும் அகந் தூய்மை

வாய்மையான் காணப்படும்.- குறள் குறள் 298


என்னும் குறள்பாக்களின் மூலம் உள்ளம்,மனம்,அகம், என மூன்று நிலைகளில் மனத்தால் பொய்யாமை காத்தல் வாய்மை என்பதை வலியுறுத்துகிறார் வள்ளுவர்.


வாய்மை எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்

தீமை இலாத சொலல். குறள் 291


பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த

நன்மை பயக்கும் எனின். குறள்.292


என்னும் குறள்பாக்களில் மொழி(வாக்கு)வழி வாய்மை நுவலப்பட்டுள்ளது.

பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை

எல்லா அறமும் தரும்.


பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற

செய்யாமை செய்யாமை நன்று.


என்னும் குறள்பாக்களின் வழிச் செயலால் வாய்மை காத்தல் கூறப்படுகிறது.


ஏனைய குறள்பாக்கள் மனம்,மொழி,மெய் ஆகியவற்றால் வாய்மையறம் போற்றலை வலியுறுத்துகின்றன.

எனினும்  எவ்விடத்தும் வாய்மை என்பதை  “வாய்ச்சொல் நேர்மை” யாகக் குறள் குறுக்கிக் குறைத்துக்காட்டியதாகக் கருதவோ வரையறுக்கவோ இல்லை.

வாய்மை தலையாய அறம், அந்த அறம் ஏனைய அறங்களுக்கெல்லாம்  தலைமைதாங்கும் சிறப்பு வாய்ந்தது என்பதே வள்ளுவர் கருத்து.

ஆங்கிலத்தில் Truthfulness, Veracity எனக் குறிப்பிடத்தக்கது வாய்மை.பொய்யாமை எனத் தமிழில் போற்றத்தகது வாய்மை.. “வாய்மையே வெல்லும் “ எனத் தமிழில் கூறப்படுவதைக் குறைகூறுவதன் உள்நோக்கம் அரசியல் காழ்ப்புணர்வு என்பது வெளிப்படை.

மறைந்த ஒரு கவிஞர் தமது வாழ்நாளிலேயே மறந்த ஒரு கூற்றுக்கு மறுவாழ்வு தந்து தமிழ் மறுமலர்ச்சி அடையவழி வகுத்த தனித்தமிழ் இயக்கத்தைப் பழித்துரைக்கக் கீழ்ப்பாக்கத்தார் முயல்வது தகாது.

விற்பனை குறைந்து வருவாய் சரிந்துவரும் வேளையில் உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்யும்வகையில் தமிழ்ப்பகை வளர்ப்பது மடமையிலும் மடமை.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.