குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

மலேசிய மண்ணில் மணம் பரப்பிய தமிழ்ச் சான்றோர்களில் மகத்தானவர் இரா. வீரப்பனார்!

நினைவுநாள் கட்டுரை!*(கரிகாலன்)* 04.09.2021... மலேசியத் தமிழர்கள் நலனுக்காக அர்ப்பண உணர்வோடு தொண்டாற்றிய தமிழ்ச் சான்றோர்களில் *இர.ந.வீரப்பன்* என்பவர் மகத்தான தமிழ் அறிஞராக முத்திரைப் பதித்தவர் என்பது மிகையன்று. உலகெங்கிலும் தமிழ் அறிஞர்கள்தோன்றியிருக்கலாம். ஆயினும் *‘உலகத் தமிழர்’* என்று தமிழ்க்கூறு நல்லுலகம்பெருமைப்படுத்திய பெருமகனார் இவர் மட்டுமே என்பது தனிச் சிறப்பு. தமிழையும் – தமிழரையும் – தமிழர் வாழ்வையும், ஆராய்வதிலேயே தமது
வாழ்நாள் பணியாக மேற்கொண்டு வந்த இர.ந.வீரப்பனார், ஏறக்குறைய *43* நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து அங்குள்ள தமிழர்களிடம் உறவு பாராட்டி, கள ஆய்வுப் பணிகளை நடத்தியவர் ஆவார். சுமார் *40* நாடுகளில் வாழும் தமிழருக்காக – தமிழ் வாழ்வுக்காகத், தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர். தனது வாழ்நாளில் அயராத எழுத்துப் பணியால், *33* அரும் நூல்களை எழுதி வெளியிட்டு, மலேசியத் தமிழர்களுக்கே பெருமை தேடிக் கொடுத்தப் பெருமை இவருக்குண்டு. உலகத் தமிழரிடையே மலேசியத் தமிழையும் தமிழரையும் அறிமுகம் செய்து வைத்த பாராட்டுக்குரியவர். உலகத் தமிழர்களையும் அவர்களின் அயலக வாழ்வையும் மலேசியத் தமிழர்களுக்கு அடையாளம் காட்டியப் பெருமகனார். இர.ந.வீரப்பன் *1930ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 8* ஆம் நாள் இலங்கையின் கண்டி மாநிலத்தின் நுவரேலியா தோட்டத்தில், வாழ்விணையர் *நடேசன் -இரத்தினம்* தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். பின்னாளில் அவர் வாழிடமாக மலேசியாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். அவர் இலங்கையிலிருந்து தமிழகத்திற்குப் புலம் பெயர்ந்து, நாளடைவில் மலேசியாவில் குடியேறினார். மலேசியாவையே தம் தாய்நாடக ஏற்றுக் கொண்ட வீரப்பனார், மலேசியத் தமிழருக்காகவே தம் வாழ்நாள் முழுவதையும் ஒப்புக் கொடுத்தார். ஆரம்பப் பணியாக பல தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றி ஆசிரியப் பணியை இறைப் பணியாகவேப் புரிந்து சீரியத் தொண்டாற்றினார். 1953 இல் ஈச்ச மரத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தொடங்கி, தொடர்ந்து தென்னை மரத் தோட்டத் தமிழ்ப்பள்ளி, இரசாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கிள்ளான் மிட்லேண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பந்திங் சுங்கை சோ தமிழ்ப்பள்ளி, காப்பார் நகரத் தமிழ்ப்பள்ளி எனப் பள்ளிகள் பலவற்றில் பணியாற்றி 1985 இல் ஓய்வு பெற்றார். அதன் பின்னர், 1990 வரையில், கிள்ளான் அப்துல் சமாட் இடைநிலைப் பள்ளியில் தமிழ்மொழி கற்பித்து, தமிழ்ச் சேவையில் மேலும் தடம் பதித்தார். மற்றவர்களைப் போல அவரவர் பொறுப்பை அவரவர் செய்வர் என்று அலட்சியக் கொண்டிராது, எந்தச் செயலாயினும், அதில் தாமும் ஈடுபட்டு பிறருக்கும் செயலூக்கம் ஊட்டுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். தத்தம் பணிகளில் செயல்படாதவர்களைத் துணிந்து அகற்றுவதிலும், அவர் தயக்கம் காட்டாது பொறுப்புணர்ச்சியுடன் கடமையாற்றினார். 1990களில் அவர் *'உலகத் தமிழர் குரல்'* என்ற மாதாந்த சிற்றிதழ் ஒன்றை வெளியிட்டு நடத்தி வந்தார். *'மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்'*, *'தமிழ் இலக்கியக் கழகம்'* முதலான அமைப்புகளை மலேசியாவில் தோற்றுவித்தவர் வீரப்பனார் ஆவார். இன்றும் இவ்விரு இயக்கங்களும் தமிழுக்கு ஆக்கமானப் பணிகளை அமைதியாக ஆற்றி வருவதாக அறியப்படுகிறது. சிறுகதை, ஆராய்ச்சிக் கட்டுரை, ஆய்வுப் பணிகள், இலக்கிய நாடகம் நடத்துதல், மொழிப் போராட்டம், உலகளாவிய தமிழ்ப் பண்பாட்டுத் தொடர்புகள் என பற்பலத் துறைகளில் ஈடுபட்டு, காலத்தால் எண்ணத்தக்க அரும் தொண்டாற்றிய ஐயா இர.ந.வீரப்பனார், *1999 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 3* ஆம் நாள் தனது *69* வது அகவையில் உயிர் நீத்தார். தமிழனின் மண் – இனம் – மொழி – பண்பாடு ஆகியன காக்கப்பட வேண்டும் என்ற வேட்கையுடன், காலமெல்லாம் முரசுக் குரல் எழுப்பியதோடு மட்டுமன்றி, அதற்குரிய ஆக்கமான பணிகளை நிலைபடச் செய்தவரில் வீரப்பனாரின் பங்களிப்பு அபரிமிதமானது. இதற்குச் சில சான்றுகளையும் அடுக்கிக் கூறலாம். ஆரிய மேலாண்மையும், ஆணாதிக்கச் சிந்தனையும் சூழ்ந்திருந்த தமிழ் மக்களிடம், பெண்மையைப் போற்றுதலே தமிழர் மரபு என்பதை வலியுறுத்தும் வண்ணம், தம் பெயருக்குரிய தலையெழுத்தாக முதலில் தாயின் பெயரையும், அடுத்ததாக தந்தையின் பெயரையும் இணைத்து முன்னுதாரணம் காட்டிய முத்தான அறிஞர் வீரப்பானார் ஆவார். தாம் கைக்கொண்ட தமிழியச் சிந்தனைகளை தம்முடைய குழந்தைகளுக்கும் ஊட்டி வளர்த்தெடுத்தார். அவர்களுக்கு *'திருமேனி'*, *'பொன்னி'*, *'அருணன்'*, *'முல்லை'* என்று அழகுத் தமிழ்ப் பெயர்ச் சூட்டி, தமிழ் உணர்வூட்டி தமிழின் சிறப்பை முதன்மைப்படுத்தியவர். அன்னாரின் மகளார் *வீ.முல்லை* இன்று நாடறிந்த எழுத்தாளராகவும் தமிழியச் சிந்தனையாளராகவும் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. வீரப்பனாரின் அரும்பணிகளை ஒவ்வொரு மலேசியத் தமிழரும் போற்றிக் கொள்ள வேண்டியன. அன்னாரின் செயற்பாடுகள் மிகவும் அளப்பரியன என்பதற்கு, இன்றையத் தலைமுறையைச் சேர்ந்த எம்போன்றோரின் மனங்களில் அவர் இடம் பிடித்திருப்பதே தக்கதோர் எடுத்துக்காட்டு. அதுமட்டுமல்லாது, தமிழகப் பாவலர் ஐயா *கதிர் முத்தையனார்*, இலண்டனைச் சேர்ந்த ஐயா *சுரதா முருகையனார்* முதலானோர், இர.ந.வீரப்பனாரைப் பற்றி எழுதியிருக்கும் நூல்கள், அவரது சிறப்புக்கு மகுடம் சூட்டுபவையாக விளங்குகின்றன. நம்மிடையே இன்று தமிழும் – தமிழ்ப் பண்பாடும் – தமிழ் விழுமியங்களும் செழித்தும் செருக்குடனும் நிலைத்திருப்பதற்கு, ஊற்றாகவும் உரமாகவும் இருந்து மறைந்த, தமிழின முன்னோர்களை, நன்றியோடு நினைவிற் கொள்வோம்! அவர்களின் அடியொற்றி மொழி – இன – சமய – பண்பாட்டு மரபுகளைக் காத்து நிற்போம்! காலமெல்லாம் போற்றுவோம்! வாழியத் தமிழ்! வளர்க தமிழினம்! **நிறைவு!** கட்டுரை வழங்கிய ஐயா கதிர்முத்தையனார் அவர்கட்கு நம் நன்றி..