குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

சவ்வரிசி எப்படி செய்யப்படுகின்றது? யாவாஅரிசி யவ்வரிசி ஆனது பின் மரவள்ளி மாவில்செய்த நகல் அசல் ஆனது

அரசுஏற்றது!! 25.07.2021....நாம் இன்றைக்கு இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தி வரும் சவ்வரிசி மரவள்ளிக் கிழங்கிலிருந்து பெறப்பட்டது… ஆனால் அது ஒரு போலி (Duplicate) என்பது உங்களுக்கு தெரியுமா?ஆம்...சவ்வரிசி வரலாற்றில் ஒரு போலியை அசலாக - அரசாங்கமே அங்கீகாரம் தந்து - ஏற்றுக்கொள்ளப்பட்ட வேடிக்கை நிகழ்ந்தது.

சவ்வரிசியின் ஆங்கிலப் பெயர் சேகோ. (SAGO). இது மெட்ரோசைலான் சாகு (Metroxylon Sagu) என்ற ஒருவகை பனை மரத்தின் பதநீரைக் காய்ச்சி இறுதியில் கிடைக்கும் மாவு போன்ற பொருளை - சிறு சிறு குருணைகளைப் போல் உருட்டித் தயாரிக்கப்படுகிறது. (Sago - Wikipedia)

இந்தோனேசியாவின் ஜாவா தீவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் ‘ஜாவா அரிசி’ என அழைக்கப்பட்டு அதுவே பின்னர் ‘சவ்வரிசி' என மருவியது.

ஆனால், நாம் இன்றைக்கு பயன்படுத்துவது இந்தோனேசிய பனைமரத்து சவ்வரிசிக்கு மாற்றாக உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கைக் கொண்டு செய்யப்பட்டதாகும்.

ஆம்…

ஜாவா அரிசிக்கு மாற்றாகத் தயாரிக்கப்பட்ட போலியையும் பின்னாளில் 'ஜவ்வரிசி' என்ற பெயரில் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நகைபிற்கிடமான வரலாற்றைப் பார்ப்போம்.தொடக்கத்தில் அசலான இந்தோனேசிய ஜவ்வரிசியே பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. ஆனால் இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பிறகு எல்லா இறக்குமதிக்கும் தடை வந்தபின் மைதா மாவையும் சவ்வரிசியையும் கூட இறக்குமதி செய்ய முடியாமல் போனது.

இந்நிலையில் சேலத்தைச் சேர்ந்த மாணிக்கம் செட்டியார் என்பவர் மைதாவுக்குப் மாற்றாக கேரளப் பகுதிகளில் இருந்து மரவள்ளிக்கிழங்கு வாங்கி மாவாக்கி விற்று வந்துள்ளார். இதனையறிந்த (மலேசியாவில் ஜவ்வரிசி வியாபாரம் செய்துவந்த) போப்பட்லால் சா என்பவர் மாணிக்கம் செட்டியாரைப் சந்திக்க - சவ்வரிசிக்கும் ஒரு டூப்ளிகேட்(நகல்) செய்து பார்க்கலாம் என இருவரும் முடிவு செய்தனர்.

பெரும் முயற்சிகளுக்குப் பின், மாணிக்கம் செட்டியாரும் போப்பட்லால் சாவும் இணைந்து மரவள்ளிக்கிழங்கு மாவைத் தொட்டிலில் இட்டு அதைக் குலுக்கி குருணையாகத் திரட்டி பாத்திரத்தில் இட்டு வறுத்து அதை ஜவ்வரிசிபோல மாறச் செய்து போலி சவ்வரிசியைக் கண்டுபிடித்தனர்.

1943 வாக்கில் இந்த மாற்று சவ்வரிசியினை சேலத்தை மையமாகக் கொண்டு உற்பத்தியைத் தொடங்கிய பின் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. இதற்கு முக்கிய காரணம் - அசல் சவ்வரிசிக்கும் மரவள்ளிக்கிழங்கு சவ்வரிசிக்கும் சுவையளவில் எந்த வேறுபாடும் காணமுடியாத அளவுக்கு ஒன்றாக இருந்ததே.

அதன் பின்னர் 1944-ல் அசல் சவ்வரிசி இறக்குமதியாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ‘இது உண்ணத் தகுந்ததல்ல’எனத் தடை விதிக்கப்பட்டாலும்

மரவள்ளிக்கிழங்கு சவ்வரிசி உற்பத்தியாளர்கள் நீதிமன்றம் வரை சென்று போராடி மரவள்ளிக்கிழங்கு சவ்வரி சியும் உண்ணத் தகுந்தது என நிறுவியபின் தடைகள் தளர்த்தப்பட்டு மரவள்ளிக்கிழங்கு சவ்வரிசியையும் Sago என்ற பெயரில் விற்பனை செய்ய அரசு அனுமதி தர, ஒரு போலியே அசலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இங்கிலாந்து ஆட்சிக்குப் பிறகு அமைந்த இந்திய அரசும் இந்த உள்ளூர் சவ்வரிசிக்கு ஆதரவாக அசல் சவ்வரிசி இறக்குமதிக்குத் தடைவிதிக்க போலியே அசலென மக்கள் மனதில் நிலைத்து விட்டது.

இரவீந்திரன்சிவன்