குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

தமிழுக்கு வாழ்வதே வாழ்வு தமிழ்ப்பேரறிஞர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

16.04.2021 03.03.(மேழம்..திருவள்ளுவராண்டு 2052

தமிழே உனக்கு வணக்கம்

தாயுன் புகழ்இந்த உலகில் மணக்கும்

தமிழே உனக்கு வணக்கம்.

இமை நேரமும் உனைமறக்க மாட்டோம்!

எம் கடன் ஆற்றாமல் இறக்க மாட்டோம்

அமுதத் தமிழைத் துறக்க மாட்டோம்

அடிமையை ஒப்பினால் சிறக்க மாட்டோம்.

 

தமிழே உனக்கு வணக்கம்

உனக்கு வந்தநலம் எமக்கு வந்ததாகும்

உனக்கு வந்தவெற்றி எமக்கு வந்ததாகும்

தனக்கென வாழ்ந்தது சாவுக் கொப்பாகும்

தமிழுக்கு வாழ்வதே வாழ்வ தாகும்!

தமிழே உனக்கு வணக்கம்,

எது என் ஆசை

அதுதான் என் ஆசை-தமிழ்

அன்னை அவள் முன்னைபோலத்

தன்னைத்தானே ஆளவேண்டும். (அதுதான்)

இதுதான் அவள் நிலையா?-அவள்

எல்லாம் பெற்றிலையா?-இனிப்

புதுவாழ்வுறல் மலையா?-அவள்

போரில் நின்று பாரில் இன்று

நேர்நிமிர்ந்து வாழவேண்டும். (அதுதான்)

அடிமை யுற்ற துண்டா?-அவள்

அயலவனின் பெண்டா?-இம்

மிடிமை நிலை பண்டா?-அவள்

வெற்றிக் கொடி பற்றிப் பகை

எற்றுப் புகழ்மேவ வேண்டும்.

ஆரியம் போல் முடமா?-தமிழ்

அன்னை கலப்படமா?-வேற்

றூர் தான் பிறப்பிடமா?-பதை

ஒழித்தே இடர்அழித்தே நலம்

கொழித்தே புகழ் மேவவேண்டும்.

இடையில் வந்த வாழ்வா?- அவள்

ஏற்ப திந்தச் சூழ்வா?-தமிழ்

நடையி லென்ன தாழ்வா-தமிழ்

நாடு நல்ல வீடு, மீகு

பீடு பெற்று வாழவேண்டும்!

தமிழர்க்கு அழைப்பு

தமிழரெல்லாம் தமிழரையே சார்தல் வேண்டும்

தமிழரல்லார் தமைச்சார்தல் தீமை செய்யும்!

தமிழர்க்குத் தமிழர் தாம் இடர்செய் தாலும்

தமிழர்பொது நலமெண்ணிப் பொறுக்க வேண்டும

தமிழரெல்லாம் தமிழரன்றோ! தமிழர் அல்லார்

தமிழரல்லார் என்பதிலும் ஐய முண்டோ?

தமிழர்க்குத் தமிழரல்லார் இதுவரைக்கும்

தமைமறந்தும் ஒரு நன்மை நினைத்த துண்டோ?

தமிழனொரு தமிழனுக்குத் தீமை செய்தால்

தனிமுறையிற் செய்ததென அதைம றந்து

தமிழரது பொதுநலத்துக் குயிருந் தந்து

தமிழரது பண்பை நிலைநிறுத்த வேண்டும்,

தமிழனுக்குத் தனிமுறையில் செய்த தீமை

தமிழர்க்குச் செய்ததென நினைத்தல் நன்றா?

தமிழரெலாம் ஒன்றுபடத் தக்க நேரம்.

தமிழரிதை மறப்பாரேல் இனமேசாரும்?

தமிழரெல்லாம் தமிழருக்குக் துணையாய் நிற்க,

தமிழ் கொன்று தமிழினத்தை ஈடழிக்கத்

தமிழரல்லார் மூக்சுவிடா துழைக்கின்றார்கள்,

தமிழருக்குத் தலைவரெனச் சொல்வார் தாமும்;

தமிழ்மாய்க்கக் காசுபெறத் துடிக்கின்றார்கள்.

தமிழ்மாய்க்கக் கூலிதரச் சிலரும் உள்ளார்,

தமிழ்கொல்லும் தலைவர்களைக் காணும் தீய

தலைமுறையும் இதுவாகும் ஒன்று சேர்க!

( 40 )

( 45 )

( 50 )

( 55 )

( 60 )

இனப் பண்பாடு

மனப் பண்பாடாதல் வேண்டும்

தாங்கள் தமிழரே என்று பார்ப்பனர்

கழறலாம் அதிலே கவலை இல்லை;

தமிழர் தம்மைப் பார்ப்பனர் என்று

பகரலாம் அதற்குப் பதற மாட்டோம்!

சிங்களம் சென்ற தமிழன் சிங்களச்

செங்க ரும்பைச் சேர்த்து நாலைந்து

பிள்ளைக் குட்டிகள் பெற்றுது தென்னாட்

டெல்லையில் மகிழ்வுடன் வாழ்ந்திருக்கலாம்.

பாரிசில் பிறந்த பச்சைக் கிளியைத்

தமிழன் உயிரில் தாங்கி வந்து

மக்களொடு மக்களாய் வாழ்ந்திருக்கலாம்

ஊன்றி நோக்கத் தக்க தொன்றே;

தமிழ்மொழி நன்றே தழைக்க வேண்டும்

தமிழ் அமிழ்து சாற்றிய முறைப்படி

தமிழன் உரிமையொடு வாழ வேண்டும

என்றஓர் அழியா இனப்பண்பாடு

மனப்பண்பாடாம்எனின்

தனித்தசீர்த் தமிழரே அவர்தமழ் அகத்தாரே!

( 65 )

( 70 )

( 75 )

தமிழ் விடுதலை ஆகட்டும்

சலுகை போனால் போகட்டும்-என்

அலுவல் போனால் போகட்டும்

தலைமுறைஒரு கோடி கண்ட என்

தமிழ் விடுதலை ஆகட்டும். (சலுகை)

பிள்ளைபிறந்தேன் யாருக்காக?

பெற்றதமிழ் மொழிப் போருக்காக!

உள்ளம் இருப்பதும் தோள் இருப்பதும்

உயிர்நிகர் தமிழ்ச் சீருக்காக! (சலுகை)

போனால் என்னுயிர் போகட்டும்-என்

புகழுடல் நிலை ஆகட்டும்!

தேனால் செய்தஎன் செந்தமிழ்தான்

திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்! (சலுகை)

( 80 )

( 85 )

( 90 )

தொண்டர் படைப்பாட்டு

வாரீர் தொண்டர் படைக்கெல்லோரும்-விரைந்துசேர

வாரீர் தொண்டர் படைக்கெல்லோரும்

பாரீர் நமது தமிழ்க் கன்னல்-உயிர்ப்பயிரை

வேரோடு சாய்க்க வரும் இன்னல்-களைந்தெறிய (வா)

சீரோடி ருந்தத தமிழ் நாடு-தந்தருளிய

செம்பைக் புலவர் தந்த ஏடு-பலப்பலவும்

பேரே இலா தொழித்த தோடு-நமதொழுக்கம்

பேணாதகற்றிவிட்ட கேடு-பொறுத்ததினால் (வா)

பாரோர் புகழ் தமிழ்ப் பண்பாடு-தனையழிக்கப்

பார்க்கும் பகையின் நரிக்காடு-தனை எதிர்க்க

ஊரார் தம்வீட்டுக்கு வீடு-சிறுத்தை நிகர்

ஒன்றைத் தமிழர் விழுக்காடு-வெளியில் வந்து

போராடுவோம் மகிழ்ந்து தேரோடியே விரைந்து (வா)

( 95 )

( 100 )

பெரியார் இயக்கம் வாழ்க.

நரியார் கூட்டம் ஒழிக!

தமிழகம் மீள வேண்டும்

தமிழர்கள் வாழ வேண்டும்

அமிழ்தான இக்கொள் கைக்கே

அருந்தொண்டு செய்பவர் போல்

தமைக்காட்டிக் கொண்டே சில்லோர்

தமதுடல் வளர்க்கின்றார்கள்

இமைப்பினில் இவர்கள் எல்லாம்

ஒழிந்தால்தான் இயக்கம் வாழும்!

மக்களை மீட்க நல்ல

மனம் மொழி மெய்கள் வேண்டும்;

இக்கொள்கைக் கான தொண்டே

எந்நாளும் செய்ப வர்போல்

பொய்க்கோலம் காட்டிச் சில்லோர்

பொதுப்பணம் கருதுகின்றார்.

கைக்கூலிகள் தொடர்பு

கழன்றால்தான் இயக்கம் வாழும்!

ஆண்டாண்டு தோறும் மக்கள்

ஆரியம் தனில் ஆழ்கின்றார்

மீண்டாலே தமிழர் மீள்வார்

எனுமிந்த மேன்மைக் கொள்கை

பூண்டார்போல் காட்டித் தங்கள்

புதுக்கட்சி வளர்க்கும் புலவர்

வேண்டாத பெரியார் காலை

விட்டால்தான் இயக்கம் வாழும்.

தன்னலம் நீக்கி இன்பத்

தமிழக நலமே காக்க

எனுமிக் கொள்கைக்காக

என்று தொண்டாற்றுவார்போல்,

மின்னிடும் வெண்பொற் காசு

நடிகர்பால் மின்னக் கண்டால்

அன்னானின் அடிவீழ்வார்கள்

அகன்றால்தான் இயக்கம் வாழும்!

அழியாத பார்ப்புக் கோட்டை

அழித்திட வேண்டுமென்ற

பழியாத கொள்கைக் காக

உழைப்பதாய்ப் பசப்பிச் சில்லோர்

செழியாதார் செழிப்பார் என்று

சிபாரிசால் சுரண்டுவார்கள்.

அழையாதார் வீட்டில் உண்போன்

அகன்றால்தான் இயக்கம் வாழும்.!

பகலென்றும் இரவே என்றும்

பாராது மக்கள் தம்மை

அகலாது செய்வ தாமோர்

அன்புத்தொண்டு இயற்றுவார்போல

மிகக் காட்டிப் பெரியார் தம்மை

வெருட்டவும் கனவு காண்பார்

வகைக்கெட்டார் நாண மில்லார்

ஒழிந்தால்தான் இயக்கம் வாழும்.

அவன் போனான் இவனும்-போனான்

அடுத்தொரு குள்ளன் போனான்

எவன் போனால் எனினும் நாட்டில்

இருக்கின்றார் பெரியார் என்றால்

குவிந்தது தமிழர் கூட்டம்

குலைந்தது பார்ப்பான் ஓட்டம்;

நவிலும் இந்நிலையில் தீய

நரிக்கூட்டம் ஒழிதல் நன்றே!

தானின்றேல் தலையே இல்லை

என்றுபேன் சாற்றி னாற்போல்

நானில்லை எனில் இயக்கம்

நடக்காதென் றானாம் ஓர்ஆள்!

ஏன்என்று கேட்ட தற்கு

யான் உழைப்பவன் என் றானாம்.

பூனை, கண் மூடிக் கொண்டால்

உலகமா இருண்டு போகும்

உழைப்புக்குக் கூலி யாகப்

பெரியாரை ஒழிப்ப துண்டோ?

பிழைப்புக்கு வழிசெய் தாரே

திருமணம் பெறச்செய் தாரே

தழைப்பித்த நிலத்தைப் பைங்கூழ்

தாக்கவா முடியும்? அன்னோன்

கொழுப்பினை அடக்குதற்குப்

பெரியார்க்குக் கோலா வேண்டும்?

பெரியாரின் பேர் ஒழிக்க

முதல் முழக்கம்செய் தோன்யார்?

தெரியாதா? அந்த ஆளே

திருத்தொண்டு செய்தோன் என்றும்

பேசிஆள் சேர்க்கின்றானாம்

புரியாத இருளில் உள்ளான்

விடிந்தபின் புரிந்து கொள்வான்!

பொன்கையில் இருந்ததுண்டா?

புகழ்தானும் இருந்ததுண்டா?

தன்கையை ஊன்றித் தானே

எழுந்திடும் தகுதி உண்டா?

முன் கைதந் தருளினாரின்

முழுதுடல் வெட்ட எண்ணும்

புன்தொழில் உடையான் ஓடிப்

போனால்தான் இயக்கம் வாழும்!

மிகுதியாய்த் தீமை செய்தோர்

தில்லியார்! பெரியார்க்குள்ள

தகுதியால் தமிழகத்தைச்

சாகுமுன் மீட்க வேண்டும்

புகுந்தது தமிழ்ப்பட்டாளம்

போர்ப்படைத் தலைவர் தம்மை

இகழ்தலும் கவிழ்க்கும் வஞ்சம்

இழைத்தலும் செய்வோன் யாவன்?

( 105 )

( 110 )

( 115 )

( 120 )

( 125 )

( 130 )

( 135 )

( 140 )

( 145 )

( 150 )

( 155 )

( 160 )

( 165 )

( 170 )

( 175 )

( 180 )

( 185 )

( 190 )

( 195 )

அன்னை திருமுடி வாழ்க!

அறத்தை வடவன்செய்யும் படுகொலை-தெற்கில்

அனைவர்க்கும் ஏற்பட்ட விடுதலை

திறத்தை உடையவன் அல்லன் வடக்கன்-தெற்கின்

சிக்கலால் கொழுத்தான் அவ்விடக்கன்

புறத்தைச் சாதிச் சேற்றினால் மூடித்-தமிழர்

புலத்தைக் கெடுத்தானப் பேடி-

பறக்க வேண்டும் பார்ப்பனன் சூழ்ச்சி-கடிது

படைக்க வேண்டும் தமிழர் ஆட்சி

அன்னை கண்ணீர் நம்மவர் உணர்ச்சி-நம்மில்

ஆருக்கில்லை போர் முயற்சி?

சின்னமனிதர் தமிழர்போல் நடிப்பினும்-பார்ப்புச்

செம்பாம்பு கூடிக் கடிப்பினும்

தென்னவன் ஒருவன் உள்ளவரைக்கும்-தோள்கள்

தீய ஆட்சியை எரிக்கும்?

மன்னி உயர்க அன்னை மணிக்கொடி-வாழிய

வாழிய அன்னை திருமுடி!

( 200 )

( 205 )

( 210 )

வெளியேறு

இன்று காணும் தென்பெருங்கடல்

முன்னாள் முதற்றமிழ்க் கழகம் இருந்த

குமரி நாடு! இன்னும் கூறுவேன்

இந்நாள் ஆரியர் இருக்கும் நாடு

முன்னாள் தமிழ்கமழ் முல்லைக் காடு!

தெலுங்கு கன்னடம் கேரளம் வங்கம்

எனும்பெயர் உடையவை எல்லாம் தமிழகமே!

கொடுங்கடல் கொண்ட குமரி தொடங்கி

பனிவரை வரைக்கும் பரந்த தமிழகம்

உமதெனில் நாட்டில் உமக்குள உரிமையும்

உமக்குள பொறுப்பும் ஒருவர்க்கும் இல்லை.

உணர்வினால் உம்மை நோக்குக நீவிர்

மாடோட்டி வந்த நாடோடிகளா?

ஒருகுடிக் குரிய வாழ்வின் வாழ்வின் உட்புகுந்து

கலகம் விளைத்துப் பிழைக்கும் கயவரா?

இல்லை, இல்லை இம்மியும் இல்லை!

"என்கீழ் தமிழகம் இருக்க வேண்டும

என்னும் கீழ்மகன் தன்னை; அவனின்

காலடி நத்தும் கடையனோடு

வெளியேறு நாட்டைவிட்டென்று

பளீர் என்று சொல்லுவீர் பச்சைத்தமிழரே!

( 215 )

( 220 )

( 225 )

( 230 )

( 235 )

குயில்

திருமிகு தமிழகத் தலைநகர் ஆன

சென்னையில் பன்னூறு கவிஞர் சேர்ந்த

அனைத்துலகத் தமிழ்க் கவிஞர் பெருமன்

றத்தின் சார்பில் முத்தமிழ்ப் புத்தமிழ்து

பாடுங் குயில்! இது பதினைந்து நாள்கள்

தேடுவார் அடையும் தேடருஞ் செல்வம்.

கலகக் கட்சிகள் தலையிடாது

வலியவரும் சண்டை யையும் விடாது;

குயிலின் கொள்கையும் குயிலை உடைய

பெருமன் றத்தின் கொள்கையும் இதுவே.

மதங்களில் எதிலும் பற்று வைத்தலும்,

சாதியை நினைத்தலும் குயிலேடு தவிர்க்கும்.

அனைத்துலகத் தமிழ்க் கவிஞர் அனைவரும்

ஒற்றுமை எய்தும் வண்ணம் உழைக்கும்

ஒருகவி ஞன்தான் பெற்ற உயர்வு

கவிஞர் அனைவரும் அடைந்ததாக

எண்ணுமோர் பண்பாடு வளர்க்க இளைக்காது.

பெருமன் றத்துக் கவிஞர்பால் பெற்ற

கவிதை அனைத்தையும் கவின்பெரு நூலாய்த்

தொகுக்கவும், தொகுத்ததை ஆங்கிலம் ஆக்கி

உலகுக்குத் தந்து தமிழகப் பெரும்புகழ

நிலைபெறு வித்தலும் தலையான எண்ணம்.

குயில் தமிழுக்குக் கூடிய மட்டில்

அயரா துழைக்கும்; ஐயமில்லை.

தமிழைக் காக்கவும் தமிழ்ப்பா வாணர்

அமைவினை ஆயவும் அரசினர் அமைக்கும்

நிறுவனம் பலவும் நேரிய முறையில்

நிகழும் வண்ணம் நினைவு படுத்துவது

குயிலின், குயில் நிறுவனத்தின் மூச்சு.

தமிழ்ப் பேரறிஞரும் தமிழ்ப்பெருங் கவிஞரும்

பெறத்தகும் பயனைப் பெறவொட்டாமல்

உடையில் ஒருசிலர் எழுப்பி வருவதோர்

இருப்புச் சுவரை இடிக்க வந்த குயில்.

பெருமன்றத்தின் பெருந்தொகைத் கவிஞர்

வரைவன குயிலில் வரும் ,அவர் படம்வரும்,

அவர் வரலாறும் அழகுற வெளிவரும்.

மன்றம் வளர்க்கும் அக்குயில் அப்பெரு

மன்ற உறுப்பினர் வளர்ப்ப தாகும்.

ஒரு குயில் வாங்கலும், ஐந்து குயில் வாங்கச்

செய்தலும் மன்ற உறுப்பினர் செயலாம்.

அயலவர் விற்பனை உரிமை அற்றவர்

அன்றியும் அன்புக் குயில் ஆசிரியரும்

ஆயிரங் கவிஞர் என்பதறிக.

மன்ற உறுப்பினர் மணிக்குயில் உறுப்பினர்

மன்றம் உடையார் மணிக்குயில் உடையார்,

அவர்கட் கென்றன் அன்பு வேண்டுகோள்;

பழந்தமிழ் நாட்டினர் கவிதையைப் படிக்கும்

வழக்கம் அடைய உழைத்தல் முதற்கடன்.

அனைத்துலகத்தமிழ்க் கவிஞர் மன்றத்தில்

சேரா திருப்பவர் சேருமாறு செய்க .

அடங்கல் உலகினும் குயிலை அனுப்புக;

கட்சிகள் மதங்கள் சாதிகள் என்னும்

முட்களில் மணிக்குயில் முட்டா தாதலால்

எல்லாரும் உண்ணும் இன்ப உணவெனச்

சொல்லிக் குயிலைத் துறைதொறும் உயர்த்துக.

அலுவலில் உள்ளவர் ஆதரிக் கலாம்.

இலகு மாணவர் அதை ஆதரிக் கலாம்

மகளிர் இதனை மகிழ்ச்சி யோடும்

ஆதரிக்கலாம்! அறஞ்செய்ய மறுப்பா?

செந்தமிழ்ப் புலவர்க்குச் சொல்வ தொன்று

குயிலுக்கு நீவீர் கொடுக்கும் ஆதரவு

துயிலுவார்க் களிக்கும் தூய ஆதரவு

அருளைச் செய்க, குயிலுக்கு அன்னது

இருளை நீக்கும் இன்தமிழ் நாட்டில்!

தமிழை எதிர்க்கும் தலைவர், சழக்கர்

திருமுகம் திருப்பினால் பகைமுகம் என் ஆம்?

தொன்மைக்குத் தொன்மையிற் றேன்றிய தொல்குடி

அன்புத் தமிழரே ஆதரிக்க

தமிழே வாழ்க! இன்பத்

தமிழகம் பகையை ஒழித்துத் தழைகவே.

( 240 )

( 245 )

( 250 )

( 255 )

( 260 )

( 265 )

( 270 )

( 275 )

( 280 )

( 285 )

( 290 )

( 295 )

( 300 )

( 305 )

தமிழ் இன்றியமையாதது

உணவால் உயிர் நிலைக்கும்; அந்த உயிரும்

அணிதமிழால் ஆகும்; அதனால், -பணிமொழியே!

செந்தமிழைத் தீர்ப்பாரைத் தீர்த்தல் முதல்வேலை!

சிந்தட்டும் செங்குருதி ஆறு.

வீரர்மரபில் விளைந்த மணிவிளக்கே!

பாரில் ஒரு மொழியைப் பாழாக்கிச்-சீரின்றித்

தம்மொழியை மேலாக்கும்

தக்கைகளும் வாழ்ந்ததுண்டோ?

இம்மா நிலத்தில் இயம்பு.

( 310 )

மனிதனும் தாய்மொழியும்

பிரிக்க முடியாதவை

செத்தமிழும் உடல் உயிரும் சேர்ந்தபொருள் 'தமிழன்

எந்தப்படி அவ்வுருப்படி எவன் பிரிப்பான் செப்படி?

சொந்தஉயிர் சொந்தவுடல் சொந்த மொழி மூன்றும்

வந்தபடி நிலைக்குமடி வழியிற் பிரிவதில்லை!

மக்களிடம் தாய்மொழிதான் மாய்ந்த நிலை' சாவாம்,

எக்கொடியனால் முடியும் ஒன்றை இரண் டாக்கல்?

தக்கபேர்உலகினிலே தாய் மொழியை மாற்றத்

தக்கபேர்ஆற்றலினை அடைந்தவனும் உண்டோ?

( 315 )

( 320 )

தமிழர் வாழ்க

தமிழ்மொழியைத் தாய் என்னும் தமிழர் வாழ்கவே!

தமிழ் மொழிக்குத் தாழ்வுரைக்கும் தக்கை வீழ்கவே.

தமிழ்வாழத் தாம் வாழும் தமிழர் வாழ்கவே!

தமிழ்வீழத் தாம் தாழம் சழக்கர் வீழ்கவே.

அமிழ்து என்று தமிழ்உண்ணும் அன்பர் வாழ்கவே!

அமிழ்து இருக்க நஞ்சு உண்ணும் அடியர் வீழ்கவே!

நமது என்று தமிழ்போற்றும் நல்லர் வாழ்கவே!

நமைவிற்கப் பிறரைநத்தும் நாய்கள் வீழ்கவே.

எல்லாம் உண்டு தமிழில்என்பார் எவரும் வாழ்கவே!

செல்வம் எண்ணிப் பிறரைநத்தும் தீயர் வீழ்கவே.

பொல்லாங்கு அற்ற தமிழ்வல்ல புலவர் வாழ்கவே!

எல்லாங் கற்றும் தமிழ்அறியா இழிஞர் வீழ்கவே

வேலும் வாளும் 'தமிழ்' என்னும் வீரர் வாழ்கவே!

கூலிக்காகத் தமிழை ஏசும் கொடியர் வீழ்கவே.

மேலாகும் தமிழ் என்னும் வீரர் வாழ்கவே!

காலில் வீழ்ந்தும் தமிழ்விற்கும் கடையர் வீழ்கவே

மீட்சிக்குத் தமிழ் காக்கும் வீரர் வாழ்கவே!

ஆட்சிக்குத் தமிழ்விற்கும் அடியர் வீழ்கவே!

சூழ்ச்சிக்கும் மயங்காத தூயர் வாழ்கவே!

வீழ்ச்சிக்கு வழிகோலும் வீணர் வீழ்கவே!

( 325 )

( 330 )

( 335 )

( 340 )

தமிழைக் கெடுப்பவர் கேடு

தமிழைக் கொண்டே தமிழகம் ஆனது

தமிழகத் தமிழர் தலைவர் தாமும்

தமிழ்நாடென்று சாற்றவும் மறுத்தனர்.

தமிழால் தமிழர் ஆயினர், அன்னவர்;

தமிழை ஒழிக்கவும் தளரா துழைத்தனர்.

தமிழால் தமிழர்க்குத் தலைவர் ஆயினர்;

தமிழால் தலைமை அடைந்த அவர்கள்,

தமிழில் ஏதுளது என்று சாற்றுவர்.

தமிழைப் பேசித் தலைவர் ஆயினர்

தமிழை எழுதித் தலைவர் ஆயினர்

தமிழாற் பயன் ஏது என்று சாற்றினர்.

தமிழர் வாழத் தக்கவை ஆன

எல்லாக் கருத்தையும் இயம்பி வந்தனர்;

எல்லா உண்மையும் எடுத்துக் காட்டினர்;

அரை நூறாண்டாய் அறிவு புகட்டினர்.

அந்த அருமைத் தலைவரே இந்நாள்

ஆங்கிலம் தாயாய் அமைக என்றும்

தமிழால் உருப்படோம் என்றும் சாற்றினர்.

தமிழர் தலைவர் தமிழால் பேசியும்

தமிழால் எழுதியும் தந்த கருத்தினைத்

தமிழர் தங்குதடை இன்றி உணர்ந்தனர்;

உணர்ந்துதாம் நன்னிலை உற்றனர் என்க,

இதனைத் தலைவரும் ஏற்றுக் கொள்வர்!

அன்றி்யும், அருமைத் தமிழே அன்றி

வேறு மொழி எமக்கு வராதென விளம்புவர்.

தமிழே தலைவர் ஆக்கியது, மற்றும்

தமிழே புகழ்பெறச் செய்த தென்பதை

எவரும் மறுக்க இயலா தன்றோ?

இப்படிப் பட்ட தலைவர் என்பவர்

தமிழில் இலக்கியம் இல்லை என்றனர்.

தலைவரைச் செய்தது தமிழிலக்கியமே!

தமிழினம் படைத்தது தமிழிலக்கியமே!

தமிழைத் திறம்படப் பேசவும் எழுதவும்

வைத்தது யாது? வண்டதமிழ் இலக்கியம்!

தமிழிலக்கியம், தமிழிலக் கணத்தை

உண்டு பண்ண உதவவில்லை

என்று தமிழர் தலைவர் சாற்றுவர்;

அதே நேரத்தில் அந்தத் தலைவர்

முப்ப தாண்டாய் முளைத்த இலக்கியம்

எத்தனை ஆயிரம் என்பதை அறியார்.

( 345 )

( 350 )

( 355 )

( 360 )

( 365 )

( 370 )

( 375 )

( 380 )

தமிழன்னை விழிக்க

துயர்க்கடலில் தத்தளிக்கும்

தமிழ்த்தாயே சின்ன

துரும்பினையும் பெரும்புனையாய்த்

தாவுகின்றாய்! மோதும்

புயற்கிடையில் சுழலுகின்ற

தமிழ்த்தாயே! மண்ணிற்

புழுவினையும் விழுதென்று

பற்றுகின்றாய்! சற்றும்

வெயிற்கிடையில் துடிக்கின்றாய்

தமிழ்த்தாயே புன்னீர்

வீழச்சியை நீர் வீழ்ச்சி என்று

விரைகின்றாய்! இந்நாள்

உயர்ச்சி இலா மக்கள் சிலர்

நடத்தையினைச் சொல்வேன்

உடல் நடுங்கக் கண்ணீரால்

கடலைத்தூர்க்காதே

ஊனக்கண் இரண்டிருந்தும்

ஒருணர்வும் இல்லா

உன்மக்கள் கல்விபெற

ஒருசெப்பு காசே

தானம் செய்தானை மிகப்

போற்றுவதே நல்ல

தமிழ்மகனின் பெருங்கடமை

அல்லவா அம்மா

வானத்தின் மாசகல

வந்த நிலாப் போல்வான்;

மக்கள் மன மாசகற்றப்

பலஇலக்கம் தந்த

மானத்தான்; நின்மைந்தன்;

சிவாசிகணேசன் மேல்

மண்ணள்ளிப் போட்டிடவும்

எண்ணுகின்றோர் சில்லோர்.

அம்மனித விலங்குகளை

நீ பெற்ற துண்டா?

அறமறியா நரிகளையும்

நீ பெற்ற துண்டா?

செம்மைநிலை அறியாத

குள்ளர்களும் உன்றன்

திருவயிற்றிற் பிறந்தார்கள்

என்பது மெய்யானால்

அம்மா அம்மா அம்மா

திருத்தி அருள் செய்வாய்!

அல்லர் எனில் அடியோடு

வேர் கல்லிப் போடு!

பொய்ம்மானை மெய்என்ற

இராமனைப் போல் நீயும்

புல்லர்களை நம்பாதே

நல்லபடி வாழ்க!