இன்னா நாற்பது என்ற பதினெண் கீழ்கணக்குத் தொகுதியில் உள்ள நூலின் ஆசிரியரான ”கபிலரும்” இவரும் ஒருவரல்லர். சங்க கால புலவர் கபிலரின் காலம் கி. மு 3 ம் நூற்றாண்டின் ஆரம்ப காலமாகும்.எந்தவொரு தொழில் நுட்பமும் இல்லாத காலத்திலேயே காரிக்கோளைக் கணடறிந்தவர்கள் நம் முன்னோர்கள்.
சனிக் கோளை மைம்மீன் என்று சங்கத்தார் அழைத்துள்ளனர். மைம்மீன் என்றால் கருமையான கோள் என்று பொருள்.
‘‘மைம்மீன் புகையினும் ’’ ( புறம் 117) என்று இதனைக் கபிலர் பாடியுள்ளார்.
ஆகவே சங்கப் புலவர்கள் அக்கால அறிவு நிலையின்படி அவ்வப்போது தெரிந்த கோள்களைப் பற்றிப் பாடியுள்ளனர் என்பது தெளிவாகின்றது. அந்தப்பாடல்:
தந்தை நாடு! தொகு
பாடியவர் : கபிலர்
திணை: பொதுவியல் துறை:
"கையறுநிலை மைம் மீன் புகையினும், தூமம் தோன்றினும்,
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்,
வயல்அகம் நிறையப், புதற்பூ மலர,
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
ஆமா நெடு நிறை நன்புல் ஆரக்,
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப்,
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே;
பிள்ளை வெருகின் முள் லெயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்"
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே.
விளக்கம்:
117. தந்தை நாடு!
பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.
பாடலின் பின்னணி: பாரி இருந்த பொழுது வளமாக இருந்த பறம்பு நாடு அவன் இறந்த பிறகு வளம் குன்றியதைக் கண்டு மனம் கலங்கிய கபிலர் தன் வருத்தத்தை இப்பாடலில் கூறுகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான கருத்துகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.
அருஞ்சொற்பொருள்:
1.மை = கருநிறம்; மைம்மீன் = சனி; புகைதல் = மாறுபடுதல், சினங்கொள்ளுதல்; தூமம் = புகை (வால் நட்சத்திரம்). 2. மருங்கு = பக்கம்; வெள்ளி = சுக்கிரன். 4. அமர் = அமைதி, விருப்பம். 5. ஆமா = பால் கொடுக்கும் பசு; ஆர்தல் = புசித்தல். 6. பல்குதல் = மிகுதல். 7. பெயல் = மழை; புன்புலம் = புன்செய் நிலம். 8.வெருகு = பூனை; எயிறு = பல்; புரைய = போன்ற. 9. முகை = மலரும் பருவத்தில் உள்ள அரும்பு. 10. ஆய் = அழகு.
உரை: சனி சில இராசிகளிலிருந்தாலும், வால் நட்சத்திரம் தோன்றினாலும், வெள்ளி(சுக்கிரன்) தெற்கு நோக்கிச் சென்றாலும் உலகில் வறட்சியும் வறுமையும் மிகுந்து தீய செயல்கள் நிகழும் என்பது சோதிடர்களின் நம்பிக்கை. அத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறும் காலத்திலும், பறம்பு நாட்டில் வயல்களில் விளைவு மிகுந்திருக்கும்; புதர்களில் பூக்கள் நிரம்ப மலர்ந்திருக்கும்; வீடுகளில் கன்றுகளை ஈன்ற பசுக்கள் தங்கள் கன்றுகளை விருப்பத்துடன் நோக்கும் கண்களோடு நல்ல புல்லை நிரம்பத் தின்னும்; செம்மையான ஆட்சி நடைபெறுவதால் சான்றோர்கள் மிகுதியாக இருப்பர்; புன்செய் நிலங்களில்கூட மழை தவறாமல் பெய்யும். பூனைக்குட்டியின் முள்போன்ற பற்களை போன்றதும், பசுமையான முல்லை அரும்பு போன்றதும் ஆகிய பற்களை உடைய, அழகிய வளையல்களை அணிந்த பாரி மகளிரின் தந்தையின் நாடு அவன் ஆட்சிக் காலத்தில் வளம் குன்றாமல் இருந்தது. ஆனால், இன்று வளம் குன்றியது.
https://m.facebook.com/story.php?story_fbid=167554668528758&id=100058226779513
நன்றி மதன். கோபால்