குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

ஒரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை? நிலாந்தன். இதனை தமிழுலகம் உணருமா!

21.02.2021.....கடந்த இரு மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும்பொழுது தமிழ் அரசியலின் போக்கை மதிப்பிடக்கூடியதாக இருக்கும். அம்மூன்று நிகழ்வுகளாவன. 1.முதலாவது மூன்று தமிழ்த்தேசிய கட்சிகள் இணைந்து ஐநாவுக்கு ஒரு பொது கோரிக்கையை முன்வைத்தமை.

 

2.இரண்டாவது யாழ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டமையும் அதற்கு எதிராக ஏற்பட்ட கொந்தளிப்பின் விளைவாக சின்னத்தை மறுபடியும் கட்டுவது என்று பல்கலைக்கழக நிர்வாகம் முடிவெடுத்தமையும்.

3.மூன்றாவது தமிழ் சிவில் சமூகங்களும் மூன்று தேசிய கட்சிகளும் இணைந்து முன்னெடுத்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான ஒரு பேரணி.

இம்மூன்று நிகழ்வுகளையும் தொகுத்துப்பார்த்தால் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு வெளியே தமிழ் சிவில் சமூகங்களும் மாணவர்களும் புலம் பெயர்ந்த தமிழ்மக்களும் இணைந்து மேற்படி வெற்றிகளை சாதித்திருக்கிறார்கள் அதைச் சற்று விரிவாக பார்க்கலாம்.

முதலாவது ஐநாவுக்கு அனுப்பிய ஒரு பொதுக்கோரிக்கை. இதில் தமிழ் சிவில் சமூகங்களின் ஈடுபாடு அதிகமாக இருந்தது.மூன்று கட்சிகளையும் ஒரு இடத்துக்கு கூட்டிக்கொண்டுவந்து ஒரு பொது ஆவணத்தை தயாரிக்கும் வேலையை தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கமும் சிவில் செயற்பாட்டாளர்களும் முன்னெடுத்தனர். முடிவில் மூன்று கட்சிகளோடு இணைந்து அந்த ஆவணத்தில் சிவில் அமைப்புகள் கையெழுத்திட்டன.இது தமிழ்க்கட்சிகளின் மீது சிவில் சமூகங்கள் செல்வாக்கு செலுத்தும் ஒரு வளர்ச்சியை காட்டுகிறது.

அதேசமயம் அந்த ஆவணம் ஜெனிவாவுக்கு அனுப்பப்பட்ட கையோடு ஏற்பட்ட சர்ச்சைகள் மூன்று கட்சிகளும் தங்களுக்கிடையே ஐக்கியப்யப்படுவதற்கு இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டியிருக்கிறது என்பதையும் காட்டியது. அந்த ஆவணத்தில் யார் கையெழுத்திடுவது என்பதில் தொடங்கி யார் துரோகி யார் தியாகி என்பது வரையிலும் விவாதங்கள் தொடர்ந்தன. இந்த மூன்று கட்சிகளுமா இணைந்து அப்படி ஒரு கோரிக்கையை முன் வைத்தன என்று ஒரு வெளிப் பார்வையாளர் ஐயப்படும் அளவுக்கு அந்த மூன்று கட்சிகளும் தங்களுக்கிடையே மோசமாக மோதிக்கொண்டன. அதுமட்டுமல்ல அந்த ஆவணத்தை தயாரிப்பதில் முன்னின்று உழைத்த சிவில் செயற்பாட்டாளர்களின் மீதும் விமர்சனங்களை முன்வைத்தன.

மூன்று கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு பொதுக் கோரிக்கையை தயாரிப்பதில் உதவிய அனுசரணையாளர்கள் ஊடகங்கள் முன் தோன்றி தமது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு விரும்பவில்லை.திரைமறைவில் இருந்தார்கள். அதேசமயம் சந்திப்புக்களை ஒழுங்குபடுத்திய மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகரனையும் அதில் சம்பந்தப்பட்ட மூன்று கட்சிகளின் தலைவர்களையும் பேச விட்டுவிட்டு அந்த அனுசரணையாளர்கள் ஊடகங்கள் முன் தோன்றுவதை தவித்தார்கள்.ஆனால் இக்கட்சிகள் தங்களுக்கிடையே மோதிக்கொண்டு அனுசரணையாளர்களைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டுப் பதில் கூறுமாறு கேட்டன. எது சரி? எது பிழை? என்பதை பொதுவெளியில் தெரிவிக்குமாறு கேட்டன.முடிவில் அனுசரணையாளர்களும் ஊடகங்கள் முன் தோன்ற வேண்டியதாயிற்று. இது எதைக் காட்டுகிறது ?

ஒரு பொது ஆவணத்தை தயாரிக்கும் அளவுக்கு கட்சிகளை ஒருங்கிணைத்தமை என்பது சிவில் சமூகங்கள் பெற்ற வெற்றி. அதேசமயம் அதற்குப்பின் நிகழ்ந்த விமர்சனங்களும் உரையாடல்களும் கட்சிகள் ஒரு தற்காலிக தந்திரோபாயக் கூட்டை நோக்கிச் செல்வதில்கூட இருக்கக்கூடிய வரையறைகளை உணர்த்துகிறது. இது முதலாவது நிகழ்வு.

இரண்டாவது நிகழ்வு - யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம். அது உலகம் முழுவதிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.தமிழ்ப்பரப்பில் குறிப்பாக தமிழகத்திலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் தமிழ் உணர்வுகள் நொதிக்கத்தொடங்கின. தமிழகத்தின் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் அது தொடர்பில் கருத்து தெரிவித்தார்கள். தமிழகத்தில் இது தேர்தல் காலம் என்பதால் விடயம் மேலும் சூடாகியது. புலம்பெயர்ந்த தமிழ்ப்பரப்பில் அங்குள்ள வெள்ளைக்கார அரசியல்வாதிகள் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்தார்கள்.தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பரவலாக எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எல்லாவற்றினதும் விளைவாக ஒரு கட்டத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் இறங்கி வந்தது.அது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.அதேசமயம் சமரசத்துக்கு தயாராக இருந்த நிர்வாகத்தோடு மாணவர்கள் ஒரு உடன்பாட்டுக்கு வந்த விதம் விமர்சனத்துக்குரியது.

அகால வேளையில் நள்ளிரவில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாணவ ஒன்றியப் பிரதிநிதிகளை கைபேசியில் அழைத்து உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் வேறு யாரும் இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே திடுதிப்பென்று வந்து உண்ணாவிரதத்தை நள்ளிரவில் முடித்துவைத்தார்.அதுபோலவே அதிகாலையில் புதிய சின்னத்துக்கான அடிக்கல்லையும் நாட்டிவைத்தார்.இது விடயத்தில் அந்தப் போராட்டத்துக்குள்ள முக்கியத்துவத்தையும் ஆழமான அரசியல் அடிப்படைகளையும் அனைத்துலக பரிமாணத்தையும் மாணவர்கள் பொருத்தமான விதங்களில் விளங்கிக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. ஏனெனில் மாணவர்கள் போராட்டத்தை நள்ளிரவில் முடித்துக் கொண்ட பின்னரே தமிழகமும் புலம்பெயர் தமிழ் மக்களும் போராடத் தொடங்கினார்கள். மாணவர்கள் இங்கே போராட்டத்தை முடித்துக் கொண்டார்கள் ஆனால் அவர்களுக்காக உலகம் முழுவதும் தமிழர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள்.

வெளியுலகில் மட்டுமில்லை உள்நாட்டிலும் அடுத்த நாள் கடையடைப்பு என்று அறிவித்துவிட்டு அதிகாலையிலேயே மாணவர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டார்கள்.ஆனால் பொங்கலுக்கு மூன்று நாட்களே இருந்த நிலையில் தமது கடைகளை மூடச்சம்மதித்த வர்த்தகர்களையும் அன்றாடங் காய்ச்சிகளையும் சந்தித்து தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த மாணவர்கள் முயற்சிக்கவில்லை.அதை தங்களுடைய போராட்டமாக மட்டும் அவர்கள் குறுக்கி யோசித்தார்கள். அது தங்களுடைய கைகளை கடந்து மக்கள்மயப்பட்டு விட்டதையும் அனைத்துலக மயப்பட்டுவிட்டதையும் அவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை. இது தொடர்பில் தங்களுக்காக போராடும் மக்களையும் அமைப்புகளையும் கேட்காமலேயே நள்ளிரவில் முடிவை எடுத்தார்கள்; அதிகாலையில் அடிக்கல் நாட்டினார்கள்.

இது எதைக் காட்டுகிறது?மாணவர்கள் போராடத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அதன் அரசியல் பரிமாணங்களை விளங்கி அவர்களை வழிநடத்த ஓர் அரசியல் இயக்கம் இல்லை என்பதைத்தான். அரசியல் இயக்கம்தான் வேண்டாம் குறைந்தபட்சம் எந்த ஒரு கட்சிக்காவது மாணவர்கள் மத்தியில் அமைப்புகள் உண்டா?இதுதான் பிரச்சினை.பல்கலைக்கழக மாணவர்கள் ஓர் அமைப்பாக இருப்பதே அவர்களின் பலம்.ஆனால் அது படிப்பதற்கான அமைப்பு. போராடுவதற்கான அமைப்பு அல்ல.போராடுவதற்கான அமைப்பு மாணவர்களுக்கு வெளியே ஒரு கட்சியாகவோ அல்லது அரசியல் இயக்கமாகவோ இருக்கலாம்.அந்த இயக்கம்தான் மாணவர்களை வழி நடத்த வேண்டும்.அப்படி ஒரு மக்கள் இயக்கம் அல்லது கட்சி இல்லாத வெற்றிடத்தில்தான் மாணவர்கள் தங்கள்பாட்டில் முடிவுகளை எடுத்தார்கள். இது தமிழ் அரசியலின் இயலாமையை காட்டுகிறது.இது இரண்டாவது.

மூன்றாவது-பொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரை.

சில நாட்களுக்குள் உருவாக்கப்பட்ட ஒரு சிவில் அமைப்பு வெற்றிகரமாக ஒரு பேரணியை நடத்தி முடித்திருக்கிறது. இது எப்படிச் சாத்தியமாகியது? நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் தமிழ் மக்கள் போராடத் தயாராக இருப்பதும் போராட்டங்களுக்கு ஆதரவாக இருப்பதும்தான் அடிப்படைக் காரணம்.மக்கள் போராடத் தயார் ஆனால் தலைமை தாங்க பொருத்தமான அமைப்புக்கள் இல்லை என்பதே இங்குள்ள வெற்றிடம்.ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்திராத ஒரு வெற்றியை மக்கள் பெற்றுக் கொடுத்தார்கள்.அதன் விளைவாக ஏற்பாட்டாளர்கள் அந்தப் பேரணியின் பெயராலேயே ஒரு மக்கள் எழுச்சி இயக்கத்தை தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.அதை தனியாகப் பார்க்கலாம்.


ஆனால் பேரணிக்குப் பின் தமிழ்க்கட்சிகள் மோதிக்கொண்ட விதம் எதைக் காட்டுகிறது? பேரணியில் ஒற்றுமையாக நின்ற கட்சிகள் பேரணியின் வெற்றிக்கு உரிமை கோருவதிலும் பேரணியின் பிரகடனத்தை வியாக்கியானம் செய்வதிலும் தங்களுக்கிடையே மோதிக் கொண்டன.அதுமட்டுமல்ல குறிப்பாக சுமந்திரன் அந்த பேரணிக்கு பெருமளவுக்கு உரிமை கோரினார். யு.டிவிவிக்கு வழங்கிய பேட்டியில் அதைத் தெளிவாகச் சொல்லுகிறார்.சாணக்கியனின் தானும் இல்லையென்றால் அந்தப்பேரணி அப்படி ஒரு வெற்றியை பெற்றிருக்காது என்றும் அவர் கூறுகிறார்.அவர் இவ்வாறு பேரணியை தத்தெடுக்கக்கூடிய நிலைமைகளை அனுமானித்து ஏற்பாட்டுக்குழு திருகோணமலையை பேரணி அடைந்த பொழுது பகிரங்கமாக சில கருத்துக்களை தெரிவித்திருந்தது.அதனால் அரசியல்வாதிகளுக்கும் ஏற்பாட்டு குழுவுக்கும் இடையே வாதப் பிரதிவாதங்கள் நடந்தன.எனினும் அரசியல்வாதிகள் பேரணியை ஹைஜாக் பண்ணுவதை ஏற்பாட்டு குழுவால் முழுமையாக தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதே உண்மை.


பேரணியானது சில விடயங்களை தெளிவாக காட்டுகிறது.முதலாவது- சில நாட்களுக்குள் உருவாக்கப்பட்ட ஒரு சிவில் அமைப்பு இப்படி ஒரு பேரணியை நடத்தியது என்பது மக்கள் போராடத் தயாராக இருப்பதை காட்டுகிறது. இரண்டாவது-சிவில் அமைப்புகள் போராட முன்வந்தால் கட்சிகள் பின்னேவரும் என்பது தெளிவாகத் தெரிகிறது.மூன்றாவது-இக்கட்டுரைக்கு இதுதான் முக்கியமானது. சிவில் அமைப்புகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையே ஒரு பொருத்தமான பொறிமுறை இல்லை என்பது. அப்படி ஒரு பொருத்தமான பொறிமுறை இருந்திருந்தால் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய வகிபாகத்தை உணர்ந்து ஆளுக்காள் போட்டி போடாமல் மேலும் வெற்றிகரமாக பேரணியை முன்னெடுத்து இருந்திருக்கலாம்.


இது தமிழ் சிவில் சமூகங்கள் தமிழ் அரசியலில் முன்கை எடுக்க வேண்டிய தேவையைக் காட்டுகிறது. இன்னொருபுறம் தமிழ் சிவில் சமூகங்கள் தங்களுடைய போராட்டங்களை அரசியல் கட்சிகள் ஹைஜாக் பண்ணி விடாதபடி மேலும் தம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையை காட்டுகிறது.பேரணிக்கு பின் மோதிக் கொண்ட கட்சிகள் ஏற்பாட்டாளர்களை நோக்கி விமர்சனங்களை முன்வைத்தன.ஏற்பாட்டாளர்கள் பொதுவெளிக்கு வந்து பதில் கூற வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தின.


கட்சிகள் தங்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளை பொது வெளியில் தீர்த்துக் கொள்வது வேறு விடயம். தமிழ்ப் பரப்பில் மூன்று கட்சிகள் உண்டு என்றால் அதன் பொருள் மூன்று வேறு நிலைப்பாடுகள் உண்டு என்பதுதான். எனவே அவர்கள் தங்களுடைய முரண்பாடுகளை பொதுவெளியில் கொட்டித் தீர்க்கட்டும்.ஆனால் தங்களை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட அல்லது தங்களை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட சிவில் சமூகங்களை நோக்கி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் தங்களுக்கிடையிலான மோதல்களில் சரி பிழை கூறுமாறு சிவில் சமூகங்களை அழைப்பதும் எதைக் காட்டுகிறது?


முதலாவதாக தமிழ் கட்சிகள் ஒரு பொருத்தமான ஐக்கியத்துக்குக்குப் போகும் பக்குவத்தை இனிமேல்தான் அடைய வேண்டி இருக்கிறது என்பதனை காட்டுகிறது.இரண்டாவதாக தமிழ் கட்சிகள் விவகாரங்களை கட்சி அடிப்படையில்தான் சிந்திக்கின்றன. ஒரு தேசத்தை கட்டியெழுப்புவது என்ற அடிப்படையில் சிந்திக்கவில்லை.எல்லாருமே கட்சிகளைத்தான் கட்டி எழுப்புகிறார்கள்.தேசத்தை அல்ல.நாட்டில் கட்சி நிர்மாணிகள்தான் உண்டு. தேச நிர்மாணிகள் அல்ல.


எனவே மேற்சொன்ன மூன்று நிகழ்வுகளையும் தொகுத்து பார்த்தால்அது தமிழ் அரசியலின் இயலாமையையும் காட்டுகிறது.அதேசமயம் தமிழ் அரசியலை எந்த அடிப்படையில் பலப்படுத்த வேண்டும் என்பதையும் அது காட்டுகிறது.தமிழ் அரசியலை எந்த அடிப்படையில் பலப்படுத்துவது? கட்சிகளை ஒற்றுமைப்படுத்த வேண்டும்.ஆனால் அது ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையிலேயே இருக்கவேண்டும்.ஒவ்வொரு கட்சியும் தன்னைப் பலப்படுத்திக் கொள்வதற்கு சிவில் சமூகங்களைப் பயன்படுத்த விடக்கூடாது.சிவில் சமூகங்கள் கட்சிகளை ஒருங்கிணைப்பது என்பது கட்சிகளுக்கு வெள்ளை அடிப்பது அல்ல.அல்லது தேர்தல் தோல்விகளிலிருந்து கட்சிகள் மீண்டுவருதற்கு உதவுவதும் அல்ல.சிவில் சமூகங்களின் வேலை கட்சிகளைக் கட்டி எழுப்புவது அல்ல சமூகத்தைக் கட்டியெழுப்புவதே.


இந்த அடிப்படையில் சிந்தித்து தேசத்தை நிர்மாணிப்பது என்று முடிவெடுத்து கட்சிகள் ஏனைய அமைப்புக்கள் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தமிழகம் ஆகிய எல்லாத் தரப்புக்களையும் ஒருங்கிணைத்து சிவில் சமூகங்கள் தங்களை பலப்படுத்த வேண்டும்.கீழிருந்து மேல் நோக்கிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.உத்திகளை கற்றுக்கொள்ள வேண்டும்.அதாவது சிவில் சமூகங்களால் மட்டும் கையாளத் தக்க ஓர் அரசியல் அல்ல இது.மாறாக தமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் தேசிய மக்கள் இயக்கம் தேவை என்ற பாடத்தை கற்றுத் தந்த மூன்று நிகழ்வுகள் இவை.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.