கோவில் வழிபாடு, பூசை என்று மட்டும் பார்த்ததில் வந்த விளைவு! சுற்றியிருப்பவன் எல்லாம் நிலத்தை அபகரித்து விடுவான் என்று மனம் கெட்டதால் கொங்கிரீட் மதில் எழுப்பியதன் விளைவு!
ஊரின் தாழ் நிலம் குளமாக்கப்பட்டு முதல் மழை நிரப்பப்படும் விவசாயத்திற்காக! அதைச் சுழ வயல் இருக்கும்! மேட்டு நிலத்தில் குடியிருப்பு இருக்க வேண்டும்! குளம் நிறைந்தால் ஊரைச்சுற்றி இருக்கும் கோயில்களில் உள்ள கேணிகள் நிரம்பி நிலத்தடி நீர் நிரப்பப்படும்! இதற்கு மேல் உள்ள நீர் வாய்கால் வழியாக ஆற்றில் கலந்து கடலிற்குச் செல்ல வேண்டும்!
இப்படி இருந்தால் மக்களுக்குரிய விவசாய, குடி நீர் தேவைத் தன்னிறைவடையும்!
இன்று யாழ்ப்பாணம் வெள்ளம் என்று கவலைப்படுவதற்குரிய காரணம், யாழ் குடா நாடு என்பது மொத்தமாக நீர் நிலைகளுடன் 1,030 km² பரப்பையுடைய பிரதேசம். மேற்குப்புறமாக தெல்லிப்பழை அதிகபட்சமாக கடல் மட்ட உயரம் 10.5 m, அனேகமான இடம் சமமான நிலமாகவும் தேற்குப்புறமான சாய்வினையும் கொண்ட நிலம்.
மேலே சொன்னபடி யாழ்குடா நாட்டிற்குள் பெய்யும் மழையைத் தேக்கி வைக்கும் கட்டமைப்புகளாக 600 சிறு குட்டைக் குளங்கள் இருப்பதாக ஆசிய வங்கி சூழல் மதிப்பிட்டு அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.
அதுதவிர வெள்ளம் நிரம்பினால் கடலுக்குக் கொண்டுபோகும் பருவகால ஆறுகளாக தொண்டமானாறும், வழுக்கையாறும் இருக்கிறது. எப்படியிருப்பினும் வன்னி, மன்னார், அனுராதபுரம் பகுதிகள் போல் பெரும் குளங்கள் அமைப்பதற்குரிய நில, மண் அமைப்பினை யாழ்குடா நாடு கொண்டிருக்கவில்லை.
17 - 18ஆம் நூற்றாண்டுகளில் டச்சுக்காலத்தில் கால்வாய்கள் சிறுகுளங்களுடன் இணைக்கப்பட்டு செயற்கை தொடர்பெருக்கி (cascade system) யாழ்குடா நாட்டிற்குள் உருவாக்கப்பட்டது!
பொதுவாக வயலுக்கு நடுவில் குளம் இருக்கும்.
பெருமழையின் போது ஏந்தப்படும் மழை நீர் இந்தக்கால்வாய் வழியாக முதலில் வயலுக்குள் பாய்ந்து குளத்தை நிரப்பும்; இப்படி நிரம்பும் நீர் குளம் நிரம்பி அடுத்த குளத்தை நிரப்பி மெதுவாக கடல் நீரேரி (Lagoon) நிரம்பி கடலுக்குள் பாயும்!
1) flood buffers ஆன கேணிகள் இல்லை, மூடப்பட்டுவிட்டன, அல்லது இயற்கையான கேணிகளாக இல்லாமல் கோயில் திருவிழாவிற்கு மோட்டர் போட்டு நிரப்பும் கேணிகளாக மாற்றம் பெற்றுள்ளது. கோயில் வெள்ளத் தடுப்புச் செய்ய முடியும் என்ற இயற்கையுடன் இயைந்த அமைப்பாக இல்லாமல் மனிதன் தனக்கு வேண்டிய படி, விருப்பப்படி தீர்த்தமாடும் இடமாக்கி விட்டான் மனிதன்.
2) ஒவ்வொரு காணியும் மதிற்சுவர்களால் பிரிக்கப்படுவதால் மழை வேகமாக தான் செல்ல வேண்டிய கடலை அடையமுடியாமல் தவித்து வீட்டிற்குள் புகுந்து விடுகிறது! முன்னர் சீமைகிளுவையும், பூவரசும் வேலியாக நின்றதால் அவை வீட்டிற்குள் புகுவதில்லை!
சிறி சக்தி சுமன்.