அறிவியல் புலங்களில் உலகத்தரமும் உள்ளூர் அறிவியல் பார்வையும் கலந்த விமரிசனப் பார்வையையை உருவாக்கவேண்டும்.
சமூக அறிவியலில் தேசிய, மாநிலபார்வையைக் கொண்டிருப்பதோடு சமூகத்தின் பிளவுகளை உணர்ந்து, உள்வாங்கும் மனநிலையையும் ஏற்பு மனநிலையையும் உண்டாக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கவேண்டும்.
மொழிப்புலக்கல்வியில் வட்டாரத்தில் தொடங்கி, மாநில, தேச, சர்வதேச எல்லைகளுக்குள் நகரவேண்டுமெ்றும். அவரவர் மொழியில் கற்பதை உலகத்திற்குச் சொல்லப் பயன்படும் இன்னொரு மொழியைக் கற்பதை உறுதிசெய்யவேண்டும். மொழியின் வழியாகப் பலசமூகங்களையும் கலை இலக்கியங்களையும் அறிய விரும்புகிறவர்கள் கூடுதல் மொழிகளைக் கற்றுக்கொள்ள வாய்ப்புகளை ஆங்காங்கே உருவாக்கவேண்டும். எல்லாரும் அதிகமான மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டுமெனக் கட்டாயப்படுத்தக்கூடாது. இதற்கு மையப்படுத்தப்பட்ட ஒற்றைக் கல்வித்திட்டமும் தேர்வுமுறையும் தடையாக இருக்கும் என நம்புகிறேன். அதனால் தான் மாநிலப்பட்டியலுக்குக் கல்வியைக் கொண்டுவரவேண்டுமெனச் சொல்கிறோம்.
உலகின் பல்வேறு போக்குகளை நமது மொழிக்குள் கொண்டுவருவதற்காகப் பல்வேறு மொழிகளைக் கற்றுத்தரும் சிறப்பு நிறுவனங்களை ஏற்படுத்தலாம். அதேபோல் அறிவியல், சமூக அறிவியல் புலங்களில் உச்சநிலை அறிவைக் கொண்டுவரும் உயர்நிறுவனங்களை உருவாக்குவதும் தவிர்க்கமுடியாதது.
மாநிலத்துக்குள்ளேயேகூட வெவ்வேறு பல்கலைக் கழகங்களுக்கு இருக்கும் தன்னாட்சி உரிமைகளைப் போலப் பள்ளிக்கல்விக்கும் மாவட்ட வாரியான கல்வி வாரியங்கள் உண்டாக்க முடிந்தால் கல்வியின் தரமும் கற்றலில் வளர்ச்சியும் விரைவுபடுத்தப்படும் என்பதை மறுக்கமுடியாது