அந்த மாபெரும் தமிழ்ப் பதிப்பாளர்களுக்குப் பின்னர் கல்வெட்டுகளைத் தேடித்தேடிப் படியெடுத்துப் பதிப்பித்துத் தமிழர்களின் வரலாற்றுச் செய்திகளுக்கு வெளிச்சம் கொடுத்தனர் தொல்லியலாளர்கள்.
ஆவணங்களையெல்லாம் அச்சிட்டுப் பாதுகாத்த காலத்திற்குப் பின்னர் அவற்றை எண்ணிமப் படுத்தி என்றென்றும் வரும் தலைமுறைகளுக்கெல்லாம் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமும் கணித்தமிழ் வல்லுநர்களின் பொறுப்பும் என்பதை உணர்ந்துதான் தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் நா. கண்ணன், அதன் முதல் முயற்சிகளில் ஒன்றாக, ஓலைச்சுவடிகளை அவற்றைச் சிதைக்காமல் படியெடுக்கும் நுட்பங்களை செருமனி போன்ற மேலைநாடுகளின் துணையோடு தமிழகத்துக்குக் கொண்டுவரும் பெருமுயற்சியைத் தொடங்கினார்.
உ.வே.சா. அவர்கள் சிலப்பதிகாரத்தைப் பதிப்பித்தபோது 23 ஓலைச்சுவடிகளை ஒப்பிட்டுப் பதிப்பித்திருக்கிறார். ஆனால் இன்று உ.வே.சா. தேடித்தேடித் தொகுத்த ஓலைச்சுவடிகள் அனைத்தையும் உ.வே.சா. நூலகத்தில் கூடப் பார்க்க முடியாது. இருக்கும் சுவடிகளை ஒளிப்படியெடுத்து வலையில் பகிரும் தமிழக அரசின் திட்டத்தைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் தொடர்ந்து செய்து வருகிறது. என்றாலும் இதில் ஈடுபடத் துறைவல்லுநர்கள் பலர் தேவை. கடந்த ஒரு நூற்றாண்டில் உ.வே.சா. பதிப்புகளைக் காட்டிலும் சிறப்பான தமிழ் இலக்கியப் பதிப்புகளைக் கொண்டு வந்திருக்கும் வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறோம் என்றார் ஆய்வாளர் சரவணன்.
தமிழுக்கு முக்கியமான எல்லா ஓலைச்சுவடிகளையும், கல்வெட்டுகளையும் ஏற்கனவே கண்டுபிடித்தாயிற்று, இனிமேல் இருப்பதெல்லாம் வெறும் குப்பை என்னும் தமிழறிஞர்கள் உண்டு. இன்னும் பல்லாயிரக் கணக்கான வீடுகளில் இருக்கும் ஓலைச்சுவடிகள் பெரும்பாலும் சித்த மருத்துவம், சோதிடம், வணிகக் கணக்கு, பழங்காலத்து நிலவிற்பனைப் பதிவு போன்றவற்றை ஆவணப் படுத்தியவை. அவை தமிழிலக்கியமாக இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் அவை தமிழின் மரபைச் சேர்ந்தவை. தமிழர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியவை.
இப்படி ஓலைச்சுவடிகளைப் பற்றி அக்கறையின்றி இருந்த தமிழ்நாட்டில், திடீரென்று செர்மனியிலிருந்து முனைவர் நா. கண்ணனும், முனைவர் சுபாசினி கனகசுந்தரமும் முனைப்பெடுத்து வாருங்கள் பாதுகாப்போம் நம் முதுசொம்மை என்று தலைமை தாங்கிக் களத்தில் இறங்கினார்கள்.
ஓலைச்சுவடிகளை இன்றைய தமிழகத்தில் தேடிப் பிடிப்பது என்பது எளிதான வேலையல்ல. தமிழ் மரபு அறக்கட்டளைக்காக அப்படித் தேடித்தேடித் திரட்டியவர் அண்ணாமலை சுகுமாரன் அவர்கள். இவர்கள் திரட்டிய சுவடிகளை ஒளிப்படி எடுத்து ஆவணப்படுத்தி, ஆய்ந்து, ஆய்வு நூல்களை வெளியிடும் பொறுப்பை ஏற்றது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம். அவர்கள் திரட்டிய சுவடிகளைப் பொறுப்பாகப் பாதுகாக்கும் நுட்பமும் தஞ்சைத் தமிழ்ப்பல்கலையில் உள்ளது. இதெல்லாம் கொஞ்சம் பழைய கதை. ஆனால், அண்மைக் காலத்தில் இதைப் பற்றிய வதந்திகளை மிதக்க விட்டிருக்கிறது நேற்று மழையில் இன்றைக்கு முளைத்த காளான் போன்ற ஓர் இயக்கம். இந்த இயக்கத்தின் பரப்புரையாளர்கள் கடந்த ஓராண்டாகத் தமிழ் மரபு அறக்கட்டளையையும் குறிப்பாகத் தோடர் சுபாசினியையும் அளவுக்கு மீறிய, தமிழ்ப்பண்புக்குச் சற்றும் ஒவ்வாத முறையில் தாக்கி வருகிறார்கள்.
இந்தத் தாக்குதல்கள் அண்மையில் தொடங்கவில்லை. நான் பார்த்தமட்டில் இந்தத் தாக்குதல்கள் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்களிடமிருந்து பெருத்த அளவில் வரத்தொடங்கி ஓராண்டுக்கு மேல் இருக்கும். "திராவிடம்" என்ற சொல்லைக் கிட்டத்தட்ட வசைச்சொல்லாகவே தமிழகச் சூழலில் மாற்றியிருக்கும் அந்த இயக்கத்துக்குத் தோழர் சுபாசினி மீது கோபம் வந்ததற்குக் காரணமே தமிழ்மரபு அறக்கட்டளையின் நன்மதிப்பின் மூலம் திராவிடம் என்ற சொல்லுக்கு மீளுயிர்ப்பு கொடுத்திருக்கிறார் என்பதுதான்.
தமிழக அரசியல் குழப்பங்களுக்குள் தமிழ் மரபு அறக்கட்டளையை இழுத்துப் பழிப்பது அவர்களுக்கு மிக எளிது. மற்ற பெருங்கட்சித் தலைவர்கள் மீது அவர்கள் என்ன தாக்குதல் நடத்தினாலும் அது பட்டும் படாமலும் விலகித்தான் போகும். ஆனால் அப்படிப்பட்ட மக்கள் ஆதரவும், பெரும்புகழும், ஆள் வலிமையும், அரசியல் வல்லமையும் தமிழ் மரபு அறக்கட்டளை போன்ற அமைப்புகளுக்கு வருவது கடினம். அது தேவையும் இல்லை. நா.த.க. ஆதரவாளர்களோடு உரையாடுவது வீண்.
நூறாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் ஓலைச்சுவடிகளைச் சுபாஷினி தமிழ்நாட்டிலிருந்து எடுத்துக் கொண்டு போய் வெளிநாட்டில் விற்றதாகக் கற்பனை செய்து யு-டுயூபில் பரப்புரை செய்து கொண்டிருக்கிறார்கள். நூறாயிரம் சுவடிகளல்ல, ஒரே ஒரு ஓலையைக் கூட சுங்கக் கட்டுப்பாட்டை மீறி எடுத்துக் கொண்டு போவது இயலாத காரியம்.
தமிழகத்திலிருந்தோ, இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தோ எந்த ஓலைச்சுவடியையும் யாரும் வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்லவே முடியாது. என்னுடைய சொந்தச் சுவடிகளைக் கூட நான் அமெரிக்கப் பல்கலைக்கழங்களுக்கு எடுத்துச் செல்ல வழியில்லை என்று அரசு ஊழியர்கள் எனக்குத் தெரிவித்திருக்கிறார்கள். பர்க்கெலித் தமிழ்ப் பீடத்துக்கு என்னுடைய குடும்பத்திடம் இருந்த ஓலைச்சுவடிகளைக் கொடையளிக்க முயன்றபோது கிடைத்த அறிவுரை அது. ரோசா முத்தையா நூலகத்தைப் போல், மூல ஆவணங்களை இந்தியாவில் வைத்திருக்க வேண்டும்.
என்னிடம் இருந்த சுவடிகள் அனைத்தும் சித்த மருத்துவச் சுவடிகள். சென்னை வெள்ளத்தில் மூன்று நாட்கள் ஊறி நைந்து அழியும் நிலையில் அவை இருந்த போது எவரால் அவற்றை மீட்டெடுத்துப் பாதுகாக்க முடியும் என்று பலரிடம் பேசினேன். அப்போதைய ஒன்றிய அமைச்சர் சுசுமா சுவராசு அவர்களும் கூட ஒன்றிய அரசு மீட்டெடுக்க முடியும் என்று அறிவித்திருந்தார். இறுதியில் ரோசா முத்தையா நூலகத்தைத் தேர்ந்தெடுத்தேன். நான் அடிக்கடி அந்த நூலகத்துக்குச் சென்றிருப்பதாலும், அதன் இயக்குநர் சுந்தர் மீதுள்ள பெருமதிப்பினாலும், நான் போற்றும் அறிஞர்கள் பலர் அந்த நூலகத்தை ஆதரித்திருப்பதாலும், அந்த நூலகத்தின் தொகுப்புகள் தற்காலத் தமிழின் அறிவுக்களஞ்சியங்களுள் ஒன்று என்பதாலும் அதைத் தேர்ந்தெடுத்தேன்.
இருந்தாலும், அவ்வளவு பழைய சுவடிகளை, மூன்று நாட்கள் வெள்ளத்தில் நைந்திருந்தவற்றை மீட்டெடுக்கும் நுட்பம் அவர்களிடம் இருந்ததா என்ற ஐயம் என்னை உறுத்திக் கொண்டிருந்ததால்தான் பர்க்கெலியைப் பற்றிய எண்ணமே வந்தது. இறுதியில் அந்த நிலையில் இருக்கும் சுவடிகளைக்கூட வெளிநாட்டுக்கு அனுப்ப முடியாது என்று தெளிவாகச் சொன்னார்கள் நண்பர்கள். ரோசா முத்தையா நூலகத்திலும் நைந்த சுவடிகளை மீட்டெடுக்கும் நுட்பம் இருந்தது. இன்று அதை முழுவதும் படியெடுத்து, சுவடிகளையும் காப்பாற்றி விட்டார்கள்.
ஓலைச்சுவடிகளை மட்டுமல்ல, எந்தத் தொல்பொருளையும் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வது கடுமையான குற்றம். அத்தகைய குற்றங்களைச் செய்வதாகப் பொய் சொல்பவர்களை வழக்குமன்றத்தில்தான் தண்டிக்க முடியும்.
இத்தகைய தாக்குதல்களின் அரசியல் பின்னணி என்னவென்று தெரியாதவரைக்கும் இதைக் கட்டுப்படுத்த முடியாது. தம்மை எதிர்ப்பவர்கள் அனைவரையும் தமிழரல்லர் என்று தாக்கும் தன்மை கொண்டவர்கள் அந்தக் கட்சியினர்.
அவர்கள் தாக்குதல்கள் முற்றிலும் பொய் என்று அறமன்றத்தில் நிலைநாட்டுவது மட்டுமல்லாமல், அவர்களுக்குத் தக்க தண்டனை வழங்கும் வரைக்கும் இது நிற்கப்போவதில்லை.
தமிழ், தமிழர், தமிழ்த்தேசியம் என்ற பெயரில் அவர்கள் எழுதும் வசைச்சொற்களைப் பாருங்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பறைசாற்றிய பண்பாட்டின் வழிவந்தவர்களா இவர்கள்? இப்படி எழுதுவதுதானா தமிழ்ப்பண்பு? இதைத்தானா ஓலைச்சுவடிகளில் எழுதினார்கள்?
உண்மையில் ஓலைச்சுவடிகள் கடத்தப் பட்டிருந்தால் அதை முறைப்படி சான்றுகளோடு காட்டி, அறமன்றத்தில் நிறுவி தண்டனை வழங்க வைக்கலாமே? ஏன் இப்படி வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்? ஏனென்றால், அறமன்றத்தின் முன் கொண்டு வந்து காட்ட அவர்களிடம் எந்தச் சான்றுகளும் இல்லை. இப்படிப் பொய்களைப் பரப்பி, வசைகளை நிரப்பும் இழிவான பண்புகளை வைத்து எதை வெல்லப் போகிறார்கள் இவர்கள்?
தோழர் சுபாசினியின் பேரூக்கமும் தலைமைப் பண்பும் அவரை எண்ணற்ற வகையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் மூலம் பல தமிழறிஞர்களைத் திரட்டி அவர்களுடைய அறிவைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது. அப்படி ஒரு பெண், அதுவும் மலேசியாவில் பிறந்த தமிழ்ப்பெண், வெளிநாட்டில் வசதியாக வாழக்கூடிய ஒரு பெண் தன் நேரத்தையும் பெருமுயற்சியையும் கொண்டு இவ்வளவு செய்கிறார் என்று பொறாமைப் பட்டால் அதைக் காட்டிலும் பன்மடங்கு கூடுதலாகத் தமிழுக்குத் தொண்டு செய்யட்டுமே? அதை விடுத்து இப்படித் தனிப்பட்ட இழிவான தூற்றுதல்களில் இறங்கியிருப்பது தமிழுக்கே இழுக்கு. இந்தக் கட்சியின் பெயரில் தமிழர் என்ற பெயர் இருப்பதே தமிழுக்கும் தமிழர்களுக்கும் பேரிழுக்கு.
என்னுடைய ஆதரவு என்றும் தோழர் சுபாசினிக்கும், தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் உண்டு.
போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்
என்ற கவியரசு கண்ணதாசன் வரிகளை நினைவில் கொள்வோம். தொடர்ந்து செல்வோம்.