கிறித்துவத்திற்கு முந்திய காலக்கட்டத்தில் வணிக நோக்கிற் காகவும், கடற்கோளிலிருந்து தப்புதற்காகவும், புதிய குடியிருப்புகளைக் கண்டறியவும், தமிழர்கள் கடல் கடந்து சென்றனர். கிறித்துவத்திற்குப் பிந்தி அதே வணிக நோக்கிலும் குடியிருப்புகளைக் காக்கும் நோக்கிலும் பின்னர் மேற்கத்தியர் வல்லாண்மைப் பிடியில் சிக்கி அற்றைக் கூலிக்குத் தோட்டப் புறங்களில் வேலை செய்யும் நோக்கிலும் தமிழர் உலகமெலாம் பரவினர் எனலாம். இந்தப் புலப்பெயர்வுக்குப் பிறகு தமிழர் மிகப் பாரிய அளவு உலகெலாம் பரந்து புலம் பெயர்ந்தது ஈழ விடுதலைப் போராட்டத்திற்குப் பிறகேயாகும்.
இந்நூலில் நூலாசிரியர், உலக நாடுகளின் உருவாக்கங்கள் பற்றியும், தமிழினத்தின் மனப்போக்கு, பரவல்நிலை, இருப்பு நிலை பற்றியும் கிடைத்தற்கரிய செய்திகளைத் தம் நுண்மாண் நுழைபுல அறிவால் ஆய்ந்து விரித்துரைக்கின்றார். உலகில் நாடற்று நாதியற்று வாழும் பாரிய இனம் தமிழினமே என்பது நூலாசிரியரின் குறிப்பு. ஒருகாலத்தில் குமரிநாட்டு பெருநிலப்பரப்பில் 49 நாடுகளை ஒருமொழி வைத்தாண்டு சிறப்புடன் வாழ்ந்த இனம் தமிழினம். இக்கால் தம்மொழி, இன, பண்பாட்டுப் பெருமைகளையும் சிறப்புகளையும் படிப்படியாக மறந்து இழந்து வருகின்றது.
தமிழினத்தின் சிதைவுக்கு அயலின வல்லாண்மையும் அடிமைப்போக்கும் ஒரு கரணியம் எனலாம். மொழிக்கலப்பு மொழி அழிவுக்கு வழி வகுக்கும். மொழி அழிவு இயல்பாகவே இன அழிவுக்கு வழி வகுக்கும் “ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் அவ்வினத்தின் மொழியை அழித்து விடு” என்கிறது ஒரு மேற்கத்திய பழமொழி. தமிழினத்தை, நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் படிப்படியாகச் சிறுபான்மை இனமாக்கி அழிக்கும் நோக்கிலேயே வரைதுறையற்ற மொழிக்கலப்பு ஊடகங்களின் வாயிலாகச் செய்யப்படுகின்றது. இதனை உணர்ந்தே நூலாசிரியர் தம்
முகவுரையில்,
"வலிந்து ஆங்கிலச் சொற்களை திரை உலகிலும், ஊடகத் துறையிலும் புகுத்துவோரையும் வடமொழியைத் தேவபாடையாகப் புகுத்துவோரையும் மொழிப்பகைவராகக் கருத வேண்டும், என்கிறார்.
“தமிழ்தான் இந்தியாவின் தேசிய மொழியாக உலகின் பொது மொழியாக இருப்பதற்கு முழுத்தகுதியுடைய மொழி என்று நான் கருதுகின்றேன்” எனக் காந்தியடிகள் கூறுவதாகப் பன்மொழிப் புலவர் க. அப்பாதுரையாரின் குறிப்பினை மேற்கோளாகக் காட்டியிருப்பது நன்று.
தமிழினம் இக்கால் பல்வகையில் வலுவற்ற இனமாகிக் கிடக்கின்றது; வலிந்த இன ஒற்றுமை, தமிழரிடத்தில் அருகிக் கிடக்கின்றது, மொழிவழிப் பண்பாட்டு இனமாகிய தமிழர் மத வழிப் பண்பாட்டுக்கு முன்னுரிமை வழங்குபவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
“மொழியும் மதமும் முக்கிய பண்பாட்டு ஆதாரங்களாக இருப்பினும் மதத்தை விடச்சற்று அதிக வலிமை மொழிக்கு இருப்பதை வரலாறு காட்டுகின்றது''
என்கிறார் நூலாசிரியர்.
ஆயினும் வலிமை கொண்ட ஆரிய பிராமணிய வல்லாண்மைப் பிடிக்குள் தமிழர் சிக்கிக் கொண்டுள்ளமையால் மொழிவழிப் பண்பாட்டு வாழ்வியலைத் தமிழர் புறந்தள்ள தலைப்பட்டு விட்டனர்.
ஒரே காலக்கட்டத்தில் தமிழக தமிழரிடையேயும் வங்காள மக்களிடையேயும் எழுந்த மொழிப் போராட்டமானது வங்காள நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய விடிவைத் தந்துள்ளது. ஆனால் தமிழ் மக்கள் பன்னூற்றுக்கணக்கானோர் மொழிப்போர் ஈகம் செய்திருந்தாலும் எந்த விடிவும் ஏற்படவில்லை தமிழரிடையே: எழுந்த மொழிப் போராட்டம் நீர்த்துப் போகச் செய்யப்பெற்றது.
இவ்வாறே தமிழரின் உணர்வெழுச்சிகள் அடக்கி ஒடுக்கப்பட்டு தமிழினம் எழுந்தியங்கிச் செயற்படா வண்ணம் தொடர் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றன. தமிழரிடையே நேரடிப் பகையும் அகப்பகையும், உட்பகையும் தோன்றி இன்னல் படுத்துகின்றன.
கழிபெருங் காலத்திலேயே உலகம் முழுமையிலும் சென்று பரவிய தமிழ்ப்பெருங் குடியினர் ஆங்காங்கே தம் நாகரிகச் சுவடுகளைப் பரப்பினர் என்பது வெள்ளிடைமலை.
"உலகநாகரிகங்களுக்கெல்லாம் மூலமானவர்கள் வணிகர்களும் கடலோடிகளுமே, அத்தகையார் இன்றளவும் நம்மோடு வாழ்கிறார்கள். அவர்கள்தான் திராவிடத் தமிழர்கள்” என்கிறார் சுற்றுலா வரலாற்று ஆசிரியரான சீன் மாத்லோக்கு என்பார்.
பெருமைக்குரிய வாழ்வை வாழ்ந்து உலகத்திற்கு முன்னோடியாய் விளங்கிய தமிழர்க்குத் தன்னுரிமை கொண்ட ஆளுமை அதிகாரம் உண்டா? தன்னினந் தனையே தலையறுத்திடும் போக்கால் தமிழினம் தன் அனைத்து விழுமியங்களையும் அயலாரிடம் அடகு வைத்து விட்டு இக்கால் தலையில் கைவைத்துக் கொண்டுள்ளது.
கிடைத்தற்கரிய வாய்ப்பாய் அமைந்த தமிழீழ விடுதலைப் போராட்டச் சூழலை உலகத்தமிழினம் தம் கையாலாகாத்தனத்தால் கைநெகிழ்த்துள்ளது. தாம் வாழும் காலத்திலேயே மாற்றினங்களின் மொழி இனப் பற்றினையும் விடுதலை உரிமைப் போராட்ட வரலாறுகளையும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டே தமிழர் அடிமை மயக்கத் துயிலிலிருந்து விழிப்புப் பெறாமல் கிடக்கின்றனர்.
காலத்தால் இவ்விழிப்புணர்வும் விடிவும் தமிழர்க்கு ஏற்பட வேண்டும் என்பது நமது வேணவா.
முனைவர் அன்பரசு அவர்கள் எழுதிய இவ்வரிய நூல், தமிழர் ஒவ்வொருவரும் படித்தறிய வேண்டிய அரிய சிந்தனைகளின்
கருவூலமாகும். அனைத்துத் தரப்பார்க்கும் தமிழரின் உலகப் பரவல் தொடர்பான செய்திகளை பயனுறும் வகையில் முனைவர் அவர்கள் இந்நூலுள் குறித்துள்ளார்.
இவ்வரிய நூலை வெளியிட முன்வந்த அருந்தமிழ் நெஞ்சர், என் ஒரு தனி உழுவல் பேரன்பர் மொழிக்காவலர் ஐயா. கோ. இளவழகனார் அவர்கள் பெரிதும் போற்றுதலுக்குரியவர்.
அன்பர்கள் இந்நூலினை வாங்கிப் பொறுமையுடன் பயின்று தமிழின மீட்சிக்குத் துணை புரிய வேண்டுகின்றேன். வெல்க தமிழிய மீட்சிப்பணி
அன்புடன் திருமாவளவன்
நூல் கிடைக்குமிடம்
தமிழ்மண் பதிப்பகம்
2, சிங்கார வேலர் தெரு
தியாகராய நகர்
சென்னை.