ஆனால், ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற பிறகும் ஆங்கிலத்தை ஆட்சிமொழியாகக் கொண்டு ஆட்சி நடத்தும் இந்தியர்களுக்கு, தமிழர்களுக்கு, இந்த ஆங்கிலப் பெயர்கள் உறுத்துகின்றன. இவற்றைத் தத்தம் மொழிக்கு நெருக்கமாக மாற்ற முயல்கிறோம். Thiruvallikeni, Thoothukkudi, Cathurangappattinam, Thiruchirappalli என்ற பெயர்கள் தமிழர்கள் தமக்கும் பிற இந்தியர்களுக்கும் தமிழை ஆங்கில எழுத்துகளில் தமிழுக்கு நெருக்கமான முறையில் எழுத முயன்றதன் விளைவு. இந்தப் பெயர்களை ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களால் இயல்பாகப் பலுக்கவும் முடியாது, பலுக்கினாலும் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பிறராலும் புரிந்து கொண்டு எழுத முடியாது. இது மொழி மரபு புரிந்தவர்களுக்குத் தெரிந்ததுதான்.
பெயர்ச்சொற்களை, அதுவும் தனியாள் பெயர்கள், ஊர்ப்பெயர்கள், நாட்டுப் பெயர்களை மூல மொழியைப் போலவே எழுத வேண்டும், பேச வேண்டும் என்று சில தமிழர்கள் கருதுகிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையில் மூலமொழிகளைப் பற்றி அக்கறையற்றவர்கள். உலகில் உள்ள பிறமொழிப் பெயர்களை ஆங்கிலக் கண்ணாடி வழியாகத்தான் பார்த்துப் பழகியவர்கள். அவர்களுக்கு எந்த நாட்டின் பெயராக இருந்தாலும், எந்த மொழியில் உள்ள பெயராக இருந்தாலும், ஆங்கில எழுத்துகளில் தமிழைப் போல் படித்துத் தமிழில் எழுத முயல்பவர்கள். உண்மையில் இவர்களுக்குத் தாய்மொழியிலும் புலமை இருக்காது. ஆங்கிலத்தையும் தாய்மொழியைப் போல் அறிந்தவர்களல்லர். ஆனால் 'நான் பிறந்திருக்க வேண்டியது இங்லேண்ட்' என்று பாடிக் கொண்டு தம்மை ஆங்கிலேயராய், அமெரிக்கராய், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவராய்க் கருதித் தமிழையும் தமிங்கிலமாக்கத் துடிப்பவர்கள்.
சிரியா நாட்டின் தலைநகரின் பெயரைத் தமிழில் எப்படி எழுதுவது என்று ஒரு பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கிறது! அந்த நகரம் 3500 ஆண்டுகள் பழமையானது. அதன் பெயர் அக்கேடியன் மொழியில்