குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

தீயை அணைப்போம் மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை

தீயை அணைப்போம்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

சிவ சேனை

நான்கு வகையான எரிபொருள்கள்.

தீ பற்றினால் உடனே எரியக் கூடியன.

நான்குமே சடசடவென எரிந்து சாம்பலாகக் கூடியன.

ஒவ்வொரு எரிபொருளும் தனித்தனிக் குதமாக தனித்தனிக் களஞ்சியமாக.

நான்கு குதங்களும் ஒரே வளாகத்துள்.

குதங்களை அமைத்தவர்கள் செம்மையாக அமைக்கவில்லை.

அங்கங்கே சிறு ஒழுக்கு இருக்கும், சிறு கசிவு இருக்கும், சிறு ஊறல் இருக்கும்.

கசியும் எந்த இடத்திலோ ஒழுகும் எந்த இடத்திலோ ஊறும் எந்த இடத்திலோ சிறிய தீப்பொறி பற்றினாலே போதும். அந்தக் குதம் சாம்பலாகும். அருகிலுள்ள குதம் சேதமாகும். அதுக்கு அடுத்த குதம் அழியும். நான்காவதும் நாசமாகும்.

தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ புரிந்தோ புரியாமலோ விளங்கியோ விளங்காமலோ தீப்பொறி ஒன்றை ஒருவர் அந்தக் குதங்களின் நடுவே வீசுவராயின் வீசுபவரையும் சேர்த்து எரிபொருள் குதங்கள் வெடிக்கும். தீ நாக்குகள் சுவாலையாகும். தீப் பொறிகள் பறக்கும். அனைத்தும் எரிந்து விடும். அழிந்துவிடும்.

இலங்கைத் தீவுக்கும் எரிபொருள் குத வளாகத்துக்கும் வேறுபாடு இல்லை. ஒரே தீவுக்குள் வாழ்ந்தாலும் நான்கு சமயத்தவரும் தனித் தனித் தீவாக வாழ்கின்றனர்.

சமயத்தவர் நால்வருக்குமே மனக்குறைகள் உள. அவையே கசிவுகளாவும் ஒழுக்குகளாகவும் ஊறல்களாகவும் உள.

தீப்பெட்டி களையும் தீப்பந்தங்களை ஏந்தியவாறு நான்கு சமயங்களில் உள்ளவர்களும் அலைகின்றானர். எரிபொருள் குதங்களுக்கு அருகில் இருக்கிறோமே என்ற கவலை இல்லாமல் அலைகின்றனர்.

9. 6 .2020 செவ்வாய்க்கிழமை இரவு ஒன்பது மணியளவில் ஆரியகுளம் சந்தியை முகப்பாக கொண்ட யாழ்ப்பாணம் நாக விகாரையின் புத்தர் சிலையைக் காத்த கண்ணாடிகளை உடைத்தவர்கள் தீப் பெட்டிகளையும் தீக்குச்சிகளையும் தீப்பந்தத்தையும் எரிபொருள் குதங்கள் அருகே கொண்டு சென்றவர்கள்.

கசிவுகளும் ஒழுக்குகளும் ஊறல்களும் நிறைந்த எரிபொருள் குதங்கள் அருகே தீப்பந்தத்தை எடுத்துச் செல்லாதீர்கள் எனச் சொல்வது நான்கு சமயச் சான்றோர் கடன்.

அவரவர் சமய எல்லைகளுக்குள் அவரவர் வாழ்வதே இன்றைய காலத்தின் கட்டாயம். சமய நம்பிக்கைகளைக் குலைத்து வெறுப்பையும் வேதனையையும் உருவாக்கி வளர்க்கும் எவரின் நடவடிக்கைகளும் மீண்டும் இலங்கைத் தீவை வன்முறைக் காடாக்கும்.

அரசும் மதகுருமார்களும் பொதுமக்களும் தங்கள் சமய எல்லைகளுக்குள் வாழ்வதற்கு உரிய வழிவகைகளை எடுத்து நோக்காவிட்டால் வெறுப்பையும் வேதனையையும் வேகமாக வளர்க்கும் தீப் பந்தங்கள் ஆக எரிபொருள் குதங்கள் அருகே மாறுகின்றனர்.

சைவர்களும் புத்தர்களும் இணக்கமாக வாழவேண்டும். சைவர்களை அரவணைத்துச் செல்லப் புத்தர் முயல்வார்களாக. இப் பாரிய பொறுப்பு பெரும்பான்மை எண்ணிக்கையில் தீவில் வாழ்கின்ற புத்தருக்கு உண்டு.

யாழ்ப்பாணம் நாக விகாரைக்குச் சென்றேன். சேதம் ஏற்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தேன். இணக்கமாக வாழ்வதற்கு அனைவரும் முயல வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தேன்.