குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

அறியாப் பிழைகள்

22.05.2020...நமது அன்றாட வாழ்வில் நாம் பேசுகையிலும் எழுதுகையிலும் நம்மை அறியாமலேயே சில பிழைகள் நேர்ந்துவிடுகின்றன ! யாராவது விளக்கினால் தவிர அவை பிழையான சொற்கள் என்பது நமக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது !சாலையில் இடது புறமாகச் செல்ல வேண்டும் என்று சொல்கிறோம். இந்தச் சொற்றொடரில் என்ன பிழை இருக்கிறது ? யாராவது சொல்ல முடியுமா ? சொல்லமுடியாது; ஆனாலும் அதில் பிழை இருக்கிறது ! என்ன பிழை ?

இடம் + புறம் = இடப்புறம்; இடம் + கை = இடக்கை; இடம் + கண் = இடக்கண். “இடம்” என்றால் ஆங்கிலத்தில் LEFT ! ”இடம்” என்பது தான் சரியான சொல்லே தவிர ”இடது” என்பது பிழையான வடிவம். அதுபோன்றே “வலம்” என்பது தான் சரியான சொல்; “வலது” என்பது பிழையான வடிவம் !

ஆனாலும், “இடது” ”வலது” என்னும் சொற்கள் நம்மோடு ஒன்றிவிட்டன ! “இடது புறம்”, “இடது கை”, “இடது கண்” “”வலது சாரி”, ”வலது புறம்”, “வலது கம்யூனிசிட்” என்பன போன்ற சொற்கள் நம்மை விட்டுவிடுமா என்ன ?

“எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை” என்று சொல்லக் கேட்கிறோம். தமிழில் எந்தச் சொல்லும் “ர”கரத்தில் தொடங்காது ! அப்படி இருக்கையில் “ரொம்ப” எப்படி நம் நாவில் இடம் பிடித்து விட்டது ? “நிரம்ப” என்னும் சொல் தான் ”ரொம்ப” என்று பிழையாக உச்சரிக்கப்படுகிறது ! “ரொம்ப” என்னும் பிழையான வடிவத்திற்கு விடை கொடுத்து அனுப்புதல் தானே சரி !

“அவைகள் எப்படிக் கெட்டுப் போயின ?” என்று ஒருவர் என்னிடம் கேட்டார். அவர் பேச்சில் உள்ள பிழையை அவர் அறியவில்லை ! இதைப் படிக்கும் பலருக்கும் பிழை தெரியாமல் இருக்கலாம் ! ஒற்றைப் பொருளைக் குறிக்கும் போது “அது” என்கிறோம். பல பொருள்களைக் குறிக்கும் போது “அவை” என்கிறோம். ”அவை” என்பதே பன்மை; அப்புறம் “அவைகள்” என்பது ? பன்மைக்குப் பன்மையா ?

”அதுகள்” என்பதும் தவறு; “அவைகள்” என்பதும் தவறு ! ”அது”, “அவை” என்னும் சொற்களுடன் 2-ஆம் வேற்றுமை உருபான ”ஐ” சேரும்போது “அதை”, “அவற்றை” என்று தான் வடிவம் பெறும் ! அது + ஐ = அதை; அவை + ஐ = அவற்றை ! “அவைகள்”, “அவைகளை”, “அவைகளுக்கு”, ”அவைகளில்”, என்பன போன்ற பிழையான வடிவங்களை இனிப் புறந்தள்ளுவோம் !

நாம் பேசுகின்ற சொற்கள் பலவகைப்படும். இலக்கணத்தில் அவற்றைப் பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச் சொல், பெயரெச்சம், வினையெச்சம், வினையாலணையும் பெயர் என்றெல்லாம் வகைப்படுத்திச் சொல்வார்கள் ! அவற்றுள் ”தொழிற் பெயர்” என்பதும் ஒன்று ! தொழில், வினை இரண்டுக்கும் பொருள் ஒன்றே தான் ! ”படித்தான்” என்னும் சொல்லைப் பகுத்தால், படி + த் + த் + ஆன் என்று அமையும். இவற்றுள் “படி” என்பது ”பகுதி” எனச் சொல்லப்படும் !

“படி” என்னும் ”பகுதி”யிலிருந்து தோன்றுவது “படிப்பு” என்னும் ”தொழிற் பெயர்” ! “காண்” என்னும் “பகுதி”யிலிருந்து தோன்றுவது “காட்சி” என்னும் ”தொழிற் பெயர்” ! “வற்று” என்னும் ”பகுதி”யிலிருந்து தோன்றுவது “வற்றல்” என்னும் ”தொழிற் பெயர்” !

“சுண்டு” என்னும் “பகுதி”யிலிருந்து தோன்றுவது “சுண்டல்” என்னும் ”தொழிற் பெயர் !” “மற” என்னும் பகுதியிலிருந்து தோன்றுவது “மறதி” என்னும் ”தொழிற் பெயர்” ! ”படிப்பு”, “காட்சி”, “வற்றல்”, “சுண்டல்”, ”மறதி” என்னும் ”தொழிற் பெயர்”களைப் போல ”முயல்” என்னும் பகுதியிலிருந்து தோன்றுவது “முயற்சி” என்னும் ”தொழிற் பெயர்” !

”படித்தான்”, “படிக்கிறான்”, “படிப்பான்”, “படித்து”, “படித்த”, ”படிப்பு”, போன்ற எந்தச் சொல்லானாலும் “படி” என்னும் ”பகுதி”யில் இருந்துதான் உருவாகிறது ! “படி” என்னும் பகுதி தான் இந்தச் சொற்களின் வேர் ! இந்த வேரிலிருந்து தான் புதிய சொற்கள் உருவாகும். வேர் இன்றி எந்தச் சொல்லும் உருவாகாது ! “படிப்பு” என்பது ”வேர்” அன்று ! வேரிலிருந்து உருவான ஒரு ”கிளைச்சொல்” !

”வேர்ச் சொல்” அல்லாத ”படிப்பு” என்னும் கிளைச்சொல்லிலிருந்து புதிய சொற்கள் உருவாகாது ! யாராவது உருவாக்கினாலும் அதற்குப் பொருள் இருக்காது !

(“படிப்பு” என்னும் ”தொழிற் பெயர்”ச் சொல்லிலிருந்து படிப்புத்தான், படிப்புக்கிறான், படிப்புப்பான், படிப்புத்து, படிப்புத்த என்று சொல் உருவாக்கினால் அவற்றுக்குப் பொருள் ஏது ? பொருளற்ற குருட்டுச் சொற்களன்றோ இவை ? இவ்விளக்கமே பிற தொழிற் பெயர்ச் சொற்களுக்கும் பொருந்தும் )

“படிப்பு” என்பதைப் போன்ற பிற தொழிற் பெயர்ச் சொற்களான ”வற்றல்”, “சுண்டல்”, ”காட்சி”, “படைப்பு”, “நீச்சல்”, “இருமல்”, “துவையல்”, “உறக்கம்”, “பொரியல்”, “ஓட்டம்”, “ஆடல்”, “வாட்டம்”, ”கொலை,” ”பார்வை”,” “மறதி”, “உணர்ச்சி”, போன்ற எந்தவொரு சொல்லில் இருந்தும் புதிய சொல்லை உருவாக்க முடியாது ! யாராவது உருவாக்கினாலும் அதற்குப் பொருள் இருக்காது !

அதுபோன்றே, “முயல்” என்னும் வேரிலிருந்து ”முயன்றான்”, “முயல்கிறான்”, “முயல்வான்”, “முயன்று”, “முயன்ற”, ”முயற்சி”, எனப் பல சொற்கள் தோன்றும். ஆனால், “முயற்சி” என்னும் ”வேர்” அல்லாத ஒரு கிளையிலிருந்து எந்தச் சொற்களையும் உருவாக்க முடியாது ! உருவாக்கினாலும் அவை பிழையானவையே ! “முயற்சித்தான்”, ”முயற்சிக்கிறான்”, ”முயற்சிப்பான்”, ”முயற்சித்து”, “முயற்சித்த” போன்ற எந்தச் சொல்லும் பிழையானவையே ! ஆனால் இவை பார்வைக்குப் பிழையில்லாச் சொற்களாகத் தோன்றுவதே மதி மயக்கத்திற்கு இடம் தந்துவிட்டது !

”முயற்சி” என்னும் ”தொழிற் பெயரி”லிருந்து “முயற்சித்தான்”, ”முயற்சிக்கிறான்”, ”முயற்சிப்பான்”, ”முயற்சிக்கிறேன்”, “முயற்சிப்போம்” என்பன போன்ற பிழையான சொற்களை உருவாக்கிப் பயன்படுத்துவது தவறாகாது என்றால், ”சுண்டல்” என்னும் ”தொழிற் பெயரி”லிருந்து “சுண்டலித்தான்”, ”சுண்டலிக்கிறான்”, ”சுண்டலிப்பான்”, “சுண்டலிக்கிறேன்”, “சுண்டலிப்போம்”, போன்ற பொருளற்ற சொற்களும் உருவாகும் ! ”மறதி’ என்னும் ”தொழிற் பெயர்”ச் சொல்லிலிருந்து “மறதித்தான்”, ”மறதிக்கிறான்”, “மறதிப்பான்”, “மறதித்து”, “மறதித்த”, போன்ற பொருளற்ற சொற்களும் உருவாகும் !

இப்படித்தான், “மரணித்தாள்” என்று எழுதுகிறார்கள். இச்சொல்லைப் பகுதி, விகுதி, இடைநிலை என்று யாராவது பகுத்துக் காண்பிக்க முடியுமா ? முடியாது ! ஏனென்றால் ”மரணம்” என்பதே தமிழ்ச் சொல் அன்று ! “இறப்பு” என்பதே இதன் சரியான வடிவம். இறந்தாள் என்பதை இற + (ந்)த் + த் + ஆள் என்று பகுக்கலாம்; ஏனெனில் இதுதமிழ் சொல் ! வாதத்திற்காக, மரணித்தாள் என்பதை மரணி + த் + த் + ஆள் என்று பகுத்துக் காட்டலாம்; ஆனால் ”மரணி” என்று எந்தச் சொல்லும் தமிழில் இல்லை ! ”மர்” என்னும் வடசொல்லின் திரிபு வடிவே ”மரணம்” !

ஒரு மாணவன் சுவற்றில் பல்லி ஓடுகிறது என்று எழுதியிருந்தான். இதில் என்ன தவறு ? சரியாகத் தானே தோன்றுகிறது ! இல்லை ! தவறு தான் ! எப்படி ? சுவர் + இல் = சுவரில் என்பது தானே சரியாகும் ! எப்படியா ? சுவரில் என்பதை வேறு வகையாகப் பகுத்துப் பார்ப்போம் ! சுவ + ர் + இல் ! முதலாவதாக “ர் + இல்” என்பதைச் சேர்த்தால் என்னவாகும் ? “ர் + இல் = ரில்” சரிதானே ! அடுத்து, “ரில்” என்பதுடன் “சுவ” என்பதைச் சேருங்கள். சுவ + ரில் = சுவரில் ! இதிலிருந்து என்ன தெரிகிறது ? “சுவரில்” என்பதே சரி ! “சுவற்றில்” என்பது பிழை !

(தேவர் + இல் = தேவரில்; மூவர் + இல் =மூவரில்; தாயர் + இல் = தாயரில்: மலர் + இல் =மலரில்; துயர் + இல் = துயரில்; சிலர் + இல் = சிலரில்; சுவர் + இல் = சுவரில்)

இனிமேல், வாடகைக்கு வீடு விடும்போது “சுவரில் ஆணி அடிக்கக் கூடாது” என்று சொல்லுங்கள் ! “சுவற்றில் ஆணி அடிக்கக் கூடாது” என்று பிழையாகச் சொல்ல மாட்டீர்களே ?