குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சேவியர் தனிநாயகம் அடிகளார் அவரின் கொள்ளை என்ன? அது நிறைவேறுகின்றதா?

சேவியர் தனிநாயகம் அடிகளார்

03.05.2020 தனிநாயகம் (Rev. Xavier S. Thani Nayagam, ஆகத்து 2, 1913 - செப்டம்பர் 1, 1980) ஈழத்துத் தமிழறிஞர், கல்வியாளர். தமிழ், ஆங்கிலம் தவிர எசுப்பானியம், உரோம மொழி, போர்த்துகீசியம், பிரெஞ்சு முதலிய மொழிகளில் சரளமாக உரையாடவும் சொற்பொழிவாற்றவும் வல்லவர். [1] பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்து வெளிக் கொணர்ந்தார்.[2] தமிழ்க் கல்ச்சர் என்னும் ஆங்கிலக் காலாண்டு இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். 1964 ஆம் ஆண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலினார். இந்த நிறுவனமே தொடர்ச்சியாக எட்டு உலகளாவிய ரீதியிலான உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை நடாத்தியது. அடிகள் உயிருடன் இருந்த காலப்பகுதியில் நான்கு மாநாடுகள் நடத்தப் பெற்றன. இவர் பொதுச் செயலாளராவிருந்து முதல் மகாநாட்டினை கோலாலம்பூரில் பல உலகநாடுகளின் தமிழ் ஆய்வாளர்களை வரவழைத்து வெற்றிகரமாக நடாத்திய பெருமை இவரைச் சார்ந்ததே.

பிறப்பு

தனிநாயகம் அடிகளார் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், ஊர்காவற்துறையில் கரம்பொன் என்ற கிராமத்தில் நாகநாதன் ஹென்றி ஸ்ரனிசுலாசு, சிசிலியா இராசம்மா பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்குப் பிறந்தார். அடிகளாரது தந்தை நாகநாதன், மற்றும் அவரது தந்தைவழிப் பூட்டனார் தனிநாயக முதலி ஆகியோர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். தனிநாயக அடிகளின் இயற்பெயர் சேவியர் நிக்கலஸ் ஸ்ரனிசுலாசு என்பதாகும். பிற்காலத்தே இவர் தமிழில் கொண்ட தீராத காதலினால் உரோமன் கத்தோலிக்க குருவாக நியமிக்கப்பட்டபோது தனது பெயரினை சேவியர் எஸ் தனிநாயகம் என்ற தமிழ்ப் பெயரினையும் சேர்த்துக் கொண்டார்.

கல்வி

தொடக்கக் கல்வியை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலும், இடைநிலைக்கல்வியை 1920 முதல் 1922 வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி்யிலும் ஆங்கில வழிக் கல்வி பயின்றார். பின்னர் 1931 முதல் 1934 வரை கொழும்பில் புனித பேர்னாட் மறைப்பள்ளியில் சேர்ந்து இறையியல் கல்வி பயின்றார். இக்காலத்தில் ஆங்கிலம், இலத்தின், இத்தாலியம், பிரெஞ்சு, செருமன், எசுப்பானியம், போத்துக்கீயம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். தொடர்ந்து உருசியம், கிரேக்கம், இபுரு, சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்து ஒரு பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார்.

திருவனந்தபுரம் மறைமாவட்டத்தில் பணியாற்றிய போது 1934 தொடக்கம் 1939 வரை உரோமை நகரில் வத்திக்கான் பல்கலைக்கழகம் சென்று The Carthaginian Clergy என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்கட்டுரையினை எழுதி தெய்வ தத்துவத்தில் (Doctor of Divinity) பட்டம் பெற்றுக் கொண்டார்.[1][3][4]. இவ்வாய்வுக் கட்டுரை 1960இல் நூல் வடிவில் வெளியானது. இங்கு படிக்கும்போதே இவருக்கு பன்நாட்டு அறிஞர்களின் தொடர்புகள் கிடைத்தது.

குருத்துவக் கல்வியை முடித்து அதில் பட்டம் பெற்ற பின்பு தென்னிந்தியா திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கன்குளம் என்னும் ஊரில் உள்ள புனித திரேசா மடப் பாடசாலையில் 1940 முதல் 1945 வரை துணைத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.[1] முறையான தமிழைக் கற்கவேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இங்கேயே தோன்றியது. பண்டிதர் குருசாமி சுப்பிரமணிய ஐயர் என்பவரிடம் தமிழ் பயில ஆரம்பித்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் இலக்கியம் படித்தார். சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்து முதுமாணிப் பட்டம் பெற்றார்.

1945ஆம் ஆண்டு தமிழ் இலக்கியத்தில் பட்டப்படிப்பிற்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் இலக்கியம் படித்தார். இவரது தமிழ் அறிவின் ஆழத்தினையும் முதிர்ச்சியினையும் கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இரத்தினசாமி, மற்றும் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரும் எடுத்த முடிவினால் இளமாணிப் படிப்பு முடிக்காமலே நேரடியாக முதுகலைமாணிப் படிப்பினை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார். அங்கு சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்து முதுகலைக் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். 1947 தொடக்கம் 1949 வரை தமிழ் இலக்கிலயத்தில் சங்ககால இலக்கியச் செய்யுளில் இயற்கை என்னும் தலைப்பில் தனது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து, எம்.லிட். பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்[1]. இதில் இவர் செய்த முதல் தமிழ் ஆய்வே இவரை ஆய்வுத்துறைக்கு இட்டுச்சென்று உலகத் தமிழாய்வு வரை கொண்டு சென்றது.

ஆசிரியப் பணி

1952 தொடக்கம் 1961 வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில் 1955 முதல் 1957 வரை இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் வழியாகக் கல்வியியல் என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து கல்வியியலில் முனைவர் பட்டத்தினை இரண்டாவது முறையாகப் பெற்றுக் கொண்டார். 1961 முதல் 1968ஆம் ஆண்டுவரை மலேசியாவில் உள்ள மலாய் பல்கலைக்கழகத்தில் இந்தியத் துறையின் தலைவராகவும் தமிழ்த் துறையின் பீடாதிபதியாகவும் தமிழ் பேராசிரியாராகவும் பணியாற்றினார். இக்காலத்திலேயே பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்களும் இங்கு பேராசியரியராகக் கடமையாற்றினார். 1969 இல் மலேசியாவை விட்டு நீங்கியவுடன் பாரிசு மற்றும் நேப்பிள்ஸ் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இதழியலில்

தூத்துக்குடியில் பணியாற்றிய காலத்தில் தனிநாயகம் அடிகளார் தமிழ் இலக்கியக் கழகம் என்ற அமைப்பினை நிறுவி 1952 ஆம் ஆண்டில் Tamil Culture (தமிழ்க் கலாச்சாரம்) என்னும் ஆங்கிலக் காலாண்டு இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். இவ்விதழ் அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் வரை சென்றடைந்தது. இதன் காரணமாக தமிழ் கற்கும் வேற்று மொழி இனத்தவர்களான சுவெலபில், பிளியோசற், அந்திரோனொவ், எமனு, குய்ப்பர், நோல்டென், மார், பொக்சர், பறோ ஆகியோர் இவ்விதழில் தொடர்ந்து தமது ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தனர். 1961 இல் சென்னையில் "தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்" (Academy of Tamil Culture) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். முதல் தமிழாராச்சி மகாநாட்டினைத் தொடர்ந்து மலேசியாவிலிருந்து உலகத் தமிழ் ஆய்வு மையத்தின் சார்பாக "Journal of Tamil Studies" என்னும் ஒரு இதழுக்கான ஆசிரியராக சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றி பல சிறந்த அறிஞர்களின் கட்டுரைகளை வெளிக் கொணர்ந்தார்.

உலக நாடுகளுக்குப் பயணம்

1554 ஆம் ஆண்டில் லிசுபனில் அச்சிடப்பட்ட லூசோ-தமிழ் மறைக்கல்வி (Cartilha) நூல். 1950களில் தனிநாயகம் அடிகளாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழ் மொழியையும் அதன் இலக்கியச் செழுமையையும் உலகில் பரப்பும் நோக்கோடு சப்பான், சிலி, பிரேசில், பெரு, மெக்சிக்கோ, எக்குவடோர், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஓர் ஆண்டிலேயே இருநூறிற்கும் மேற்பட்ட பேருரைகளை நிகழ்த்தி சாதனை புரிந்தார். இவ்வாறு விரிவுரைகளை நிகழ்த்தும் போது பல நாடுகளிலும் சிறப்பு பேராசிரியராகத் தமிழ்ப்பாடமும் நடத்தியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தபோது அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்தார். இதன் பெறுபேறாக 1556 ஆம் ஆண்டில் தமிழில் அச்சிடப்பெற்ற Luso-Tamil Catechism (போர்த்துக்கீச-தமிழ் மொழியில் கிறித்தவம் சார்ந்த கேள்விக் கொத்து) "காட்டில்கா" (Cartilha) எனப் பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதனை அடிகளார் 1950 ஆம் ஆண்டில் லிஸ்பனில் கண்டெடுத்தார். அத்துடன், 1578 இல் அச்சிடப்பெற்ற தம்பிரான் வணக்கம் (Thambiran Vanakkam), 1579 இல் வெளியிடப்பட்ட "கிறித்தியானி வணக்கம்" (Kiristiani Vanakkam). முதன் முதலாக அன்ரம் டீ பெறோனீக்கா என்பவரால் தொகுக்கப்பட்ட தமிழ் - போர்த்துக்கீச மொழி அகராதி போன்றவற்றையும் கண்டெடுத்தார்.[2]. அதில் பெறொனிக்கா அகராதியினை மீள்பதிப்பு செய்து அதனை முதல் தமிழாராச்சி மகாநாட்டில் மலேசியாவில் வெளியிட்டார்.

தனிநாயகம் அடிகளார் போர்த்துகலில் கண்டறிந்த Arte da Lingua Malabar என்ற கையேடே தமிழுக்காக அயலவர் எழுதிய முதல் இலக்கணக் கையேடு ஆகும். தாளில் எழுதப்பட்ட இந்தக் கையேடு என்றீக்கு அடிகளால் 1549-இல் வழங்கிய போர்த்துக்கீசிய மொழியில் அக்காலத்துத் தமிழ் மொழியை விளக்குகிறது.[5] இந்தக் கையேட்டை ஜீன் ஹைன் (Jeanne Hein) என்ற அமெரிக்கர் 2013 ஏப்ரலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.[6]

தமிழாராய்ச்சி நிறுவன தோற்றுநர்

1963 ஆம் ஆண்டளவில் தமிழக அரசில் எம். பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த போது தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் தனிநாயகம் அடிகளார் உலக நாடுகளில் உள்ள தமிழறிஞர்கள் யாவரையும் ஒன்று திரட்டி ஒரு குழுவாக அமைத்து தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் தமிழாராய்ச்சி மகாநாட்டினை நடத்தும் யோசனையை முன்வைத்தார். இதற்கான ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையினையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. இதனை அடுத்து இம்மாநாட்டினைத் தாமே முன்னின்று உலகளவிலே நடத்த வேண்டும் என்ற உத்வேகம் கொண்டதனால் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் உருவாக வழி பிறந்தது.

உலகத் தமிழாராய்ச்சிக் கழகம்

உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் (International Association for Tamil Research, IATR) முதல் கூட்டம் தில்லியில் 1964 சனவரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தனிநாயகம் அடிகளாருடன், பேராசிரியர் கமில் சுவெலபில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வ. ஐ. சுப்பிரமணியம் ஆகியோர் அழைப்பாளர்களாக இருந்து செயற்பட்டனர். மொத்தம் 26 தமிழறிஞர்கள் சேர்ந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை 1964 சனவரி ஜனவரி மாதம் 7 ஆம் நாள் ஆரம்பித்து வைத்தனர். அந்த அமைப்பின் முதல் தலைவராக பிரான்சு நாட்டுத் தமிழறிஞர் பேராசிரியர் ஜேன் ஃபிலியோசா தலைவராகவும், ஒக்ஸ்போட் பல்கலைக்கழக பேராசிரியர் தொமஸ் பரோ, அமெரிக்க நாட்டு பேராசிரியர் எமனோ, பன்மொழிப் புலவர் பேராசிரியர் தெ. பொ. மீனாடசிசந்தரனார், மு. வரதராசன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் செக்கோசெவவாக்கியா, பிராக் பல்கலைக்கழக பேராசிரியர் கமில் சுவெலபில், தனிநாயகம் அடிகள் ஆகியோர் இணைச் செயலாளராளர்கவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

கோலாலம்பூர் மாநாடு

முதன்மைக் கட்டுரை: முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொடர்ச்சியாக எட்டு உலகத் தமிழாராய்ச்சி மகாநாடுகளை பல உலக நாடுகளில் நடத்தியது. அடிகளார் உயிருடன் இருந்த காலப்பகுதியில் நான்கு மகாநாடுகள் நடைபெற்றன. இவர் பொதுச் செயலாளராவிருந்து முதல் மகாநாட்டினை 1966, ஏப்ரல் 16 - 23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு பிரம்மாண்டமான முறையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார். 1961 ஆண்டில் அவர் மலாய் பல்கலைக் கழகத்தில் இந்தியத் துறைத் தலைவராகவும் தமிழ் பேராசிரியராகவும் பணியாற்றியது மிகவும் துணைநின்றது. அப்போது அமைச்சர்களாக இருந்த வி. தி. சம்பந்தன், வி. மாணிக்கவாசகம் ஆகியோருடன் அடிகளார் பேணிய நல்லுறவால் மலேசிய அரசின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றது. மாநாட்டிற்கு மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். தமிழ்நாட்டு முதலமைச்சர் எம். பக்தவத்சலமும் கலந்து சிறப்பித்தார். புரொயென்காவின் போர்த்துக்கீச-தமிழ் அகராதியை அங்கு மீள்பதிவாக்கம் செய்து இம்மாநாட்டில் தனிநாயகம் அடிகளார் வெளியிட்டார்[2]. சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

ஆய்வு நூல்கள்

தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களும் எழுதி வெளியிட்டார். தமிழ்த் தூது (1952) என்ற நூல் அடங்கலாக மொத்தம் 137 நூல்களை எழுதினார். அடிகாளார் எழுதிய இலக்கியக் கட்டுரைகளின் முதல் தொகுப்பு "தமிழ்த் தூது" என்பதாகும். இது 1952 ல் வெளியிடப்பட்டது. அவரது உலகப் பயணங்களின் அனுபவங்கள் "ஒரே உலகம்" என்ற தலைப்பில் 1963ஆம் ஆண்டு வெளியிட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அடிகளார் ஆற்றிய தொடர்ச் சொற்பொழிவு “திருவள்ளுவர்” என்ற மகுடமிடப்பெற்று 1967ல் நூலாக வெளிவந்தது. அடிகளார் எழுதிய 30 ஆய்வுக்கட்டுரைகள் தமிழ் காலாசரம் சஞ்சிகையில் வெளிவந்த 70 கட்டுரைகள் பலவேறு இதழ்களிலும் கருத்தரங்க மலர்களிலும் வெளிவந்துள்ளன.

தமிழைப் பற்றிய ஐரோப்பிய மொழிகளில் வெளி வந்த நூல்களைத் தொகுப்பதன் மூலம் பன்னாட்டு ரீதியில் தமிழ்மொழியை உலகின் கவனத்திற்குக் கொண்டுவர முயன்றார். "Reference Guide to Tamil Studies" என்ற 122 பக்கங்களைக் கொண்ட உசாத்துணை நூலில் 1335 நூல்களைப் பற்றிய குறிப்புக்களைச் சேர்த்து நூலாக வெளியிட்டுள்ளார். இந்நூல் இலத்தின், பிரெஞ்சு, செருமனி, உருசியம், மலாய், ஆங்கிலம் போன்ற மொழிகளில் தமிழியல் பற்றி வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் ஒரு தொகுப்பு நூலாக விளங்கிற்று. தமிழாய்வில் ஈடுபட விரும்பும் வெளிநாட்டவருக்கு ஒரு உசாத்துணை நூலாக விளங்கவே இதனை வெளியிட்டார்.

இலங்கையிலிருந்து வெளியான சைமன் காசிச்செட்டி ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் புளூட்டார்க் என்ற நூலை பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரைக் கொண்டு கூடுதல் செய்திகளைச் சேர்த்து பிழை களைந்து வெளியிட ஏற்பாடு செய்தார்.[1]

அடிகளாரால் எழுதப்பட்ட சில நூல்களின் விபரங்கள் வருமாறு:

The Carthaginian Clergy

Nature in the ancient poetry

Aspects of Tamil Humanism

Indian thought and Roman Stoicism

Educational thoughts in ancient Tamil literature


தமிழர் பண்பாடு நேற்றும் இன்றும் நாளையும்.

தமிழ்த்தூது

ஒரே உலகம்

திருவள்ளுவர்

உலக ஒழுக்கவியலில் திருக்குறள்.

மறைவு

அடிகளார் இறப்பதற்கு நான்கு மாதத்திற்கு முன்னர் ஏப்ரல் 1980 இல் தந்தை செல்வா நினைவுப் பேருரையை கொழும்பில் நிகழ்த்தினார். அதே ஆண்டு மே மாதம் வேலணையில் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் எழுதிய தமிழ்மறை விருந்துஎன்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அதன்பின், பெரிதும் உடல் நலிவுற்ற தனிநாயகம் அடிகளார், 1980 செப்டம்பர் 1 மாலை 6.30 மணியளவில் உயிர் நீத்தார்.

கௌரவம்

1981 இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவரது சிலை ஒன்றும் தமிழகக் கல்வியமைச்சர் அரங்கநாயகம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இவரின் இறப்புக்குப் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்குக் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது[7][8][9].

நெடுந்தீவு மக்கள் தமது மண்ணின் மைந்தனாகிய தனிநாயகம் அடிகளுக்கு ஆளுயர சிலை அமைத்துள்ளனர்.

1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனிநாயக அடிகளின் தமிழ்ச் சேவையினை நினைவு கூர்ந்து பேராசிரியர் சு. வித்தியானந்தன் துணைவேந்தராகப் பணியாற்றியபோது அவருக்கு இறப்புக்குப் பின்னரான கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

நூற்றாண்டு விழா

சென்னையில் 2013 பெப்ரவரி 16 அன்று தனிநாயக அடிகளாரின் நினைவை போற்றும் வகையில் நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற்றது[