குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 16 ம் திகதி செவ்வாய் கிழமை .

சித்த மருத்துவம் பரவிய வரலாறும் மறைக்கப்பட்ட வரலாறும்: ஆய்வறிஞர் இரெங்கையா முருகன்

24.04.2020.....விருதை சிவஞான யோகி அவர்களால் தமிழ் வைத்திய கழகம் என்ற பெயரில் கோவில்பட்டியில் தொடங்கி இன்றுடன் 100 ஆண்டுகள் ஆகிறது. சித்த மருத்துவச் சங்கம் மட்டுமல்லாது, முதன் முதலாக”திருவிடர் கழகம் “ , ”பத்திவிளை கழகம்” என்ற பெயர்களில் கோவில்பட்டியில் சங்கங்கள் அமைத்து, இதன் ஒரு பகுதியா கச் சித்த மருத்துவச் சாலை ஒன்றை நிறுவி, தீர்க்க முடியாத பல பெரு நோய்களைத் தமிழ்த் சித்த வைத்திய த்தின் மூலம் தீர்த்து வைத்தவர். இவரது சம காலத்தில் தமிழ் வைத்தியத்தை பேறு பெற வைத்தவர்கள் ஒரு பைசா தமிழன் இதழ் நடத்திய அயோத்திதாசப் பண்டிதர், கருணாமிர்த சாகரம் ஆபிரகாம் பண்டிதர், பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம் போன்ற பலரைக் குறிப்பிடலாம்.

திரு.வி.க. அவர்கள் விபத்தில் வலது கை முடங்கியதற்கு, பண்டிதர் அயோத்திதாசரிடம் தைல சிகிச்சை முறையில் பண்டுவம் பார்த்த முறையையும் நலம் பெற்றுத் திரும்பியதையும் வாழ்க்கைக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பண்டிதர் ஆனந்தம் மறைமலை அடிகளுக்குத் தமிழ் மருத்துவம் பார்த்தவர். பல தமிழ்ப் புலவர்களுக்கும் ஏழைகளுக்கும் இலவசமாக மருத்துவம் பார்த்தவர் ஆனந்தம் அவர்கள். இவரின் இல்லமே தென் இந்திய உரிமைகள் சங்கம் என்ற அமைப்பு உருவாக இருந்தது என்பது வரலாறு.

விருதை சிவஞான யோகியாரிடம் ஏழு ஆண்டுகள் தமிழ்ச் சித்த மருத்துவம் பயின்றவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்கள் கால் மூட்டு வாதத்தினால் அவதியுற்று நடக்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக இருந்தார். அச்சமயம் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை, வ.உ.சி.க்கு சித்த மருத்துவ முறையில் கடுகை அரைத்துக் கொதிக்க வைத்துப் போட்டால் உடனடி பலனளிக்கும் என்று கூற, வ.உ.சி. அதனை அப்படியே செய்து பூரண குணமடைந்தார்.

1927 சேலம் சுயமரியாதை மாநாட்டில் அரசியல் பெருஞ்சொல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய போது, தமிழ்ச் சித்த மருத்துவத்தைப் பரவலாக மக்களிடத்தில் பொது மருத்துவமாக்கச் செய்திடத் தீர்மானம் முன்மொழிய அறைகூவல் விடுத்தவர் வ.உ.சி.

நாம் இன்று அனைத்து நோய்களுக்கும் அலோபதி என்னும் ஆங்கில மருத்துவத்தை நாடிச் சென்று விட்டோம். அன்றே வ.உ.சி. ஆங்கில மருத்துவத்தை மறுத்து சுதேசி மருத்துவம் உள்ளூர் தமிழ்ச் சித்த மருத்துவ முறையைக் கையாள வலியுறுத்தியவர். வ.உ.சியிடம் பழகிய பல்வேறு தியாகிகள் ந. சோமயஜூலு உட்பட பல்வேறு தலைவர்கள் மூலம் சித்த மருத்துவத்தின் மீது வ.உ.சி கொண்ட அபிமானம் புரிய வருகிறது.

விருதை சிவஞான யோகி தமிழ்க் சித்த வைத்திய சங்கத்தைத் தொடங்கி மதுரை, நெல்லை, சென்னை போன்ற பெரு நகரங்களில், சித்த வைத்திய மாநாடுகள், கண்காட்சிகளைத் தொடர்ச்சியாக நடத்தி விழிப்புணர்வு ஏற்படச் செய்தவர்.

தமிழ் மருத்துவம் நாகரீகத்திலும், அறிவு நூல்களிலும் முதற் சங்க காலமாகிய பன்னீராயிரம் ஆண்டாகச் சிறப்பு பெற்றிருக்கிற இத் தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்றது. திருமூலர் ‘அவிழுமனமுமாதியறிவுந் – தமிழ் மண்டலமைந்துந் தத்துவமாமே’ என்று தமிழ் நாட்டில் அறிவு நூல்களின் தொன்மையைச் சிறப்பித்துள்ளார்.

திருமூலர், போகர், கொங்கணர், பதஞ்சலி, தேரையர், அகத்தியர், கருவூரார், புலத்தியர், சட்டைமுனி, தன்வந்திரி, யூகிமுனி முதலியோர் இயற்றிய முதனூல், வழிநூல், சார்பு நூல் ஆகிய பல்வேறு நூல்கள் தமிழ் மருத்துவத்தைப் பறை சாற்றுகின்றன.

நோய் விலக்கு முறைகளான மூலிகை வகை, உப்பு வகை, தீநீர் வகை, உபரச வகை, உடற் பொருள் வகை, பாடாண வகை, உலோக (செந்தூரம் என்ற பஸ்பம்) வகை, சத்து வகை, இரச குளிகை (மாத்திரை) வகை, யோக (மூச்சுப்பயிற்சி) வகை எனப் பத்து வகைகளாகத் திருமூலர் பிரிக்கிறார்.

மேற்கூறிய அனைத்தையும் தமிழ்ச் சித்த நூல்கள் கூறுகின்றன. மூலிகை வகை மருந்துகளைப் பிரதானமாகக் கொண்டுள்ளது சமஸ்கிருத ஆயூர்வேத மருத்துவம்.

’உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வான்

அப்பானாற் கூற்றே மருந்து. என்பார் வள்ளுவர்.

தமிழர்களின் முப்பத்திரண்டு அறங்களில் ஆதுலர்க்கு சாலை, ஓதுவார்க்கு உணவு, நோய்க்கு மருந்து என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மருத்துவச் சாலை பெரிய தருமமாக நடந்து வந்துள்ளது. இக் காலத்தில் தமிழ் மொழி பேசுவதையே கவுரவக் குறைச்சல் என்று கருதி வரும் வேளையில், தமிழ்ச் சித்த மருத்துவத்துக்கும் அபிமானம் குறைந்து வருகிறது.

தமிழ்ச் சித்த மருத்துவத்தைப் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு 21.04.1920 அன்று தமிழ் வைத்திய சங்கம் என்ற பெயரில் கோவில்பட்டியில் தலைமை அலுவலகம் விருதை சிவஞான யோகி அவர்களால் துவக்கப்படுகிறது.

இச் சங்கம் மூலமாகத் தமிழ் மருத்துவ நூல்கள் சீர்படுத்தி அச்சிடுதல், மருத்துவத்தைக் கற்பிக்கும் சாலைகளை அமைத்தல், தமிழ் மருத்துவப் பெருமைகளைப் பிரசங்கித்தல், தமிழ் மருந்துகளைக் கண்காட்சி வைத்தல், மருத்துவப் பயிற்சி அளித்துச் சான்றிதழ் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற் கொண்டார். இதன் ஒரு பகுதியாக, சென்னையில் சித்த வைத்திய பாடசாலையை நிறுவ நடவடிக்கை மேற்கொண்டார். உலக மொழிகளுக்கும் மருத்துவத்துக்கும் தாயாக விளங்குவன ’தமிழும் தமிழ் மருத்துவமும் ’ என்ற நூல் மூலம் தமிழ் மருத்துவத்தை நிலை நாட்டியுள்ளார்.

வட சென்னையில் பொதிகைச் சித்தர் மரபு என்ற பெயரில் தமிழ் அத்வைத வேதாந்த மரபு நாராயண தேசிகர் அவர்களால் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. மனதைப் பாதுகாக்க வேதாந்த நூலறிவும், உடம்பை அனுசரிக்க தமிழ்ச் சித்த மருத்துவப் பயிற்சியும், மொழிக்கு தமிழ் இலக்கிய நூலாராய்ச்சியும் இந்த மடத்தில் சீடர்களுக்குப் பயிற்றுவித்தனர். இந்த மடத்தில் பயின்றவர்கள் அன்றைய நாளில் சென்னை நகரமெங்கும் இலவசமாகச் சித்த மருத்துவச் சாலைகள் நடத்தி பொதுமக்களுக்கு தர்மத்தின் அடிப்படையில், பிணி என வந்தவர்களுக்கு மருந்துகளை வழங்கியுள்ளனர்.

சமீபத்தில் இரா. முத்துநாகு அவர்களால் எழுதப்பட்டு ஆதி பதிப்பகம் வெளியிட்டுள்ள தமிழின் மிக முக்கிய நாவல் “சுளுந்தீ’’. இந்த நாவல் 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அப்போது ஆளப்பட்ட அரசால் தமிழ்ப் பண்டுவச் சித்த மருத்துவ முறைக்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும், சித்த மருத்துவ ஓலைக்சுவடி ஏடுகள் அழிக்கப்பட்ட விதமும், சித்த வைத்தியம் தெரிந்த பண்டுவர்கள் எதிர் கொண்ட மோசமான பின்விளைவுகளையும் கனகச்சிதமாக ஆவணப்படுத்தியுள்ள விவரண நாவல்.

இந்த நாவலில் குறைந்தது ஐம்பதுக்கும் மேற்பட்ட மிக முக்கிய நோய்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் நோய் தீர்க்க வழிமுறை தந்துள்ளார். நாவலாசிரியர் சித்த மருத்துவப் பரம்பரையில் தேர்ச்சி பெற்றவர் என்பதால், பல்வேறு சித்த மருத்துவக் குறிப்புகளை அருமையாக நாவலில் கையாண்டுள்ளார். பன்றிமலை, பழனிமலை, சுருளிமலை, குன்னுவராயன்கோட்டை போன்ற ஊர்கள் சித்த மருத்துவத்துடன் கொண்டுள்ள தொடர்பை நம் கண் முன் நிறுத்துகிறார். பண்டுவ மரபுடன் முடி திருத்தும் நாவிதர்களுக்குத் தமிழ்ச் சித்த மருத்துவ மரபில் காணப்பட்ட ஆழமான அறிவையும் விவரணப் படுத்தியுள்ளார் நாவலாசிரியர்.

சித்த மருத்துவக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 வருடம் முடிவடையும் பட்சத்தில், ஏன் பண்டுவம் என்ற சித்த மருத்துவம் அழிந்தது? என்ற கேள்வி எழாமல் இருப்பது வேதனையானதே. முத்து நாகு எழுதிய நாவலிலிருந்தும் அவரிடம் பேசியதிலிருந்தும் சித்த மருத்துவத்தின் மிக முக்கியமான உப்பு சில விசயங்கள் கீழே காண்போம்.

உப்பு இதுதான் பல நோய்களுக்கான அடிப்படை மருந்து.

'கடல் ஒட்டிய தேரியில் உப்பு தானா வெளஞ்சு கிடக்கும். அத கண்டுபிடிச்சு உப்பு காய்ச்சும் நுட்பத்த அறிஞ்சு, உப்பு வியாபாரம் செய்து வந்தாங்க குறவர்கள். இதனால் உப்புக்குறவர் என அவர்களுக்குப் பெயர். இந்த உப்பிலிருந்து வெடி தயாரிக்கும் நுட்பத்தை மனித சமூகம் அறிந்தது. இதன் விளைவாக 18ஆம் நுற்றாண்டில் தடை போட்டு கடுமையாக்கினார்கள். அதே போல் வெடியுப்பு என்ற மருத்துவ உப்பு, மலைகளில் தானாக விளைந்து கிடக்கும். இதைச் சுரண்டி அள்ளி வந்து காய்ச்சி வெடியுப்பு தயாரித்தார்கள். இதன் மூலம் வெடி தயாரிக்கும் நுட்பத்தைப் பிரெஞ்சில் கண்டுபிடித்தார்கள்.

தமிழகத்தில் குறிப்பாக சேலம், மதுரை, தேனி மாவட்டத்தில் இயற்கையாக விளையும் வெடியுப்பினையும் தரங்கம்பாடி, திருப்பாதிரிப்புலியூரில் தங்கியிருந்த பிரஞ்சுக்காரர்கள் வெடியுப்பினை ஏற்றுமதி செய்தார்கள். வெடி தயாரிக்கும் நுட்பம் தமிழகத்தில் ஆண்ட நாயக்கர் அரசுக்கும் தெரியவந்ததால், வெடியுப்பு தயாரித்த குறவர்கள் மீது கைரேகைச் சட்டம் போட்டுத் தடுத்தார்கள். இதனால் வெடியுப்பு என்ற மருந்து சித்த வைத்திய மரபில் அழிந்தது.

இதன் மூலம் வெடி தயாரிக்க முடியுனெ நமது சித்தர்களுக்கும் பண்டுவர்களுக்கும் தெரிந்தாலும், அதை மருத்துவத்திற்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். பண்டுவர்கள் மூலம் வெடி தயாரிக்க மன்னர்கள் முயற்சி செய்து வெற்றி அடைந்தார்கள். குறிப்பாக, கள்ளக்குறிச்சி, வேலூரில் இந்த வெற்றி கிடைத்தது. இதனால் கந்தகம் வெடிக்காகப் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை மன்னர் ஆட்சியை எதிர்த்த மக்களும் கையாண்டார்கள். இதனை அறிந்த மன்னர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களைத் தவிர மற்ற சித்த மருத்துவர்களைச கொன்றார்கள்.

அடுத்த முக்கியமானது, செந்தூரம் என்ற பஸ்பம். இது தயாரிக்கப் பயன்படும் கந்தகம், பூதம், தாளகம், மனோசீலை, நாவி, கௌரி பாசானம், கல்நார், லிங்கம், வீரம், பூரம், கெருட பச்சை, சீனாக்காரம், வெண்காரம், துத்தம், துருசு, பச்சை துருசு, சாதிலிங்கம், குங்கிலியம், வெடியுப்பு, இந்துப்பு, வளையுப்பு, சவுட்டுப்பு, சாம்பிராணி, தொட்டிப் பாசானன், அபினி மருந்துகள். கந்தகம் : sulphur,தாளகம்: arisenit trisulphidum trisulphuret of arsenic, வீரம் : hydrargyrum subchloride, பூரம் hydrargyrum perchloride corrosive sublimate, பாதரசம் : hydrargyrum mercury quick silver கல்மதம் : asbestos, லிங்கம்: red sulphate, மனோசிலை: arsenic disulphidum bisulphuret of arsenic realgar or red orpiment, படிகாரம் : alumen alum , துருசு : cupri sulphas அல்லது cuprum sulphar cupric sulphate இவை அனைத்தும் பண்டுவ மருந்துகள். இவைகள் தீ பிடிக்கும் வெடிக்கும் தன்மை கொண்டவை என்பதை அறிந்த பிரெஞ்சு, இதில் வெடி தாயாரித்து உலகத்திற்கு ஏற்றுமதி செய்தது.

கருணாமிர்த சாகரம் என்ற இசை நூல் எழுதிய ஆப்ரகாம் பண்டிதர் தேனி மாவட்டம் சுருளி மலை அடிவாரத்தில் தங்கியிருந்த சித்திரடம் செந்தூரம் தயாரிக்கும் முறையைக் கற்று அறிந்தார்.

மேல்குறிப்பிட்ட மருந்துகள் மூலம் செய்த செந்தூரத்தை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்தார். பிரிட்டீஷ் அரசு இவரிடமே பாம்புக் கடிக்கும், வயிற்றுப்போக்கிற்கும் மருந்து வாங்கியது என்ற பிரிட்டீஷார் குறிப்பிலிருந்து சித்த மருத்துவத்தின் பிரமிப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது.

சித்த மருந்துகளில் அலோபதி மருந்துகள் தயாரிக்கும் நுட்பத்தை அறிந்த பிரெஞ்சுக்காரர்கள், தமிழகத்தில் இருந்த மருத்துவ ஓலைச்சுவடிகளைப் பணம் கொடுத்து வாங்கிச் சென்றார்கள் என்பதை ஒரிசா பாலு, பிரெஞ்சு குடியுரிமை பெற்ற முருகானந்தம் போன்ற அறிஞர்கள் வாயிலாக அறிய முடிகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள சித்த மருந்துகள் இல்லாத அலோபதி மருந்துகளே இல்லை. அப்படியானால், சித்த மருத்துவத்தை அழித்தது வியாபார நோக்கத்திற்கு மட்டுமே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியதாக உள்ளது.

பிரிட்ச் ஆட்சியில் சித்த மருத்துவத்தின் தேவையும், வெடியைக் கட்டுக்குள் வைக்கவும் தேவையிருந்ததால் சித்த மருந்து தயாரிப்பவர்கள் யார் யாரென அடையாளப்படுத்த வேண்டிய தேவைக்காகப் பதிவுச் சட்டம் கொண்டு வந்தார்கள்.

விருதை சிவஞான யோகியால் அன்று போட்ட விதை, இன்று சென்னையில் சித்த மருத்துவக் கல்லூரி, இம்ப்காப்ஸ் போன்ற மருத்துவ நிறுவனங்கள் ஆல் போல் தழைத்துள்ளது.

தமிழ் மொழியைப் பாதுகாப்பது போல், நாம் தமிழ் மருத்துவத்தையும் பாதுகாக்க முன் வர வேண்டும். இன்றைய தி.மு.க.வின் பல அடிப்படைச் சித்தாந்தங்கள் விருதை சிவஞான யோகியாருடைய தமிழகவொழுகு மக்கட் சட்டம் என்ற நூலில் இருந்து கையாண்டுள்ளார்கள் என்பது இன்றைய தலைமுறைக்குத் தெரிய வாய்ப்பில்லை. இரா.நெடுஞ்செழியன் எழுதிய தி.மு.க. வரலாறு நூலில் சிவஞான யோகியாருடைய திருவிடர் கழகம் குறித்து பதிவு செய்துள்ளார்.


இரெங்கையா முருகன்,

ஆய்வறிஞர்.

20.04.2019.