22.04.2020
இல்லை என்பேன் நானடா!-அத்
தில்லை கண்டுதானடா!
பல்லோர் பணம் பறித்துப்
பாடுபடாதார்க் களிக்கும்
கல்லில் செம்பில் தீட்சிதர்கள்
சொல்லில் செயலில் உண்மைப் பொருள்
(இல்லை என்பேன்)இல்லை உரு அப் பொருளுக்
கென்பதை மறப்பதோடா?
கல்லைச் செம்பைக் காட்டுதற்குப்
கட்டணம் பறிப்பதோடா?
(இல்லை என்பேன்)
பல்லைக் காட்டும் ஏழைமுகம்
பார்க்கவும் வெறுப்பதோடா!
பால்பருகத் தீட்சிதர் ஊர்த்
தாலியை அறுப்பதோடா?
(இல்லை என்பேன்)
காட்டும்சிலை கடவுள்எனில்
காசுவாங்கச் சொல்லுமோடா?
கையுழைப் பிலாதவரின்
பொய்நடத்தை செல்லுமோடா?
தேட்டைக்காரர் சொற்கள் பண
மூட்டை தன்னை வெல்லுமோடா?
தீட்சிதராம் தேவர்களை
வாந்திபேதி கொல்லுமோடா?
(இல்லை என்பேன்)
தொத்துநோய் அகற்றும் வன்மை
அச் சிலைக் கிருந்ததோடா?
தோள்எடுத்த அரசினரின்
சொல்லுக்கஞ்சி வாழுமோடா?
பத்துநாள் விழா நிறுத்தச்
செப்பினால் பொறுக்குமோடா?
பட்டம்பகல் கொள்ளைக்கென்றே
திட்டம் செய்த சிலையிலே உயிர்
(இல்லை என்பேன்)
தட்டான் மணிக்கோவையும் ஓர்
காத்தானி பூமாலைகளும்
சிட்டா நாதசுரங்களும் ஓர்
சேணியன் பட்டுடை அழகும்
கட்டான் தோள் கன்னான் அன்று
காய்ச்சி வார்த்த திறமையதும்
எட்டாப் பொருள் என்றுரைக்கும்
முட்டாள் தனம் தன்னில் உண்மை
(இல்லை என்பேன்)
#பாரதிதாசன் பாடல்கள்
தொகுதி 2
தேனருவி 2
கடவுள் இல்லை என்பேன் நானடா.