11 04.2020 சோழர் கால இலக்கியங்களும் இலக்கணங்களும்
தமிழகத்தைச் சோழர்கள் கி.பி.850முதல் கி.பி. 1200 வரை ஆட்சி செய்தனர். அந்தக் காலக்கட்டத்தில் காப்பியம், புராணம், இலக்கணம், அகராதிகள் எனப் பல வகைமைகளில் ஏராளமான நூல்கள் எழுந்தன. இக்காலக் கட்டம் ஒரு பொற்காலமாகக் கருதப்படுகிறது. இக்காலக் கட்டத்தில் எழுந்த முக்கியமான இலக்கிய இலக்கண நூல்களை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.காப்பிய நூல்கள்
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கு உறுதிப் பொருளும் இடம் பெற்று வரின் அது காப்பியமாகக் கருதப்படும். அறம், பொருள், இன்பம் வீடுபேறு நான்கினுள் ஏதேனும் சிறு குறைபாடு இருப்பின் அது சிறுகாப்பியமாகக் கருதப்படும்.
சோழர்கள் காலத்தில் எழுந்த பெருங்காப்பிய நூல்கள்
v சீவக சிந்தாமணி
v வளையாபதி
v குண்டலகேசி
சோழர்கள் காலத்தில் எழுந்த சிறுகாப்பிய நூல்கள்
v நீலகேசி
v யசோதர காவியம்
v நாககுமார காவியம்
v உதயணகுமார காவியம்
v சூளாமணி
சோழர்கள் காலத்தில் எழுந்த பெருங்காப்பிய நூல்கள்
சீவகசிந்தாமணி
சீவகசிந்தாமணி என்பது சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
சோழர் காலத்தில் எழுதப்பட்டது.
திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது இக்காப்பியம்.
சீவகன் என்பவனின் அகவாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.
சமய இலக்கியங்களே அதிகம் படைக்கப்பட்ட அக்காலத்தில், மக்களிடத்திலும், மன்னனிடமும்கூட இதற்கான தேவையும், ஆதரவும் இருந்ததாகத் தெரிகிறது.
வளையாபதி
தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி.
ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல்.
இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை.
இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப் பட்டுள்ளன.
இக்காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும், கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது.
குண்டலகேசி
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற குண்டலகேசி என்னும் நூல் ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும்.
‘குண்டலகேசி’ என்பதற்கு சுருண்ட கூந்தலை உடையவள் என்று பொருள்.
நாதகுத்தனார் என்பவர் இதனை எழுதினார்.
பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே இவ்வாறு கிடைத்துள்ளன.
தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பௌத்த துறவியாகி அச்சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே இக் காப்பியத்தின் கருப்பொருளாகும்.
இதற்கு மறுப்பாக எழுந்த நூல் நீலகேசி.
சோழர்கள் காலத்தில் எழுந்த ஐஞ்சிறுகாப்பிய நூல்கள்
ஐம்பெருங்காப்பியங்கள் என்ற வழக்காற்றைப் பின்பற்றி ஐஞ்சிறு காப்பியங்கள் என்று வழங்கும் நிலை ஏற்பட்டிருக்க வேண்டும். அறம், பொருள், இன்பம், வீடு நான்கினும் சில குறைபாடுடையது சிறுகாப்பியம் எனப்பட்டது. இப்பிரிவில் உள்ல நூல்கள் அனைத்தும் சமண நூல்களாகவே கருதப்பட்டிருக்கின்றன. இவற்றில் சூளாமணி தவிரப் பிற சிறுகாப்பியங்கள் இலக்கியச் செறிவுடையன அல்ல.
நீலகேசி
நீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்று.
சமண சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது.
தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது.
பௌத்த சமயத்தின் பெருமை கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது.
இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை.
இதன் வேறுபெயர் ‘நீலகேசித் தெருட்டு’.
இது 10 சருக்கங்களையும் 894 பாடல்களையும் கொண்டது.
யசோதர காவியம்
தமிழில் எழுந்த ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான யசோதர காவியம், ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும்.
இந்நூல் ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 320 பாடல்களைக் கொண்டது.
இந்து சமயத்தில் ஒரு காலத்தில் தெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுப்பது வழக்கமாக இருந்து வந்தது. எனினும் பிற்காலத்தில் இதில் சில சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதன்படி உயிர்களுக்குப் பதிலாக மாவினால் செய்த அவற்றின் உருவங்களை வைத்துப் பலி கொடுப்பது போல் பாவனை செய்யும் வழக்கம் ஏற்பட்டது. உயிர்ப்பலியைத் தீவிரமாக எதிர்த்த சமண சமயம், இப் பாவனை செய்யும் முறையும் கொலையைப் போன்றதே எனவும், இதிலும் கொலை செய்யும் எண்ணம் இருப்பதால் கொலை செய்வதால் ஏற்படும் கர்ம வினைப் பயன்கள் பாவனைக் கொலையிலும் ஏற்படும் என்றும் வலியுறுத்தியது.
நாககுமார காவியம்
நாககுமார காவியம் அல்லது நாகபஞ்சமி கதை எனப்படும் இந்நூல், தமிழில் தோன்றிய சிறு காப்பியங்களில் ஒன்றாகும்.
இதை எழுதியவர் யார் என்ற தகவல்கள் கிடைக்கவில்லை.
சிரோணிக நாட்டு மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கௌதமர் என்பார் அவனுக்குக் கதை கூறும் பாங்கில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.
170 விருத்தப்பாக்களால் ஆக்கப்பட்ட இந்நூல் ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இளமைக் காலத்தில் இன்பம் துய்ப்பதிலேயே தனது காலத்தைக் கழித்த நாககுமாரன், தனது இறுதிக் காலத்தில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வதே இக்கதையின் சாரம்.
உதயணகுமார காவியம்
உதயணகுமார காவியம் தமிழில் உள்ள சிறு காப்பியங்களுள் ஒன்றாகும்.
இது குணாட்டியர் என்பவர் எழுதிய பெருங்கதை என்னும் நூலில் வரும் உதயணன் என்பவனின் கதையைத் தழுவி எழுதப்பட்டது.
உதயணகுமார காவியம் உதயணனின் கதையை மிகச் சுருக்கமாக 367 விருத்தப்பாக்களில் தருகிறது. இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன.
இது சமண சமயத்தைச் சார்ந்த ஒரு நூல்.
பல்வேறு தமிழ் நூல்களைப் பதிப்பித்தவரான உ. வே. சாமிநாத ஐயர் இந்நூலை 1935 ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டார்.
சூளாமணி
ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி, ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும்.
ஜினசேனர் என்பவர் வடமொழியில் எழுதிய மகாபுராணம் என்னும் நூலைத் தழுவித் தமிழில் ஆக்கப்பட்டதே இந்நூல்.
இதன் ஆசிரியர் தோலாமொழித்தேவர்.
12 சருக்கங்களாகப் பிரிக்கப்பட்ட 2131 பாடல்கள் இந்நூலில் உள்ளன.
சுரமை நாட்டின் இளவரசனான திவிட்டன் என்பவன், வித்தியாதர நாட்டு இளவரசி ஒருத்தியை மணந்து கொண்டதனால் ஏற்பட்ட சிக்கல்களையும் அதனால் திவிட்டன் நிகழ்த்திய வீரச் செயல்களையும் கூறுகிறது.
இக்கதைப் பின்னணியில் சமண சமயத் தத்துவங்களை விளக்குகிறார் இதன் ஆசிரியர்.
கம்ப இராமாயணமும் பெரிய புராணமும்
இலக்கிய இலக்கண நூல்கள் தவிர்த்துச் சோழர்கள் காலத்தில் எழுந்த முக்கியமான நூல்களாகக் கம்ப இராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் குறிப்பிடலாம்.
கம்ப இராமாயணம்
வடமொழியில் வால்மீகி எழுதிய நூலைத் தழுவித் தமிழில் எழுதப்பட்டதே கம்பஇராமாயணம். கம்பர் இதை எழுதிய காரணத்தால் கம்ப இராமாயணம் என்று அழைக்கப்படுகிறது.
இந்நூல் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என 6 காண்டங்களாகவும் 113 படலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய10500 பாடல்கள் உள்ளன.
இந்நூலை எழுதிய கம்பர் தஞ்சை மாவட்டம் திருவழுந்தூரில் பிறந்தவர்.
காளி கோயில் கம்பத்தினருகே பிறந்ததால் இவர் கம்பர் என்றழைக்கப்படுகிறார் என்றும் தேவாரப் பதிகங்களில் கம்பன் என்ற பெயர் உள்ளதால் கம்பர் என்றழைக்கப்படுகிறார் என்றும் சொல்லப்படுகிறது.
மூன்றாம் குலோத்துங்கன் வாழ்ந்த காலமான 12 ஆம் நூற்றாண்டே இவரின் காலம்.
ஏர் எழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி என மேலும் பல நூல்களைக் கம்பர் எழுதியுள்ளார்.
பெரிய புராணம்
— பெரியபுராணத்தை எழுதியவர் சேக்கிழார்.(அருண்மொழித் தேவர்).
— சைவ சமயத்தைச் சார்ந்த சிவனடியார்களின் பெருமையையும் அவர்களின் வரலாற்றையும் எடுத்துக்கூறும் நூல்.
— திருத்தொண்டர் திருவந்தாதி(நம்பியாண்டர் நம்பி), திருத்தொண்டத் தொகை (சுந்தரர்), நேரில் திரட்டிய தகவல்களைக் கொண்டு பெரிய புராணத்தை சேக்கிழார் எழுதினார்.
— இந்நூலின் காலம் 12 நூற்றாண்டு.
— பெரிய புராணத்தைத் திருத்தொண்டர் புராணம் என்றும் கூறுவர்
— இந்நூல் இரண்டு காண்டங்களாகவும் 13 சருக்கங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
சோழர்கால இலக்கண நூல்கள்
சோழர்கள் காலத்தில் எழுந்த முக்கியமான இலக்கண நூல்கள் பின்வருமாறு;
v யாப்பருங்கலம்
v யாப்பருங்கலக் காரிகை
v வீரசோழியம்
v நன்னூல்
v தண்டியலங்காரம்
v புறப்பொருள் வெண்பாமாலை
யாப்பருங்கலம்
யாப்பருங்கலம் தொல்காப்பியத்துக்குப் பின்னர் செய்யுளுக்கு இலக்கணம் கூற எழுந்த நூல்களுள் சிறப்பானவையாகப் போற்றப்படும் நூல்களுள் ஒன்று.
இதை இயற்றியவர் அமிதசாகரர் என்னும் சமண முனிவர்.
யாப்பருங்கலக் காரிகை என்னும் இன்னொரு யாப்பிலக்கண நூலை எழுதியவரும் இவரே.
இந் நூலின் காலம் 11 ஆம் நூற்றாண்டு.
இந்த நூலுக்கு மிக விரிவான விருத்தியுரை எழுதப்பட்டுள்ளது. இதை எழுதியவர் அமிர்தசாகரரின் குருவாகிய குணசாகரர் என்று கூறப்படுகின்றது.
யாப்பருங்கலக் காரிகை
நமக்குக் கிடைக்கின்ற தமிழ் இலக்கண நூல்களிலே மிகவும் பழமையான நூலாகிய தொல்காப்பியத்திலேயே யாப்பிலக்கணம் கூறப்பட்டுள்ளது.
இதனால் பிற்காலத்தில் ஏற்பட்ட யாப்பிலக்கண வளர்ச்சிகளையும் உட்படுத்தி எழுந்த யாப்பிலக்கண நூல்களிலே யாப்பருங்கலக் காரிகை சிறப்பானது. இதன் ஆசிரியர் அமிர்தசாகரர்
வீரசோழியம்
வீரசோழியம் சோழர் காலத்தில் தோன்றிய ஒரு தமிழ் இலக்கண நூலாகும்.
11 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட வீரசோழன் காலத்தது.
இக் காலத்தில் அதிகரித்து வந்த சமஸ்கிருதச் செல்வாக்கினால் தமிழில் சில புதிய இலக்கிய இலக்கண மரபுகள் உருவாயின. இதன் காரணமாக ஏற்பட்ட தேவைகளுக்கு இணங்கப் புதிய இலக்கண நூல்கள் தோன்றின. இவற்றுள் வீரசோழியமும் ஒன்று.
இதை இயற்றியவர் புத்தமித்திரர்.
இந்நூலின் பெயர் வீர சோழன் என்னும் வீர ராசேந்திர சோழ மன்னனின் பெயரைத் தழுவியது எனக் கூறப்படுகிறது.
நன்னூல்
§ 13ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும்.
§ வழக்கொழிந்த இலக்கணப் பயன்பாடுகளுக்கு இணையான சமகாலப் பயன்பாடுகளை வகுத்தும், ஏற்கனவே வகுக்கப் பெற்ற பயன்பாடுகளை மேலும் விளக்கியும், எளிமைப்படுத்தியும் நன்னூலில் எழுதப்பட்டது.
§ தற்காலம் வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது.
தண்டியலங்காரம்
தமிழில் ஐவகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பவற்றில் அணி இலக்கணத்தை விளக்கி எழுந்த நூல் தண்டியலங்காரம் ஆகும்.
காவிய தரிசனம் என்னும் சமஸ்கிருத இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட இந்நூலின் ஆசிரியர் தண்டி என்பவராவார்.
புறப்பொருள் வெண்பாமாலை
தமிழ் இலக்கணம் கூறும் அகப்பொருள், புறப்பொருள் எனும் இரு பொருளிலக்கண வகைகளுள் புறப்பொருள் இலக்கணம் கூற எழுந்த நூலாகும்.
தொல்காப்பியத்துக்குப் பின் புறப்பொருள் இலக்கணம் பற்றி எழுதப்பட்ட ஒரே நூல் இதுவெனக் கூறப்படுகிறது.
இது ஐயனாரிதனார் என்பவரால் ஆக்கப்பட்டது.
இது 261 வெண்பாக்களினால் ஆன நூலாகும். இந்நூல்,
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய திணைகளின் அடிப்படையில் 12 படலங்களாகப் பகுத்து அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விலக்கிய இலக்கண நூல்கள் தவிர்த்து முருகப்பெருமானின் பெருமையைக் கூறும் கந்தபுராணம், கலிங்கத்துப் பரணி, முத்தொள்ளாயிரம் முதலான சிற்றிலக்கிய நூல்கள், திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு, உரிச்சொல் நிகண்டு, அகராதிநிகண்டு ஆகிய நிகண்டு நூல்களும் சோழர்கள் கால ஆட்சியின் போது வெளிவந்தனவே ஆகும்.