குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

தேசியக்கூட்டமைப்பு அன்றும் இன்றும்

'எய்தவர்களுடன் நல்லிணக்கம் அம்புகளுடன் பகைமுரண்' கூட்டமைப்பின் ராயதந்திரமோ? குமரன்-இன்றைய குமரிநாட்டிலிருந்து முகநுாலிற்காக...17.10.கி.ஆ2013-03.10.தி.ஆ2044-கார்த்திகேயன்.மகிந்த சம்பந்தர் மாவை டக்ளசு கூட்டு ஏனைய த.தே.கூ ஓர் அணியில். பலசெய்திகள் கீழே......கட்டுரையை வாசியுங்கள் தமது சுயநலங்களுக்காக கட்சியை உடைப்பது தமது நிலைப்பாட்டை உயர்த்துவதில் உருவானதே தே.கூ.அமைப்பு. இதனைப்போக்க இலங்கைகல்விச் சமூகத்திற்க இடங் கொடுக்காதுகூத்தாடுகிறது அரைகுறை அரசியல் கூட்டம். கல்விமான்கள் சும்மா இருக்கும் போது ஆயர்மான்களான மதமான்கள் தலை நீட்டுகின்றன. எம்.யீ. ஆர் மாதிரி ஊடகங்களுக்காக கிளிநொச்சியைவிட்டு யாழில் கூத்தாடுவோரும் அடுத்த தேர்தலை மையப்படுத்தியே!...... மாகாணசபைத் தேர்தலைத் தொடர்ந்து வடக்கில் நிலவும் சூழ்நிலைகளை அவதானிக்கும் ஒருவருக்கு எற்படக்கூடிய மன வருத்தமும் கோபமும் இந்தக் கட்டுரையில் வெளிப்படையாகத் தெரிகிறது என எவராவது கருதுவாரானல் அது இக்கட்டுரையின் வெற்றியாகும் எமது கடந்த காலங்களை உரிய பொழுதுகளில் மீள்பார்வைக்கு உட்படுத்தாமையினாலும் புறமிருந்து வந்த விமர்சனக்களை புறந்தள்ளியமையினாலும் நாம் எதிர்கொண்ட அனர்த்தங்களை அனைவரும் அறிவோம்.

இனிவரும் காலங்களையும் மௌனத்திற்கு இரையாக்கி எதிர் வரும் பல தசாப்தங்களை கறை படிந்த வரலாறுகளாக மாற்றக் கூடாது என்பதன் வெளிப்பாடாகவே இந்தப் பதிவு அமைகிறது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் மெல்ல மெல்லத் தவழ்ந்து எழுந்து தட்டுத் தடுமாறி வாழ்வை நிலைபெறச் செய்யும் பிரயத்தனங்களில் வடக்கு கிழக்கு மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மிகவும் பலவீனப்பட்ட நிலையில் உள்ள தமிழ் மக்களுக்கு ஒப்பீட்டளவில் இலங்கையின் பாராளுமன்ற அரசியலுக்குள் தேவைப்படுகிற ஊன்றுகோலாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இருக்கிறது. இவ்வூன்றுகோலும் உடைந்து சின்னாபின்னமாகப் போகுமானால் தமிழர்கள் முற்று முழுதான அரசியல் அனாதைகளாகி விடுவார்கள்.

மகாணசபைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தோன்றிய ஆசன ஒதுக்கீடு பற்றிய இழுபறி அதன் பின்னர் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தோன்றிய பதவிகளுக்கான போட்டி எனத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குள் ஒற்றுமையின்மையின் வெளிப்பாடுகள் அண்மைக்காலமாக மிக வெளிப்படையாகத் தெரிகின்றன. இந்த ஒற்றுமையின்மை ஒன்றும் புதிதாகத் தோன்றியதல்ல. முன்னரே இருந்ததுதான்.

முதலமைச்சர் நியமனத்தில் தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராயாவும் தலைவர் இரா. சம்பந்தனும் மோதிக்கொண்டனர். இறுதியில் சம்பந்தன் வென்றார். சம்பந்தர் தான் நினைத்தபடி சீ.வீக்னேசுவரனைக் கொண்டுவந்தார். மாவையும் பெருந்தன்மையுடன் விலகிக் கொண்டார். இதன்போது தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணக் கிளையும் சீ.வி.கே சிவஞானமும் சம்பந்தருக்கு எதிராகவும் தமிழரசுக் கட்சிக்கு எதிராகவும் அறிக்கை விட்டதுடன் கடுமையாக விமர்சனமும் செய்தார்கள். இந்த முரண்பாடு பதவிப் போட்டியாக, தமிழரசுக் கட்சிக்குள்ளான குத்து வெட்டாக வர்ணிக்கப்படவில்லை. சீ.வீ.கே சிவஞானம் அவர்கள் தன்னை முதன்மைப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எத்தனை தடவைகள் முரண்பட்டார்? எத்தனை அறிக்கைகளை வெளியிட்டார்? மக்களின் நலன்களோடு எந்தவகையிலும் சம்பந்தப்படாத அவரது செயற்பாட்டை தமிழரசுக் கட்சியினர் எந்த வகைக்குள் அடக்கினர்?

ஆனால் சுரேசு பிரேமச்சந்திரன் தனது சகோதரருக்கு அமைச்சுப் பொறுப்பு கேட்டதும், சித்தார்த்தன் மற்றும் சிவாயிலிங்கம் உள்ளிட்டவர்கள் தமக்கு அமைச்சுப் பதவிகளைக் கோரி அவை கிடைக்காததனால் சத்தியப்பிரமாணத்திற்கு செல்லாமல் விட்டதும் வேறு விதமாகப் பார்க்கப்படுகிறது.

இங்கே இன்னுமொரு விடயத்தையும் நான் குறிப்பிட்டேயாகவேண்டும் சுரேசு பிறேமச்சந்திரன் தனது சகோதரருக்கு அமைச்சுப் பொறுப்பு கேட்டார் அது கடுமையான விமர்சனங்களைத் தோற்றுவித்திருந்தது. ஆனால் அது நிறைவேறாத போதும் அவரது கட்சியைச் சேர்ந்த ஐங்கரநேசனுக்கு அப்பதவி கொடுக்கப்பட்ட போது அதனை இட்டுச் சந்தோசமடைய முடியாமல் போனமைக்கு மக்கள் நலன் சார்ந்த காரணங்கள் ஏதும் இருப்பின் அதனை அவர் தமிழ் மக்களுக்கு புலப்படுத்துவது நல்லது. அப்போதுதான் தனிப்பட்ட நலன்களுக்கும் மக்கள் நலன்களுக்குமான வேறுபாட்டை மக்களால் நன்கு புரிந்துகொள்ள முடியும்.

இங்கே தமிழரசுக் கட்சி விடும் தவறுகள் ஒருவிதமாகவும் தமிழ்க் கூட்டமைப்புள் இருக்கும் ஏனைய கட்சிகள் செய்யும் தவறுகள் இன்னொரு விதமாகவும் வியாக்கியானம் செய்யப்படும் தன்மையைப் பார்க்கிறோம். இந்த இரட்டை அளவுகோல் முறைமை ஆரோக்கியமானதா? சரியானதா?

நான் மேலே சொன்ன இரட்டை அளவுகோல் முறைமையின் வழி தமிழ்தேசியக் கூட்டமைப்புள் உள்ள முன்னாள் போராளிக் குழுக்கள் 'ஒட்டுக் குழுக்கள்' என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதன் வழி சித்தார்தனும் சுரேசும் விலக்கலுக்கு உள்ளாகின்றனர். இங்கும் முரணணி ஒன்றுள்ளது. சுகு என்ற சிறீதரன் தலைமையிலான பத்மநாபா ஈபீஆர்எல்எவ் அணியினை கூட்டமைப்புக்குள் இணைக்க சுரேசு அவர்களே கடும் எதிர்ப்பை வெளியிட்டார். குறிப்பிடத்தக்க விடையம் என்னவென்றால் ஆனந்த சங்கரி அவர்கள் மகாணசபைத் தேர்தலில் தனக்கு ஒதுக்கப்படும் ஆசனங்களில் ஒன்றைச் சுகு தரப்பிற்கு வழங்க முன்வந்தும் கூட சுரேசு அதனை ஏற்க மறுத்ததன் விளைவு பெண்ணியப் போராளியும் சுகுவின் மனைவியுமான ஞானாசக்தி உண்மையான அரச ஆதரவுக்குழுவான ஈ.பீ.டீ.பீ பக்கம் சென்று விட்டார். கூட்டமைப்பு மறுத்தால் ஈ.பி.டி.பி பக்கம் கட்டாயம் செல்லவேண்டுமா என்பது இன்னுமொரு முக்கியமான கேள்வி. (மட்டக்களப்பு துரைரட்ணத்தை உதிரியாக இணைத்துக் கொண்ட சுரேசு சுகுவைக் கட்சியாக இணைக்க முடியாது எனக் கூறியதாகக் கூறப்படுகிறது.) சரேசு பிறேமச்சந்திரனின் இந்த நிலைப்பாட்டுக்கும் மக்கள் நலன் சார்ந்த விளக்கங்கள் உள்ளனவா?

அடுத்து புளொட் அமைப்பின் சித்தார்தனும் அமைச்சர் பதவிக்குப் பதிலாக சபைமுதல்வர் பதவியைக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பொறுப்பேற்கச் சொன்ன போது அதனை மக்களின் நலன் கருதி பொறுப்பேற்றுக் கொண்டு கட்சியுள் தொடர்ந்தும் தமது அரசியல் நிலப்பாடுகளின் அடிப்படையில் போராடி இருக்க வேண்டும். தன் தொடர்பாகவும் தனது கட்சிதொடர்பாகவும் பலருக்கு நிலவும் அச்சத்தை போக்க தனது முன்னுதாரணத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

திம்புப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதில் இருந்து கள அனுபவங்களோடு நீண்ட அரசியல் அனுபவங்களையும் வைத்திருக்கும் சித்தார்த்தன் அவர்கள் இந்தப் பதவிச் சச்சரவுகளுக்கு அப்பால் சென்று சிந்திக்க வேண்டிய காலம் இது....

ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தனது கட்சிக்குள்ளேயே ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாமல் தலைமைத்துவத்தைக் கைவிடும் நிலைவரை சென்று அமைதி கண்டார். அவரும் ஆரம்பத்தில் தனது மைத்துனருக்கு அமைச்சுப்பதவி கேட்டிருந்தார். ஆயினும் ஒருவாறு பிரச்சனைகளைச் சமாளித்து முன்னாள் நீதியரசரின் பாராட்டைப் பெற்று ஒட்டுக்குழு என்ற குற்றச்சாட்டில் இருந்து மயிரிழையில் தப்பித்துக்கொண்டார்.

சிவாயிலிங்கம் வழமைபோலவே தனது குழப்பகரமான செயற்பாடுகளால் சர்ச்சைக்குரிய அரசியல்வாதி என்ற தனது பெயரைக் காப்பாற்றுவதில் மிகக்கவனமாக இருக்கிறார். அவரை விட்டுவிடுவோம்.

இன்னுமொரு உதாரணத்தையும் பார்ப்போம். விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் ஆரம்பத்தில் ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பதவியில் இருந்தார். அவரை அப்பதவியில் இருந்து அகற்றும் நோக்குடன் தமிழரசுக் கட்சியின் பல கனவான்கள் புலிகளின் தலமைக்கு ஆனந்த சங்கரியைப்பற்றிக் கோள் சொல்லித் திரிந்தனர். (இது இன்று எஞ்சியிருக்கும் சில புலிகளின் முக்கியஸ்த்தர்களுக்கும் தெரியும்.) இக் கோள் சொல்லல்களால் ஏற்பட்ட முரண்பாடே ஆனந்தசங்கரியைப் புலிகளிற்கு எதிரான நிலைக்கு தள்ளியது. ஆனந்தசங்கரி இன்று துரோகிப்பட்டத்தை சுமப்பதற்கு உள்ளக முரண்பாடுகளே முதலடியை எடுத்துக் கொடுத்தன. இன்றைக்கு ஒட்டுக்குழுக்கள் எனச் சொல்லப்படுகிற அமைப்புக்களும் இனவாத அரசாங்கத்தின் நிழலில் தஞ்சமடைந்ததற்கு அடிப்படையான காரணமும் உள்ளக முரண்பாடுகள் சரியான முறையில் கையாளப்படாமையே.

எவ்வாறெனினும் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர்விடுதலைக் கூட்டணியும், தர்மலிங்கம் சித்தார்தன் தலைமையிலான புளொட்டும் இணைக்கப்பட்டன. இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன், சிவஞானம் சிறீதரன் மற்றும் இவர்களுடன் இணைந்து செயற்படும் தீவிர தமிழ்த் தேசிய ஆதரவாளர்களும் உள்ளூர அதிருப்தி கொண்டிருந்தனர். ஆனால் கூட்டமைப்புத் தலைமையிடம் இவர்கள் வெளிப்படையாகவும், உறுதியாகவும் தமது எதிர்ப்பைக் காட்டவில்லை. மாறாக பா. அரியநேந்திரனும், சிவஞானம் சிறீதரனும் அப்பொழுது சிறு சிறு சலசலப்புகளோடு மௌனித்திருந்து விட்டு தேர்தல் காலத்தில் கிளிநொச்சியில் ஆனந்தசங்கரிக்கு எதிராகவும், முல்லைத் தீவில் புளொட் அமைப்பிற்கும் எதிராகவும் சிறீதரன் அணியினருடன் இணைந்து தேர்தல்பிரச்சாரத்தை மேற்கொண்டதோடு கடுமையான சேறடித்தலிலும் ஈடுபட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இணைத்துவிட்டு தமது வேட்பாளர்களுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்ட போது அதனை கூட்டமைப்பின் தலைமை கண்டும் காணாது இருந்தது.

இவ்விடத்தில் சற்றுப் பின்னோக்கிப் பார்ப்போம். புலிகளின் காலத்தில் அவர்களுக்கு எதிரணியில் அல்லது அரசாங்கத்துடன் இணைந்து இயங்கியவர்களை ஒட்டுக்குழுக்கள் என்று ஊடகங்கள் விளிக்கின்றன. தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தராக தன்னை அடையாளப்படுத்தும் பா. அரியநேந்திரன் இத்தகைய விபரிப்புக்களை தமது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் கொள்ளுகிறார். பா அரியநேந்திரன் அவர்கள் கூட்டமைப்பில் இருந்த போதுதான் சுரேஸ் பிறேமச்சந்திரன் தலைமையில் இயங்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும், செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில் இயங்கிய ரெலொ அமைப்பும் விடுதலைப் புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அங்கீகரிக்கப்பட்டு நாடாளுமன்றிற்கும் சென்றார்கள். அதன் பின்பு இவ்விரு கட்சிகளும் ஒரு போதும் அரசாங்க சார்பு நிலைப்பாட்டை எடுத்திருக்கவில்லை. ஆனால் இப்போது இந்தக் கட்சிகளில் ஒன்றை வெளிப்படையாகவே ஒட்டுக் குழுவாக விமர்சிக்கும் பா. அரியநேந்திரனும், மறைமுகமாக விமர்சிக்கும் சிவஞானம் சிறிதரனும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் அன்றைக்கே இவர்களைச் சேர்க்க வேண்டாம் எனச் சொல்லத் துணியவில்லை. இன்றைக்கும் துணியவில்லை. காரணம் என்னவாக இருக்கும்..?

உண்மையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவில் அனைவரும் இணைந்து ஒரே அணியில் நின்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தால் அரசாங்கக் கட்சி ஆசனமொன்றைப் பெற்றுக் கொள்வதைத் தடுப்பதற்கான முழு முயற்சியும் எடுக்கப்பட்டதாக இருந்திருக்கும். ஆனந்த சங்கரி மற்றும் புளொட் அமைப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரமே அன்றைக்கு அதிகம் என அங்கு உள்ள பலரும் கூறியிருக்கிறார்கள். விளைவு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலா ஒவ்வொரு ஆசனங்களை கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் பெற்றுக்கொண்டது.

கூட்டமைப்பில் ஏனைய கட்சிகளை இணைக்க முன்பே தெளிவான ஒரு முடிவைக் கூட்டமைப்புத் தலைமையும் தீவிர தமிழ் தேசிய ஆதரவாளர்களாக தம்மை வெளிப்படுத்துவோரும் வெட்டொன்று துண்டு இரண்டு என்பது போல் எடுத்த பின் இவ்வாறு செயற்படிருந்தால் அதனைப்புரிந்து கொள்ள முடியும். அதனை விடுத்து ஆறுகடக்கும்வரை அண்ணனும் தம்பியும் கடந்தபின் நீ யாரோ நான் யாரோ என்ற முடிவிற்குச் செல்லக் கூடாது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பு தமிழ் மக்கள் ஒன்று படவேண்டிய தருணத்தில் அரசாங்கத்தின் பிடியில் இருந்து விடுபட்டு தமிழ் மக்கள் நலன் சார்ந்து முடிவெடுக்கப் பழைய போராளிக்குழுக்கள் முனையும் போது அவர்களை ஓரம் கட்ட வெளிக்கிடுவது அரசியல் ஞானமல்ல.

சுரேசு அவர்களின் மண்டையன் குழு செய்த அட்டகாசங்கள் அநியாயங்கள் அரியநேந்திரனின் கண்ணுக்கு தெரிகின்றன ஆனால் செல்வம் அடைக்கலநாதன் தலைமைதாங்கும் ரெலோவின் பேட்டா அணியினர் அன்றைக்கு மட்டக்களப்பில் செய்த கொடுமைகள் அவர்கண்ணுக்குத் தெரியவில்லை. காரணம் என்ன? நட்பு அரியநேந்திரனின் கண்ணை மறைக்கிறதா? செல்வம் அடைக்கலநாதன் பற்றி அரியம் பேசப்போவதில்லை. அவருடனான தனிப்பட்ட உறவு சிவராம் காலத்தில் இருந்து பேணப்படுகிறது.

பழையவற்றைக் கிளறப் புறப்பட்டால் எல்லாமட்டங்களிலும் நாற்றம் எடுக்கும். 'நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப்பார்த்துச் சொலுங்கள்' எனக் கேட்கத் தோன்றும்.

பழையவற்றை மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும். அந்த மீள் வாசிப்பு என்பது எதிரிகளை உருவாக்கும் பட்டறைகளாக இருக்கக் கூடாது. அவை மனிதர்களை ஒன்றிணைத்துப் புதிய அரசியற் சிந்தனைகளைச் செயற்பாடுகளை வடிவமைக்கும் தொழிற்சாலைகளாக மாற வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் பதைக்கப்பதைக்க லட்சக்கணக்கான மக்களை கொன்றொழித்தவர்களுடன் நல்லிணக்கம் பேசமுடியுமென்றால். தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட ஜனாதிபதியின் முன் சத்தியப் பிரமாணம் எடுத்துப் பின் குடும்பத்துடன் படமும் எடுத்துக்கொள்ள முடியுமென்றால் முன்னாள் போராளிகளை இணைத்துக் கொள்வது எந்த விதத்திலும் அவமானமாகாது.

'உங்கள் மீது தப்பபிப்பிராயத்தைக் கொண்டுள்ள கோத்தாபய ராஜபக்ஸவைச் சந்தியுங்கள் உங்கள் பற்றி தெளிவுபடுத்தி அவருடன் நல்லிணக்கத்தை வெளிப்படுத்துங்கள்' என ஜனாதிபதி கூறியதனைப் பணிவுடன் ஏற்று தமிழ் மக்களின் இரத்ததை அருந்திய கோத்தபாயவுடன் தேனீர் அருந்த முடியும் என்றால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அரசுடன் இணைந்தவர்கள் தங்கள் தவறை உணர்ந்து திரும்பி வரும் போது அவர்களை ஒட்டுக்குழுவென எள்ளி நகையாடுவது அரசியல் அறிவற்ற குறுகிய பார்வை.

இந்த வகையில் தமிழரசுக்கட்சி கூட்டமைப்புள் எனைய கட்சிகளை ஓரம் கட்ட நினப்பதற்குகாரணம் என எனது அறிவுக்கு தென்படுவது, இலங்கையின் விகிதச்சாரத் தேர்தல் பிரதினித்துவ முறைகாரணமாக கிடைக்கக் கூடிய உள்ளுராட்சி மாகாண மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சிறியதாக இருப்பதே. எனவே கிடைக்கும் அப்பத்தை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பதில் பிரச்சனைகள் உள்ளன. அதனால் தேர்தல்களை எதிர் கொள்ளும் காலங்களிலேயே இத்தகைய முரண்பாடுகள் அதிகரித்துச் சென்று சந்தி சிரிக்கும் நிலை ஏற்படுகின்றன.

தேர்தல் காலங்களில் குடுமிபிடிச் சண்டையில் ஈடுபடுபவர்கள் தேர்தல் முடிந்த பின் தலைபோகிற பிரச்சனைகள் முரண்பாடுகள் ஏற்பட்டாலும் நீண்ட நாட்களுக்கு அமைதியாகக் காலம் கடத்துவர். இது தவிர அரசியல் ரீதியாக நிகழும் வெளிநாட்டு அல்லது உள்நாட்டு சந்திப்புகளில் யார் கலந்து கொள்வது என்ற நிலை வரும் போதும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் வரையறையை ஏற்பாட்டாளர்கள் விதிக்கும் போதும் யார் அந்த சந்திப்புகளுக்கு செல்வது என்ற முரண்பாடும் மேற்கிளம்பும். மற்றப்படி இனி அடுத்த தேர்தலைச் சந்திக்கும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் அரசியல்வாதிகள் மௌனமாகவே இருப்பார்கள். காலத்துக்கு காலம் மேற்கிளம்பி அறிக்கைப் போரில் தமிழ்த் தேசிய விடுதலை வியாபாரத்தை நடத்தும் அரசியல் பிரமுகர்கள், தமது தலைமை மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து தோப்புக்கரணம் போட்டாலும், கோத்தபாய ராஜபக்ஸவைச் சந்தித்து நல்லிணக்கம் பேசினாலும், வாய் திறக்க மாட்டார்கள். கொழும்பில் பாரிய குற்றச்சாட்டுக்களை சந்தித்து மக்களால் இனம் காணப்பட்டு, அலரிமாளிகையினையும், ஆளும் தரப்பையும் வலம்வந்து கொண்டிருந்தவர்களை மாகாண சபையின் இணைப்புச் செயலாளர்களாக நியமித்தாலும் அவை எல்லாம் சர்வதேச அழுத்தம் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதி உயர்பீடமான மூவர் அணியின் ராஜதந்திரம் என்றும் எண்ணி தலையை மண்ணில் புதைத்து காணாமல் போய்விடுவார்கள். சரத் பொன்சேகவுடன் அடுத்த தேர்தலில் கூட்டமைக்கப்போகிறோம் என்று அம்மூவரணி கூறினாலும் கூட வாயே திறக்க மாட்டார்கள். ஆனால் ஒட்டுக்குழுக்கள் விடையத்தில் மட்டும் இவர்கள் பரிசுத்தவான்கள்.

மறுபக்கம் நாங்கள் இன்னும் ஒன்றையும் நினைவு கூரவேண்டும். தமிழரசுக்கட்சி நிராகரிகிறது என்பதற்காக யாரும் அரசின் பக்கம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இன்றைக்கில்லை. 'தமிழ் மக்களின் நலனை அல்லது சிறு பான்மை இனங்களின் நலனைப் பிரதினித்துவப்படுத்துவதே எங்கள் நோக்கம் பதவிகள் அதிகாரம் சார்ந்து கிடைக்கும் தனிப்பட்ட நலன்கள் எங்கள் நோக்கம் அல்ல' என்று இன்றைக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புள் இருக்கும் முன்னை நாள்ப்போராளிகள் கருதினால் அவர்கள் உட்கட்சிப் போராட்டம் ஒன்றை நடாத்திக்கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதே இன்றைக்கு தேவையானது. தமிழரசுக் கட்சியும் தமது பழைய காலக் கனவான் அரசியலில் இருந்து விடுபட்டு பரந்த எண்ணத்துடன் அரசியலை அணுக முன்வரவேண்டும். தன்னுள் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் சரியான கௌரவத்தை வழங்கி வெளிப்படையான சனநாயக ரீதியான அணுகுமுறைமூலம் கூட்டுழைப்பை உறுதிப்படுத்தும் புதிய அரசியற்பாங்கை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். தேர்தற் காலத்தில் ஒரு முகத்தையும் தேர்தல் முடிந்தவுடன் மறு முகத்தையும் காட்டும் பழைய கூட்டணி கால அரசியலுடன் காலம் கடத்தலாம் என்று நினைத்தால் அது மீண்டும் தமிழ் மக்களின் அரசியற் தற்கொலையாக முடியும். அப்படி முடிந்தால் அந்தப்பழியைப் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீதோ பழைய போராளிகள் மீதோ போட முடியாது.

குமரன் - கார்த்திகேயனின் இந்தக் கட்டுரையானது பல கத்தரிப்புகளுக்கு உள்ளாகி இங்கு பிரசுரத்திற்கு வருகிறது. இன்று செயற்பாட்டு அரசியலில் உள்ள பலரது பெயர்கள் வெளிப்படையாக சுட்டிக் காட்டப்பட்டு உள்ளன. கட்டுரையாளரால் குறிப்பிடப்பட்டு உள்ளவர்கள் தமது பக்க கருத்துக்களை ஆரோக்கியமான விவாதமாக தொடர்வதாயின் இங்கே அவர்களின் கருத்துக்களும் வெளியிடப்படும். அதுபோல் ஆரோக்கியமான பின்னூட்டங்களும் எந்தவிதமான திருத்தங்களும் இன்றி பிரசுரிக்கப்படடும்.

புதுடெல்லி வருமாறு முதல்வர் விக்னேசுவரனுக்கு இந்தியா அழைப்பு -பொம்மை மாகாணசபையா!

அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய, புதுடெல்லிக்கு வருமாறு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேசுவரனுக்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித், இந்த அழைப்பை விடுத்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேசு பிறேமச்சந்திரன், கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த அழைப்பு எப்போது விடுக்கப்பட்டது என்று அவர் குறிப்பிடவில்லை.

கடந்த 8 ம் நாள், யாழ்ப்பாணம் சென்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேசுவரனை சந்தித்துப் பேசியிருந்தார்.

இதன்போதே, இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் எப்போது புதுடெல்லி செல்வார் என்பது இன்னமும் உறுதியாகவில்லை.

வடக்கு முதல்வர் விக்னேசுவரனை மிரட்டுகிறார் கெகலிய ரம்புக்வெல

வடக்கு, கிழக்கு இணைப்புக் குறித்து வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன் சிந்திப்பது கூடத் தவறானது என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெகலிய ரம்புக்வெல.

கிழக்கு மாகாணம் வடக்குடன் சேர்ந்து செயற்பட எண்ணினால், வடக்கு மாகாணம் அதற்கு இணங்கினால், சிறிலங்கா அரசாங்கம் அதனை நிறைவேற்றியாக வேண்டும் என்று வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேசுவரன் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அமைச்சர் கெகலிய ரம்புக்வெல,

“வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன் எவ்வாறு கூறியிருந்தாலும், அரசியலமைப்புக்கு மாறாக எதையும் நடைமுறைப்படுத்த முடியாது.

நாட்டில் நிலவும் சமாதான சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவர் சிந்திப்பதே தவறானது.

முதலமைச்சர் விக்னேசுவரன் தாம் நினைத்தவாறு ஒழுங்கு முறையின்றி மேலதிக அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு கூறுவாறானால் அது கவலைக்குரியது.

தமிழ், சிங்கள, முசுலிம் மக்கள் நல்லுறவுடன் வாழும் நிலை உருவாக்கப்பட்டுள்ள சூழலில், தன்னிச்சையாக இத்தகைய கருத்துக்களைத் தெரிவிப்பது முறையற்றது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பார் மன்மோகன்சிங் - ரைம்சு ஒவ் இந்தியா தகவல்

கொழும்பில் அடுத்தமாதம் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மாகன்சிங் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும், இந்தியாவின் சார்பில் துணைக் குடியரசுத் தலைவர் கமீத் அன்சாரி கொழும்புக்கு அனுப்பப்படலாம் என்றும் ரைம்சு ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ள நிலையில், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், இந்த மாநாட்டில் பங்கேற்பதில் இருந்து விலகிக் கொள்ளலாம்.

கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க திமுக வலியுறுத்தி வருகின்ற நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரசு தலைவர்களும் இதனை ஆதரிக்கின்றனர்.

இந்தநிலையில், இந்தியாவின் சார்பில் துணை குடியரசுத் தலைவர் கமீத் அன்சாரி மற்றும் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்கலாம் என்று மூத்த காங்கிரசசு தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்தமாதம், பிரதமரும், ஏனைய காங்கிரசு மூத்த தலைவர்களும், இந்தவிவகாரம் குறித்து கலந்துரையாடியதாகவும், பிரதமர் மாநாட்டில் பங்கேற்பது விரும்பத்தக்கதல்ல என்று தாம் அந்தக் கூட்டத்தில், சுட்டிக்காட்டியதாகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

துணைக்குடியரசுத் தலைவர் கமீத் அன்சாரியை கொழும்பு மாநாட்டில் பங்கேற்குமாறு, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக் கொள்ளக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடைசியாக 2011ம் அண்டு அவுசுசுரேலியாவில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டிலும் இந்தியாவின் சார்பில் கமீத் அன்சாரியே பங்குபற்றியிருந்தார்.

அதேவேளை, தான் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பேன் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் அண்மையில் சிறிலங்கா சென்றிருந்த போது கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோழைத்தனமாக செயற்படுகிறது பிரித்தானியா – வெளிவிவகாரக் குழு குற்றச்சாட்டு

சிறிலங்கா தொடர்பாக கோழைத்தனமான - பொருத்தமற்ற கொள்கையை பிரித்தானிய அரசாங்கம் கடைப்பிடிப்பதாக, பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு குற்றம்சாட்டியுள்ளது.

கொழும்பில் அடுத்தமாதம் நடக்கவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டில், பங்கேற்பதற்கு, மனிதஉரிமைகள் நிலையின் முன்னேற்றம் குறித்து நிபந்தனை விதித்திருக்க வேண்டும் என்றும் பிரித்தானிய நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் தீவிரமான மனிதஉரிமை மீறல்கள் இன்னும் தொடர்வது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், பிரித்தானியா இன்னும் அதிகமான கொள்கைகளை, கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்க முடியும் என்றும் இந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கொமன்வெல்த் மாநாட்டில், பங்கேற்கப் போவதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அறிவித்துள்ள நிலையில், அனைத்துக்கட்சிகளையுமு உ ள்ளடக்கிய வெளிவிவகாரக் குழு இந்தக் கடுமையான கருத்தை வெளியிட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரின் குடும்பத்தை நாடு கடத்த சுவிஸ் அதிகாரிகள் தீர்மானம்

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர் ஒருவரின் குடும்பத்தையும் நாடு கடத்த சுவிட்சர்லாந்து அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இலங்கை அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் அண்மையில் நாடு கடத்தப்பட்டிருந்தார்.

அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் சுவிட்சர்லாந்தில் தங்கியுள்ளனர்.

இவர்களை நாடு கடத்துவது தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படுகின்றனவா என்பது குறித்து சுவிட்சர்லாந்து அதிகாரிகள் இலங்கைக்கு நேரில் விஜயம் செய்து ஆராய்ந்துள்ளனர்.

இதன் போது, இலங்கை அதிகாரிகள் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், புகலிடக் கோரிக்கையாளரின் குடும்பம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

நாடு கடத்தப்பட்ட நபர் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரின் உடல் நிலைமை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டதன் பின்னர், நாடு கடத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டை துண்டாட முயற்சிப்போரின் தலை உடலில் இருக்காது என இராணுவத் தளபதி கடுமையான எச்சரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டை பிளவுபடுத்த எத்தனிக்கும் எந்தவொரு தரப்பிற்கும் தனிப்பட்ட நபர்களுக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத் தளபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் மேற்கொண்ட முதலாவது வடக்கு விசயத்தின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபைத் தேர்தல் வெற்றியானது பிரிவினைவாதத்திற்கான அங்கீகாரமாக சிலர் கருதிச் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை துண்டாட முயற்சிப்போரின் தலை உடலில் இருக்காது என இராணுவத் தளபதி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

என்ன விலை கொடுத்தேனும் நாட்டின் சமாதானத்தை பேணிப் பாதுகாக்க இராணுவத்தினர் நடவடிக்கை எடுப்பர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், புலனாய்வுப் பிரிவினரும் ஏனைய ஆதரவாளர்களும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொடர்ந்தும் நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருதாகத் தெரிவித்துள்ளார்.

சனநாயகக் கட்டமைப்பில் நாட்டின் எந்தவொரு பிரஜையும் வாழ்வதற்கு எவ்வித தடையும் கிடையாது, எனவும் வன்முறைகளைத் தூண்டும் நோக்கில் செயற்படுவோருக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் தேர்தல் வெற்றியானது தனிப்பட்ட ஒர் கட்சிக்கு கிடைத்த வெற்றியல்ல, அது தேர்தலுக்கும் சனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.