அக்காலத்தின் பல தலைமுறைகளின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்த ஆய்வில் எனக்கு புரிவது என்னவென்றால் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம்
தாத்தாக்களும் பாட்டிக்களும் அடுத்தடுத்த தலைமுறைகளை மிகவும் அக்கறையுடன் பார்ப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். பின் என்ன? சும்மாவா 650 விளையாட்டு பொருட்கள் கிடைக்கும்? பெண்களையும் மிகவும் நேசித்தவர்களாக தெரிகிறார்கள். ஆம் பெண்களின் ஆபரணங்களும் நிறையவே கிடைத்திருக்கின்றனவே.
பெரியவர்கள் ஆடும் விளையாட்டு உபகரணங்களும் கிடைக்கின்றன. ஆக, பிசியாகவும் டென்சனாகவும் இல்லாமல் விளையாடி மகிழ்ந்தே இருந்திருக்கின்றனர் பொதுவாக மக்கள்.
எக்கச்சக்கமான எழுத்துக்கள் கிடைத்திருக்கின்றன. கல்வி எளிய மக்களுக்கு நன்றாகவே கிடைத்திருக்கிறது. நிச்சயம் இன்று போல போகப் பொருளாக இருந்திருக்கவில்லை.
சட்டைக்கு போடும் பொத்தான் தங்கத்தில் கிடைத்திருக்கிறது! ஆக மேல்சட்டை அணிந்து அருமையாகவே தோரணையாகவே இருந்திருக்கின்றனர்.
உரைக்கிணறு வைத்து கிணற்றுப் பாசனம் செய்தாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி தீர்க்காமல் அல்லது மீண்டும் நிறைத்து வைத்து, நம்மை கருத்தில் கொண்டே வாழ்ந்திருக்கின்றனர்.
ஒரு பெரிய மண் பாண்ட ஆலை மற்றும் நெசவாலைகள் ஒரே ஊரில் இருந்து இருக்கின்றன. பானை, வாட்டர் பாட்டில், விளையாட்டு சாமான், தாயம் போன்ற அனைத்தும் மண்பாண்டக் கலையாக இருப்பதைப் பார்த்தால் வீட்டுக்கு வீடு பாண்டங்களும் நெசவு செய்த உடைகளும் வாங்கித்தள்ளி இந்த இரு ஆலை வைத்திருந்தவர்களையும் இன்றைய அம்பானி அதானி ரேஞ்சுக்கு பணக்காரர்களாக்கி இருக்கக் கூடும்