நெருப்புக்குச் சூல்கொடுத்த நேர்மைக் கோடு
நெய்துவைத்த பாக்களெலாம் கொள்கைப் பீடு !
கருஞ்சட்டை!வெளிச்சத்தை விதைத்து வென்ற
கைத்தடியின் ஒளிவிளக்கு !கவிதைக் காடு !*
துருப்பிடிக்காக் கொள்கைகொண்ட தூய ஏடு !
துணிச்சலுக்கு துரைராசன் என்றே பீடு !
குருத்துவரை நிமிர்ந்திருக்கும் மானத் தேக்கின்
குழந்தைமனம் !முடியரசன் !புலமை வீடு !
°
கரிகாலன் போல்பார்வை !கனத்த மீசை !
கனிவயிர நெஞ்சுறுதி கிளைத்த மார்பன் !
அரிமாவே கடன்கேற்கும் அரிய தோற்றம் !
ஆர்க்காத நடுக்கடல்போல் அறிவின் ஆழம் !
..
விரிவானம் நகலெடுத்த பரந்த உள்ளம் !
விளைநிலத்து முதிர்கதிர்போல் பதரைத் தள்ளும் !
செரிவான தமிழ்ச்செருக்கன் ! பாவேந் தன்போல்
செந்தமிழின் தலைப்பிள்ளை !வணங்கு கின்றோம் !
°
முடியரசன் !தமிழ்த்தாயின் முத்த ஈரம் !
முதற்படையின் முன்நிற்கும் மூத்த வீரன் !
விடிவதற்காய்ச் சூரியனே ஒளிப்பி ழம்பை
விதைத்துவைத்த கவிதைவயல் !வெளிச்சச் சோறு !
*
இடிமின்னல் வெடிமழையால் இருட்ட கற்றி
ஈரநிலம் உழக்கற்ற கொள்கை ஏறு !
அடிவானச் சூரியனை எழுப்பி வைத்த
அடையாளக் கவிதைகளின் சூட்டுக் கோல்!ஆம்
°
வேடங்கள் தாங்காத வேடந் தாங்கல் !
வெறுங்கூச்சல் போடாத வெற்றிப் பாய்ச்சல் !
ஓடங்கள் ஓடிவிளை யாடும் ஆறு !
ஒளிவுமறை வில்லாத உள்ளக் கூடம் !
*
மூடங்கள் ஒழிக்கவந்த பெரியார் நெஞ்சை
மோனையெனச் செயல்படுத்த முந்தும் வேகம் !
மூடவழி தானறியா அன்பின் ஊற்று!
முடியரசர் தேனருவி சுமந்த காற்று !
°
விலைபோகா உயிரெழுத்து !பெரியார் பெற்ற
விழுதுகளின் உயிலெழுத்து !தன்மா னத்தின்
மலையெழுத்து ! வானத்தைக் குள்ள மாக்கி
மழைக்குடைபோல் மடக்கிவைக்கும் ஆற்ற லாளன் !
*
நிலைத்தபுகழ் நூற்றாண்டில் கவிஞர்க் கெல்லாம்
நெஞ்சுரத்தைப் பரிசளித்தார்!இனிமே லேனும்
வலைக்குள்ளே சிக்காமல் வாழக் கற்போம்!
வலையறுத்தும் தன்மானம் நிமிர நிற்போம் !
°
அவர்கொள்கை தமிழ்காத்தல் தமிழர் காத்தல் !
அறஞ்செய்தல்!மறஞ்செய்தல் ! உட்பு குந்த
உவர்நீரை நன்னீராய் மாற்று தற்கே
உயிர்க்கொள்கை பெரியாரைத் துணைக்கோ டல்!நேர்
எவர்வரினும் எதிர்க்கின்ற நேர்மைச் சீற்றம்!
எதுவரினும் கலங்காத இதய ஆற்றல் !
சுவராக முடியரசர் நமக்கு வாய்த்தார்
சித்திரங்கள்எழுதிவைப்போம் !சிறக்க வாழ்வோம் !
°
...........................................................
கவிக்கோ துரைவசந்தராசன்
..........................................................................
(வீறுகவியரசர் நூற்றாண்டுத் தொடக்கம் 7.10.19)