அடிகள் ஆங்கிலம், ஆரியம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் புலமையுடைய ஒரு மும்மொழிப் புலவர். ஆரிய மலையை அளந்து கண்ட ஒரு தமிழ்மலை. ஆரியக் கடலை நீந்தித் தமிழ்க் கரை ஏறிய பெரியார். ஐம்பது நூல்களுக்கு மேல் எழுதிய நூலாசிரியர். தமிழுக்குத் தனிநடை வகுத்த தலைவன். தமிழ்த்தாய்க்கு நேர்ந்த வடுவையும், இழிவையும் ஒழித்த தலைமகன். இனிய குரலோடு, அருமையாகப் பேசும் ஒரு செஞ்சொற்செல்வன். மேலைநாட்டு ஆராய்ச்சியாளர் எவர்க்கும் குறையாத ஒரு ஆராய்ச்சியாளர். அழகிய திருமேனி, சிறந்த குணக்குன்று.
புலவர்க்குப் புலவராக விளங்கி வந்த பேராசிரியர் அடிகளின் பிரிவு தமிழ்ப்புலவரை, தமிழறிஞரை, தமிழன்பரை வருத்திய அளவுக்கு தமிழ் மக்களை வருத்த வில்லை. ஏனெனில், அவர்கள் அடிகள் வாழ்ந்த போது அவர் தம் மொழிப்பற்றை, அறிவை, ஆராய்ச்சியை, தொண்டுகளை அறிந்து பயன்படுத்திக் கொண்டதில்லை.
ஆரியர்கள் தமிழ்நாட்டுக்கு வருமுன்னே தமிழர்க்கு என்று ஒரு சமயம் இருந்ததா? இருந்ததாயின் அது எது? அதன் கொள்கை என்ன? என்பதை ஆராய, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழறிஞர்களால் கூட்டப்பெற்றிருந்த அகில இந்திய தமிழர் சமய மாநாட்டில் தலைமை வகித்த மறைமலையடிகளைப் பேச விடாது, காலித்தனம் செய்து கலகம் விளைவித்த அறியாமை மிகுந்த மக்கள் கூட இன்று அடிகளின் பிரிவைக் கண்டு வருந்துகின்றனர்.
அம்மாநாட்டில் நடந்த காலித்தனத்தை ஆதரித்து 22.10.1940ஆம் நாள் “விடுதலை” யில் தலையங்கம் எழுதிய பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள், அடிகளையும் பிறரையும் ஆரியர்களின் அடிமைகள், கூலிகள் என்பதாகப் பெயர் கொடுத்திருக்கிறார். அவர் கூற்றுப்படி ஆரிய அடிமையாகிய அடிகளார் இப்போது நம்மை விட்டு மறைந்தார்கள். இதற்காக எந்த ஆரியரும் வருந்துவதாகத் தெரியவில்லை.
ஈரோட்டுப் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய இச்சொற்களை நம்பி, நடந்த தமிழர் சிலரது தவறுதலுக்கு அவர்கள் சார்பாக அடிகளது அழகிய உடல் எரியூட்டப்படுமுன் மன்னிப்புக் கோரி வருந்தியது தவிர வேறு எதுவும் செய்ய நம்மால் இயலவில்லை.
மேலே கண்ட இதுவும், சென்னை இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த ஜனசபை ஆண்டு விழாவில் தலைமை தாங்கிய அடிகளின் பேச்சுகள் “பெரியாரைக் கொலை செய்யத் தூண்டுவதாக இருக்கிறது” என்று பெரியார் சார்பில் கோர்ட்டில் வழக்கிட நேர்ந்த போது, அதில் குறுக்கிட்டு வழக்கு நடைபெறாமல் தடை செய்து, புண்பட்டிருந்த அடிகளின் மனதை ஆறுதல் படுத்தியதும் ஆகிய இவ்விரண்டையும், எண்ணும்பொழுது நமக்கு ஆறுதல் உண்டாகின்றது.
மறைந்த அடிகளுடைய பொன்னுடல் எவ்வளவு அழுதாலும் திரும்ப வராது. அவருடைய குடும்பத்தாருக்கும், தமிழ் கூறும் நல்லுலகிலுள்ள தமிழ் அறிஞர்கள் பலருக்கும் உள்ள துயர் எவ்வளவு கதறினாலும் போகாது. மெல்ல மெல்ல நகர்ந்து செல்லும் காலம் ஒன்றுதான் அனைவர்க்கும் ஆறுதல் அளிக்க வேண்டும்.
அடிகள் வாழ்ந்த மனையை விலை கொடுத்து வாங்கி, அதனைத் தமிழ் ஆராயும் பொது இடமாக்குவதும், அடிகளுக்கு நினைவு உரு அமைப்பதும், அவர்கள் நாட்டுக்கு நன்கொடையாகக் கொடுத்துப்போன விலையுயர்ந்த நூல் நிலையத்தை வைத்து நடத்துவதும், அவர் எழுதி வைத்துப் போன நூல்களை வாங்கிப் படிப்பதும், அவர்கள் காட்டிப்போன தமிழ் வழியில் நடந்து செல்வதும், அவர்கள் வாழ்ந்த போது போற்றி வாழாத வாழ்வுக்கு வருந்தி, அவர்களை நினைந்து, மன்னிப்பு வேண்டுதலும் ஆகிய இவைகளே தமிழ்மக்கள் தமிழ்த் தலைவனாகிய அடிகளுக்கு இப்போது செய்ய வேண்டிய கடமைகளாகும்.
வாழ்க அடிகளின் புகழ்! தமிழ் தனித்துவமாக இயங்க இவர்வழி தொடர்வோம்.
(“தமிழர் நாடு” இதழில் ‘முத்தமிழ்க் காவலர்’ கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்கள் எழுதிய தலையங்கம். 17.11.1950)