13.09.2019 “சுவிற்சர்லாந்து காலனியாதிக்கத்தில் பங்கேற்காத நாடு அடிமைகளை கொள்ளாத நாடு” என்று சொல்லப்படுகிறது. அது நேரடியாக கொலனிகளை வைத்திருக்காததால் அப்படி ஒரு தோற்றப்பாடு உள்ளது. இதற்கு மாறாக திரைமறைவில் இருந்த விவகாரம் அல்லது உண்மை சுவிசில் படிப்படியாக பேசப்படுகிற பொருளாக மாறியுள்ளது.
Pays de Vaud, Ville de Laussane, Helvetie ஆகிய சுவிசின் Waadtländer நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல்கள் அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன. Basler Handelhaus Burckhardt- Basel (business house Burckhardt) என்ற நிறுவனமும் கப்பலொன்றை சம்பாதித்து, இந்த அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறது.
20190823_224817-handler
எந்தக் கடல் எல்லையும் இல்லாத இந் நாடு Marseille இனை அடிமை வியாபாரத்துக்கான தளமாகக் கொண்டு, அத்திலாந்திக் கடற்பரப்பில் இந்த வேலையில் ஈடுபட்டிருந்தது. போர்த்துக்கல் கொலனியான மொசாம்பிக்கிலிருந்து அடிமைகளை அத்திலாந்திக் சமுத்திரம் வழியாக ஏற்றிச் செல்வதில் ஈடுபட்டிருக்கின்றன.
திரும்பும்போது கோப்பி, துணி போன்ற பொருட்களை ஏற்றிவந்திருக்கின்றன. ஐரோப்பா-ஆபிரிக்கா-அமெரிக்கா என்ற மும்முனை அடிமை வியாபாரத்தில் சுவிசுஈடுபட்டிருக்கிறது. இந்த அடிமை வியாபாரப் பொருளாதாரம் 16ம் நூற்றாண்டுக்கும் 19 ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மேற்கு ஐரோப்பாவின் முதலாளித்துவ வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. இது ஐரோப்பாவின் மேலாதிக்கத்தை நிறுவியதுடன், தொழில்மயமாக்கலுக்கான பொருளாதாரத்துக்கு பெரிதும் உதவியது.
இதற்கு சுமார் 20 சுவிசு வங்கிகள் முதலீடுகளை வழங்கியுள்ளன. பிரான்சு (Nantes, Le Havre), கொலன்ட், பிரித்தானிய நாடுகளைச் சேர்ந்த அடிமைவியாபாரிகளுக்கு இவ் வங்கிகள் இவ்வாறு சேவைகளை வழங்கியுள்ளன. அதேநேரத்தில் கரீபியன் தீவான Antilles இலிருந்து இந்தோனேசியா வரை அடிமைகளை வைத்து பயிர் உற்பத்தியில் ஈடுபடுவதில் இந்த வங்கிகளுக்கும் பங்கிருந்தது. இதனால் அப்படி உற்பத்திசெய்யப்படுகிற பருத்தி போன்ற பொருட்கள் சுவிஸ் ஆடை உற்பத்தித் துறைக்கு அடித்தளமாக அமைந்தது. அதற்கான நெசவுத்தெறிகளையும் உபகரணங்களையும் அது வழங்கியதன் மூலம் சுவிஸ் ஆடை உற்பத்தி தொழில் வளர்ச்சியுற்றது.
அடிமை விவகாரங்களோடு சம்பந்தப்பட்டு தமது சேவைத்துறைகளை சுவிசு ஆலோசனை நிறுவனங்கள் வழங்கின. அடிமைகளின் எழுச்சிகளை எப்படி கையாள்வது அல்லது குறைத்துக் கொள்வது, அடிமை முறையிலிருந்து விடுபட்ட Haiti போன்ற நாடுகளை மீண்டும் அந்த முறைமைக்குள் எப்படி கொண்டுவருவது என்பதற்கான ஆலோசனைகளை அவை வழங்கின.
எல்லா காலனித்துவ நாடுகளின் வெற்றிக்குப் பின்னால் சுவிசு துருப்புகள் (troops) இருந்திருக்கின்றன. இவை 17,18ம் நூற்றாண்டுகளில் இலங்கையிலிருந்த கொலன்டின் மிகப் பெரும் வர்த்தகக் கம்பனியான கிழக்கிந்திய கம்பனியுடனான (1640 to 1796) ஒப்பந்தங்களை செய்துகொண்டன.
இவ்வாறாக காலனித்துவத்திற்கு சுவிசு திரைமறைவில் நின்று துணைபோயிருக்கிறது. இன்றும் நாடுகளுக்கிடையிலான போர்கள் அல்லது ஆக்கிரமிப்புப் போர்களுக்குப் பின்னால் நின்று அதே பாத்திரங்களை ஆற்றுகிறது.
நிறவெறி ஆபிரிக்காவின் மீது ஐக்கிய நாடுகள் சபையால் பொருளாதாரத் தடை கொண்டுவரப்பட்டிருந்தபோது, அங்கிருந்து தங்கத்தை கொண்டுவந்திருக்கிறது. Oerlikon இலுள்ள ஆயுத உற்பத்தி ஆலை Bührle சட்டவிரோதமாக ஆயுதவிற்பனை செய்துள்ளது. காலனித்துவகால கம்பனிகளில் சுவிஸ் முதலீடுகள் குறித்து ஆய்வுசெய்த (பிரெஞ்சு மொழி பேசும்) சுவிசு நூலாசிரியர்கள் மூவர், சுமார் ஒரு இலட்சத்து எழுபத்தியிரண்டாயிரம் (172000) அடிமைகளின் கடத்தலோடு சுவிசு சம்பந்தப்பட்டிருப்பதாக மதிப்பிட்டுள்ளார்கள். இது அத்திலாந்திக் சமுத்திர வியாபாரத்தின் 1.5 வீதமாகும்.
“இன்றைய சுவிசு ஒரு பன்முக ஏகாதிபத்திய சேவைத்துறையைக் கொண்ட வலயம்” என்கிறார் சுவிசின் வலாற்றாசிரியர் Bernhard Schär. மிகப் பெரும் மூலப்பொருள் வர்த்தக நிறுவனங்கள் Glencore, Trafigura, Cargill போன்றவை இங்கு இருக்கின்றன. உலகின் முதன்மையான -வாழ்வாதாரப் பொருட்களின்- கம்பனிகளான Nestle மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்களான Roche, Novartis, Syngenta என்பனவும் சுவிசில் இருக்கின்றன. ஜெனீவா மிக முக்கியமான ஓயில் (oil) வர்த்தக வலயமாக ( Vitol, Gunvor முதலியவை ) உள்ளது. உலக வியாபகமான இந்த வர்த்தக நடவடிக்கைகளின் மூலமாக நிர்மாணிக்கப்பட்ட சுவிசின் பசுமைக்குக் கீழ் தெற்கின் பில்லியன் கணக்கான மக்களின் வாழ்வு நசிந்துபோய்க் கிடக்கிறது.
இவை குறித்த இரு நூல்கள் சுவிசிலிருந்து வெளிவந்திருக்கின்றன.
“Schwarze Geschäfte” – by Thomas David, Bouda Etemad and Janick Marina Schaufelbuehl
“Reise in Schwarz-Weiss. Schweizer Ortstermine in Sachen Sklaverei” – by Hans Fässler,
என்பவையே அவை.
swiss slave-book2
swiss slave-book1
அடிமை வியாபாரத்திலும் காலனித்துவ மயமாக்கலிலும் சுவிசுக்கு இருந்த பாத்திரத்தை மக்கள் மத்தியில் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்றன. இது சுவிசில் மட்டுமன்றி, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் -சுவிஸ் போன்றே- தாம் காலனியையோ அடிமைகளையோ வைத்திருக்கவில்லை என சொல்லிக்கொண்டிருக்கும் அவுஸ்திரியா போன்ற நாடுகளில் உண்மையைத் தேடுகிற முனைப்பை தூண்டிவிட வாய்ப்புள்ளது.
“இலத்தின் அமெரிக்கா, கரீபியன், ஆபிரிக்கா, வட அமெரிக்கா நாடுகளில் சுவிஸ் பிரசைகளுக்குச் சொந்தமான மொத்த அடிமை முறை பயிர்ச்செய்கை பண்ணைகளையும் அதன் சொத்துகளையும் தனது நூலில் கணக்கிட்டுத் தர முயற்சித்திருப்பதாக கூறுகிறார் பஸ்லர் (Hans Fässler).
மேலும், தன்னைப் பொறுத்தவரையில் “அடிமை வியாபாரத்திற்கு எந்தவழியிலாவது பங்களிப்பு செய்தவர்கள் அடிமை முறைச் செயற்பாட்டாளர்கள்தான். இந்த விவகாரங்களில் நேரடியாக பங்குகொள்வதற்கும் மறைமுகமாகப் பங்குகொள்வதற்கும் ஒரு வித்தியாசமுமில்லை” என்கிறார் (இதற்கு அவர் நூலில் மூன்று காரணங்களை கொடுத்திருப்பதாக குறிப்பு உள்ளது).
இந் நூல் மிக துல்லியமாகவும், விவேகமாக பின்னப்பட்டிருப்பதாகவும் பாராட்டியிருக்கும் சுவிசின் அறியப்பட்ட புத்தியீவியீன் சீக்ளர் (Jean Ziegler) தொலைக்காட்சி பேட்டியில் “அடிமை வியாபாரத்தை தாம் நடைமுறைப்படுத்திய விடயத்தை நாளை சுவிற்சர்லாந்து கண்டுகொள்ளும்.” என்கிறார்.
சுவிசு அவுசுதிரியா போன்றே, கொலன்ட், சுவீடன், டென்மார்க் Brandenburg (யேர்மனி) போன்ற நாடுகளும் கூட அடிமை வியாபாரத்தில் சம்பந்தப்பட்ட விவகாரத்தை கண்டுகொள்ள இவ் இரு நூல்களும் உதவும்.
“இந்த அடிமை வியாபாரத்தில் இலாபமீட்டிய சில நாடுகள் இன்னமும் குறைத்து மதிப்பிடப்பட்டும் கண்டுகொள்ளப்படாமலும் இருக்கின்றன. இன்றோ நாளையோ இந்த நாடுகளெல்லாம் தமது வரலாற்றுப் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈட்டை கொடுக்க முன்வர வேண்டும். மறுத்தானாக, தாம் இந்த நாடுகளின் அபிவிருத்திக்கு உதவுகிறோம் என்று ஐரோப்பிய நாடுகள் சொல்வதை இந்த இழப்புக்கான ஒரு பிரதீயீடாகக் கொள்ள முடியாது” என்ற கருத்தை நிறவெறி எதிர்ப்புச் செயற்பாட்டாளர் Simon Inou (அவுசுதிரியா) முன்வைக்கிறார்.
வரலாறுகள் பொத்தி வைத்திருக்கிற ஓட்டைகள் தவிர்க்க முடியாமல் வெளித்தெரிகிறபோது தமது சனநாயக ‘மேக்-அப்’ கலைந்துவிடாதபடி அவர்கள் நடந்துகொள்வார்கள். திசைதிருப்ப, சில பூக்களை அவர்கள் பரிசளிப்பார்கள். அதில் பிரக்ஞை இருப்பதில்லை. நேர்மை இருப்பதில்லை. அந்தவகைப் பொத்தல்களை எதிர்கால நடவடிக்கைகளில் மறைக்க அதை பாடமாக அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். இவ்வாறாகத்தான் அவர்கள் காலனித்துவ யுகத்திலிருந்து நவகாலனித்துவ யுகத்துக்கு மாறினார்கள். நாடுகள் காலனியாதிக்கத்திலிருந்து சுதந்திரம் அடைந்ததாக கொண்டாடிக்கொண்டிருக்க, அவர்கள் தமது அறைக்குள் இருந்தபடியே அந் நாடுகளின் இறையாண்மையை கொறித்துக் கொண்டிருக்கிறார்கள். வங்கிகள், அரசியல் கொள்ளையர்களதும் தூள் வியாபாரிகளினதும் ஏமாற்றுக்காரரினதும் நிதிப் புகலிடமாக இருக்கிறது. வடிவங்கள் மட்டுமே மாறியிருக்கிறது. உள்ளடக்கம் ஒன்றேதான்.
நாடுகளின் சமூகங்களின் இயல்பான வளர்ச்சிகளில் தமது நலன் சார்ந்து இடையீடு செய்த இந்த மேலாதிக்க நாடுகள் எந்த இழப்பீட்டாலும் அதை முழுவதுமாக திரும்பப் பெற்றுக் கொடுக்க முடியுமா என்ன. மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் அடிமை முறைமையாலும் காலனியத்தாலும் இழந்துவிட்ட வளங்களை, பண்பாடுகளை, மொழியை எல்லாம் முழுமையாக மீட்டுக் கொடுக்கவா முடியும் இவர்களால். மன்னிக்கவே முடியாத குற்றவாளிகள் இவர்கள். அதனால்தான் கறுப்பின மக்களை கிரிமினல்கள் என விளித்த வெள்ளை நிறவெறியர்களைப் பார்த்து மல்கம் எக்சு “உலகின் மிகப் பெரும் கிரிமினல்கள் நீங்கள்தான்” என்றார்.