19.08.2019-நீர், நிலம், தீ, காற்று, விண் . எனும் ஐம்பூதத் தத்துவங்களை முதன்மைப்படுத்தி, வழிபடும், வாழ்த்திப் பயன்படுத்தும் மெய் இயல் பேரறிவு கொண்ட ஒரே சமூகம் தமிழ்ச் சமுகம் மட்டுமே.கற்பனைக் கடவுள்கள், புராணக் கதைகள், இதிகாசக் கதைகள் எதுவுமற்ற அறிவார்ந்த உயர் சிந்தனைத் தளத்தில் நிற்பவர்கள் தமிழர்கள்.
இந்த மெய் இயல் தத்துவத்தை தமிழ் பக்தி இலக்கியங்கள் மறைபொருளாகவும் உணர்த்தி இருக்கின்றன.
"உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்"
- சேக்கிழார்.
உலகமெல்லாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவன். "நில(ம்)" த்த்தில் உலவுபவன், "நீர்" மலி வேணியன், அலகில் "சோதி" யன் (சோதி = தீ), "அம்பல(ம்)"த் (அம்பலம் = விண்-விசும்பில் ஆகாயத்தில்) தாடுவான் (ஆடுவான் = "காற்று" ஆடக்கூடியது) ...
இப்படி இந்த உலகம் உருவாகி செயல்படுவதற்குக் காரணமான, உலகமெல்லாம் நீக்கமற நிறைந்து இருக்கும் உணர்ந்து உணர்ந்து ஓதுவதற்கு உரியவனாக நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகியவையாக இருக்கும் அவனின் (இறைவனாக பாவித்து) மலர் போன்ற சிலம்புகளை அணிந்த அவன் பாதங்களை வாழ்த்தி வணங்குவோம் என்கிறார் பெரிய புராணம் வழங்கிய சேக்கிழார்.
இதையே, சித்தர் பெருமான் ஒளவையார், "அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது" என்கிறார்.
எந்த ஐம்பூதங்களால் இந்த உலகம் (அண்டம்) உருவானதோ, அதே ஐம்பூதங்களால் உருவானதே இந்த மனித உடல் (பிண்டம்) என்கிறார்.
தமிழர் மெய்யியல், இறையியல் என்பது இயற்கை எனும் அறிவியலை வாழ்த்தும் இயல்பு கொண்டது.
மனிதன் உள்பட தாவரம், பறவை, விலங்கு என எல்லா உயிரும் வாழ நீர் அவசியம். எனவேதான், நீரை "தீர்த்தம்" "புனித நீர்" என்றெல்லாம் உயர்த்தி, வணங்கி, வழிபட்டு நீரை மதிக்கும் வழக்கம் தமிழ்ச் சமூகத்தில் உருவானது.
ஒவ்வொரு ஆற்றின் , ஏரியின் கரையில் மரத்தடி ஒன்றில் கடவுளர் வழிபாடு செய்யப்படுவதன் அடிப்படை நீர் வழிபாடு செய்யவும்தான்.
நீருக்கு, மனித எண்ணங்களை உள் வாங்கி பிரதிபலிக்கும் ஆற்றல் உண்டு என்பது வியப்பூட்டும் அறிவியல் உண்மை.
இத்தகைய பல சிறப்புகள் கொண்டதால்தான் "நீரின்றி அமையாது உலகு" என்கிறார் திருவள்ளுவப் பெருமான்.
ஊடகவியலாளர் விசுவா விசுவநாத்