அது என்னவெனில் முசுலிம்களின் சனத்தொகை ஏனைய இனங்களை விட அதிகரித்த விகிதத்தில் பெருகி வருவதைக் குறித்த அச்சமே அது. இவ்வச்சம் காரணமாக முசலிம்கள் ஏனைய இனங்களின் மகப்பேற்று வீதத்தை குறைக்கும் விதத்தில் அல்லது கருத்தரிக்கும் ஆற்றலை அழிக்கும் விதத்தில் ஏதோ சதி சூழ்ச்சிகளைச் செய்கிறார்கள், அல்லது புத்திக்கு விளங்காத மாந்திரீக பில்லி சூனிய வேலை எதையோ செய்து வருகிறார்கள் என்ற ஓர் அச்சம் இலங்கைத்தீவு முழுவதிலும் பரவிக் காணப்படுகிறது. இது படிப்பறிவு குறைந்த சாதாரண குடியானவர்கள் மத்தியில் மட்டும் காணப்படும் ஓர் அபிப்பிராயம் அல்ல. படித்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பொறுப்பான பதவிகளை வகிக்கும் பலரிடமும் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் இருப்பதைக் காண முடிகிறது.
முசுலிம் சமூகம் தனது சனத்தொகையை கட்டுப்பாடின்றி பெருக்கிக் கொள்வது மட்டுமல்ல மறுவளமாக ஏனைய சமூகங்களின் கருத்தரிக்கும் ஆற்றலையும், சதி சூழ்ச்சி செய்து தடுக்கிறது. அல்லது அழிக்கிறது என்ற ஊகத்தின் அடிப்படையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்கு முன்பிருந்த தொடங்கி முஸ்லிம் சமூகத்தின் மீது பின்வரும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.
1. முசுலிம் சாப்பாட்டுக் கடைகளில் குறிப்பாகக் கொத்து றொட்டிக் கடைகளில் கருத்தடை மாத்திரைகள் மாவில் கலக்கப்படுவதான குற்றச்சாட்டு. கடந்த ஆண்டு அம்பாறையிலிருந்து தொடங்கி கண்டி வரையிலும் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கான தொடக்கப் பொறிகளில் இந்த வதந்தியும் ஒன்று.
2. கிழக்கில் சாப்பாட்டுக்கடைகளில் இடியப்பம் போன்ற மாப்பண்டங்களில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்படுவதான குற்றச்சாட்டு.
3. திருகோணமலையில் ஒரு கோவில் ஐயரின் உதவியாளராக இருந்த முசுலிம் தன்னுடைய மத அடையாளத்தை மறைத்ததோடு கோவில் பிரசாதத்தில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஏதோ ஒரு மருந்தைக் கலந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு.
4. முசுலிம் கடைகளில் விற்கப்படும் பெண்களுக்கான உள்ளாடைகளில் ஏதோ இரசாயனம் அல்லது ஏதோ ஒரு யெல் வகைத்திரவம் தூவப்படுவதான அல்லது பூசப்படுவதான குற்றச்சாட்டு.
மேற்கண்டவை போன்ற குற்றச்சாட்டுக்கள் யாவும் ஒரு மையத்தில் தான் குவிகின்றன. அதாவது முசுலிம் சமூகம் ஏனைய இனத்தவர்களின் கருத்தரிக்கும் சக்தியை அழிக்கின்றது என்பதே அது. இவ்வாறான குற்றச்சாட்டுக்களில் பெரியதாகவும் ஒப்பீட்டளவில் தூலமானதாகவும் காணப்படுவது குருநாகல் வைத்தியசாலையில் பணி புரிந்த மகப்பேற்று நிபுணரான ஒரு முஸ்லிம் மருத்துவர் செய்கு சியாப்டீன் மொகமட் சாஃபி மீதான குற்றச்சாட்டு ஆகும். இக்குற்றச்சாட்டு கிளப்பப்பட்டதிலிருந்து இது வரையிலும் நூற்றுக்கணக்கானவர்கள் அம்மருத்துவருக்கு எதிராக முறைப்பாடுகளைச் செய்து வருகிறார்கள். சிங்களப் பொது உளவியலை திருப்திப்படுத்துவதற்காக அம்மருத்துவர் சட்ட விரோதமாக சொத்துச் சேர்க்கும் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் மருத்துவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் பல புத்திபூர்வமற்றவை என்பதை வெளிப்படையாகச் சொன்ன காரணத்தினால் சுகாதார அமைச்சராகிய ராஜித சேனாதிரத்ன கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடந்திருக்கின்றன.
ஆனால் மருத்துவர் சாஃபிக்கு எதிரான குற்றாச்சாட்டுக்கள் ஆதரமற்றவை, அறிவு பூரவமற்றவை என்பதனை மகப்பேற்று நிபுணரும் பேராசிரியருமாகிய கேமந்த சேனநாயக்க ஓர் ஆங்கிலப் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தெளிவுபடுத்தியிருக்கிறார். இவர் கொழும்பு பல்கலைக் கழகத்தின் மகப்பேற்றுப் பிரிவின் பகுதித் தலைவர். இலங்கை மகப்பேற்று மருத்துவ நிபுணர் சங்கத்தின் முன்னாள் தலைவர். இக் குற்றச்சாட்டு மிகவும் சாத்தியமற்றது. ஏனெனில் ஏனைய மருத்துவர்களின் பிரசன்னத்தோடு தவறுதலாக ஒரு சிசேரியன் சத்திரசிகிச்சை செய்வதென்பது இலகுவானதல்ல. மேலும் பலோப்பியன் குழாயானது சாதாரண சிசேரியன் சத்திர சிகிச்சையின் போது வெளியில் தெரிவதில்லை என்பதனாலும் அதை சேதப்படுத்துவதற்கு கைகளை வயிற்றுக்குள் உட்செலுத்த வேண்டும் என்பதனாலும் அவ்வாறு நடைபெறுவதற்கு சாத்தியமில்லை. இந்த குற்றச்சாட்டானது முறையாகவும், விரைவாகவும் விசாரிக்கப்படாதவிடத்து இது இலங்கையின் மகப்பேற்று வைத்தியத் துறையில் சர்வதேச மட்டத்தில் பாராட்டப்படக்கூடிய அளவில் ஏற்படுத்தப்பட்ட சாதனைகளுக்கு ஒர் எதிர்மறையான விளைவை கொடுக்கும். இன்று இலங்கையில் 99 வீதமான பிறப்புக்கள் வைத்தியசாலைகளில் நடைபெறுகின்றது. இந்நிலையில் இந்த செய்தியால் மக்கள் வைத்தியசாலையில் குழந்தை பெறுவதற்குப் பயப்படக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கும்.’ என்று பேராசிரியர் கேமந்த சேனநாயக்க கூறியிருக்கிறார்.
இந்தப் பேட்டியின் பிற்பகுதியில் அவர் ஒரு புள்ளி விபரத்தைக் காட்டுகிறார்.அதாவது இலங்கைத்தீவில் சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பெறும் அளவு அதிகரித்து வருகிறது. தற்பொழுது 39 வீதமான பிரசவம் சத்திரசிகிச்சை மூலமே நடைபெறுகிறது. ஆனால் ஐக்கிய அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இதை விடக் குறைந்த விகிதத்திலேயே சிசேரியன் சிகிச்சை நடக்கிறது என்று அவர் கூறியிருக்கின்றார்.
முசுலிம்களின் சனத்தொகை பெருகுவதைக் குறித்து சிங்கள மக்கள் மட்டுமல்ல சில ஐரோப்பிய இனங்கள் மட்டுமல்ல தமிழ் மக்கள் மத்தியிலும் உரையாடல் உண்டு. தமிழ் மக்கள் மத்தியில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதான புள்ளி விபரங்களின் அடிப்படையில் ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னரான ஒரு சமூகச் சூழலில் இது போன்ற உரையாடல்கள் அதிகம் கவனிப்பைப் பெறுகின்றன. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு சிறு சந்திப்பில் இது பற்றி பிரசுதாபிக்கப்பட்டது. முஸ்லிம் சமூகத்தின் சனத்தொகைப் பெருக்கம் பற்றி கவலைப்படும் தமிழ் மக்கள் தாங்களும் தங்களுடைய சனத்தொகையைப் பெருக்கிக் கொள்வதைக் குறித்த ஏன் சிந்திப்பதில்லை? என்று கேட்கப்பட்டது.
கொழும்பில் வசிக்கும் மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் இது தொடர்பாகச் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எழுதியும், கதைத்தும் வருகிறார். ஆனால் தமிழ்ச் சமூகத்தில் குறிப்பாக படித்த நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் இது போன்ற கருத்துக்கள் எடுபடுவதாகத் தெரியவில்லை. குறிப்பாக படித்த நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் மகப்பேற்று வீதம் குறைந்து வருகிறது என்ற ஓர் அவதானிப்பு உண்டு. ஒன்று அல்லது இரண்டிற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட சிறிய குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன. இது தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த நாடுகளிலும் காணப்படும் ஒரு நிலமைதான். இதற்குக் காரணம் என்ன?
மூத்த பெண் சமூகச் செயற்பாட்டாளர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்..”முன்பு பிரசவத்திற்கு அரசக் கட்டமைப்புக்களான கிராம மட்ட மகப்பேற்று நிலையத்தில் பதிந்து மருத்துவத்தாதியின் கண்கானிப்பிற்கூடாக பெரும்பாலான பிரசவங்கள் அரச மருத்துவமனைகளை நோக்கியே செலுத்தப்பட்டன. ஆனால் மருத்துவத் துறையில் தனியார் மருத்துவ மனைகளின் எழுச்சியோடு பிரசவத்திற்காக அரச மருத்துவமனையை நாடும் நடுத்தர வர்க்கத்தின்; தொகை குறைந்து வருகிறது. குறிப்பாக தனியார் மருத்துவ மனைகளை நாடும் படித்த நடுத்தர வர்க்கத்தினர்; அங்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ நிபுணரின் வழிகாட்டுதலின் கீழ் தனியார் மருத்துவ மனைகளிலேயே பிரசவத்தை வைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு தனியார் மருத்துவமனையைத் தெரிந்தெடுக்கும் பலரும் சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பில்லை என்பதனால் சிசேரியனைத் தெரிந்தெடுப்பதில்லை. பதிலாகச் சுகப்பிரசவத்தில் இருக்கக் கூடிய வலி, ஆபத்து என்பவற்றைக் குறித்த அளவுக்கு மிஞ்சிய அச்சம் காரணமாக அவர்களாகவே சிசேரியனைத் தெரிந்தெடுக்கிறார்கள். இவ்வாறு சிசேரியனைத் தெரிந்தெடுக்கும் பெண்கள் ஆகக் கூடிய பட்சம் மூன்று பிள்ளைகளைத்தான் பெறலாம். ஏனெனில் வயிற்றில் மூன்று தடவைகள் தான் வெட்டலாம். இதுவும் மகப்பேற்று விகிதத்தைக் குறைக்கிறது என்று மூத்த பெண்கள் தெரிவிக்கிறார்கள்.
அதே சமயம் மருத்துவர்கள் தரும் தகவல்களின்படி அரச மருத்துவமனைகளில் காணப்படும் இடப்பற்றாக்குறை காரணமாக தனியார் மருத்துவ மனைகளைக் கர்ப்பிணிகள் நாடினாலும் பிரசவம் பிசகும் பொழுது இறுதியிலும் இறுதியாக அவர்கள் அரச மருத்துவமனைகளுக்கே வருகிறார்கள். எனினும் தனியார் மருத்துவ மனைகளைப் நோக்கிச் செல்லும் போக்கென்பது சிசேரியரின் விகிதத்தை கூட்டுகிறது என்பதனை நிரூபிப்பதற்கு புள்ளி விபரங்கள் தொகுக்கப்பட வேண்டும். குறிப்பாக படித்த நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் பிரசவம் தொடர்பாகவும், குழந்தை வளர்ப்புத் தொடர்பாகவும் காணப்படும் அதீத அக்கறையும், மகப்பேற்று விகிதம் குறைய ஒரு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் தமிழ்ப் பெண்கள் படிப்புக் காரணமாகவும், சீதனம் காரணமாகவும் திருமணம் செய்யும் வயது தள்ளிப்போகிறது. பிந்தித் திருமணம் செய்யும் பெண்கள் பிந்திப் பிள்ளை பெறும் பொழுது எழக்கூடிய உடல் மற்றும் உளவியற் பிரச்சினைகளும் அவர்களைச் சிசேரியனை நோக்கி செலுத்துகின்றன. அதோடு முன்பு வீடுகளில் குனிந்தெழும்பி செய்யப்பட்ட வேலைகளான தேங்காய் துருவுதல், அம்மியில் அரைத்தல், திரிகை அரைத்தல், மா இடித்தல், மீன் வெட்டுதல் போன்ற இன்னோரென்ன வேலைகளில் பலவற்றை இப்பொழுது பெண்கள் செய்வதில்லை. குறிப்பாக நவீன சமையலறையில் நின்றபடி வேலைகளைச் செய்யலாம். இதனால் அன்றாட வாழ்வில் குனிந்தெழும்பிச் செய்யப்பட்ட பல வேலைகளை இப்பொழுது செய்வதில்லை. இதுவும் சுகப்பிரசவத்தைக் கடினமாக்குகிறது.
இது போன்ற பல காரணங்களின் விளைவாகவும் மகப்பேற்று விகிதம் குறைந்து வருகிறது. முன்பு மூன்றிற்க்கு மேற்பட்ட பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த பலரும் தாங்கள் பிள்ளை பெறும் பொழுது ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் போதும் என்று கருதுகிறார்கள். இப்படியாக மகப்பேற்று விகிதம் குறைந்து செல்லும் ஒரு பின்னணிக்குள் முசுலிம் சமூகத்தின் மகப்பேற்று விகிதப் பெருக்கத்தைப் பார்த்து அஞ்சும் ஒரு பின்னணிக்குள் முஸ்லிம் சமூகத்தின் மீது அறிவு பூர்வமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன.
அவர்கள் பெருகுகிறார்கள். நாங்கள் சிறுத்துக்கொண்டு வருகிறோம் என்று மனம் புழுங்கும் சமூகங்கள் சீனர்கள் செய்வது போன்ற மகப்பேற்று வீதத்தை அதிகரிக்கும் விதத்தில் ஊக்குவிப்புக்களைச் செய்யலாம். பண உதவியாகவோ அல்லது தொழில் உதவியாகவோ அல்லது வீட்டு வசதியாகவோ அல்லது வேறெந்த சலுகையாகவோ ஊக்குவிப்புக்களைக் கொடுப்பதன் மூலம் தமிழ் மக்களும் உள்ளிட்ட மகப்பேற்று விகிதம் குறைந்த சமூகங்களின் சனத்தொகையைப் பெருக்கலாம். சீனா அதைச் செய்கிறது. ஏனெனில் அது ஓர் அரசு. ஆனால் ஈழத்தமிழர்கள் ஓர் அரசற்ற இனம். கடந்த பல தசாப்தங்களாக போர் ஈழத் தமிழர்களைத் தின்று தீர்த்துவிட்டது. அடுத்த படியாக புலப்பெயர்ச்சி ஈழத் தமிழர்களை சிதறடித்து விட்டது. இவ்வாறு போரினாலும் புலப் பெயர்ச்சியினாலும் நீர்த்துப் போன ஈழத் தமிழர்களின் மகப்பேற்று விகிதமும் குறைந்து வருவதை யார் தடுப்பது?
இனப் படுகொலையாளிகள் தமிழ் மக்களின் இனச்செறிவு நீர்த்துப் போவதையே விரும்புவார்கள். ஆனால் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரும் தமிழ் மக்கள்தான் உலகம் முழுவதிலும் உள்ள தமது நண்பர்களின் உதவியோடு தமது சமூகத்தையும், சனப்பெருக்கத்தையும் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக நிதி வளம் பொருந்திய புலம் பெயர்ந்த தமிழ் சமூகமும் தாயகத்தில் உள்ள மருத்துவ சமூகமும் இது தொடர்பில் நீண்ட கால நோக்கிலான ஒரு வேலைத் திட்டத்தை வகுக்க வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் சமூகங்கள் மத்தியிலும் தாயகத்திலும் பிள்ளைப்பேறு விகிதம் குறைவது தொடர்பில் திருத்தமான புள்ளி விபரங்களை முதலில் பெற வேண்டும். அப்புள்ளி விபரங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட ஒரு முடிவிற்குச் செல்லலாம். நிலமும் சிறுத்து சனமும் சிறுத்துக் கொண்டே போனால் எதிர்காலத்தில் நிலமை என்னவாகும்?