தொல்லியல் சான்றுகள்
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள நாங்கூரில், தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் செல்வகுமார், தலைமையில் பல்கலைக்கழக நல்கைக்குழுவின் நிதி உதவியுடன் அகழ்வாராய்ச்சி கடந்த மே 17-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கு பல்வேறு தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.
தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிப்பு
இது குறித்து முனைவர் செல்வக்குமார் கூறுகையில், ``நாங்கூர் ஒரு சங்ககால வாழ்விடமாகும். பட்டினப்பாலையிலும் பொருநராற்றுப்படையிலும் இவ்வூர் பெயர் இடம் பெற்றுள்ளது. கரிகாற்சோழன் நாங்கூர் வேளிற் பெண்ணை மணந்ததாகக் குறிப்பிடும் ஒரு செய்தியும் உள்ளது. தாய்லாந்தில் உள்ள தாக்குவா பகுதியில் கிடைத்த, ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழ் கல்வெட்டு, நாங்கூருடையான் என்பவர் அங்கு ஒரு குளம் வெட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதன் மூலம், அவர் நாங்கூர் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனத் தெரிகிறது.
மேலும், நாங்கூரைச் சுற்றி 11 வைணவ திவ்ய தேசத் தலங்கள் உள்ளன. இங்கு, பல சிவன் கோயில்களும் சோழர், பாண்டியர் கால கல்வெட்டுகளும் உள்ளன. அகழ்வாராய்ச்சியில் கறுப்பு சிவப்பு, கறுப்பு, சிவப்பு பானை வகைகளும், மீன் உருவம் பொறித்த பானையோட்டுக் கீறல் குறியீடுகள், இரும்புப் பொருள்கள் செய்யும் கொல்லர் பட்டறைகள், கூறை ஓடுகள், சுடுமண் பொம்மைகள், திருமால் உருவம் பொறித்த முத்திரைப் பதிவுகள், கண்ணாடி மணிகள், கல்மணிகள் போன்றவை கிடைத்துள்ளன. நாங்கூர் கி.மு.3-ம் நூற்றாண்டைச் சார்ந்த சங்ககால ஊர் என்பது உறுதியாகியுள்ளது. பிற்காலத்தில் திவ்யதேசங்களாகவும் தேவாரத்திருத்தலங்களாகவும் அறிய முடிகிறது" என்றார்.
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்பிரமணியன், தரங்கம்பாடி டேனிச் வரலாற்றை ஆராயும் அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் மார்க் கௌசெர் ஆகியோர் நாங்கூர் அகழாய்வு இடத்தைப் பார்வையிட்டனர். மேலும், பல முக்கிய வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.