அப்படி திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குடியேறிவர்கள் தான் நம்பூதிரிகள் என்ற பார்ப்பனர்கள். தங்களை பூமியில் வாழும் கடவுளாக பாவித்துக் கொண்டு, அரசன் முதல் அடித்தட்டு மக்கள் வரை தங்களுக்கு சேவை செய்ய வேண்டியவர்கள என்று பிரச்சாரம் செய்த நம்பூதிரிகள், திருவிதாங்கூர் சமஸ்தானத்தையே தங்கள் வசம் கொண்டு வந்தனர். நம்பூதிரிகள் என்றழைக்கப்படும் இந்த பார்ப்பனர்கள் வந்த பிறகு தான் சாதிக் கொடுமைகள் தலைதூக்கத் துவங்கியது.
நாடார், ஈழவர், முக்குவர், பரவர், புலையர் என சுமார் பதினெட்டு சாதிகள் தாழ்த்தப்பட்ட சாதிகளாக அறிவித்த பார்ப்பனர்கள், அவர்களின் மீது கொடுமைகளை கட்டவிழ்த்து விட்டனர். நம்பூதிர்களை கண்டால் நாடார்கள் 72 அடி தள்ளியே நிற்க வேண்டும். கோயில்களுக்கு செல்லக்கூடாது. பொதுக் கிணறு, குளம் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என தீண்டாமைக் கொடுமைகளை திருவிதாங்கூர் சமசுதான கோன் உதவியுடன் அரங்கேற்றினர் பார்ப்பனர்கள்.
நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்கு ஆடைகள் விசயத்திலும் மக்களை ஒடுக்கினார்கள். கீழ் சாதியினர் என்றழைக்கப்படுபவர்கள் யாரும் மேலாடை அணியக்கூடாது. முட்டுக்கு கீழே ஆடையும் அணியக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்தனர். பார்ப்பனர்களுக்கு முன்பு இந்த பதினெட்டு சாதி பெண்களும் திறந்த மார்புடன் தான் உலவ வேண்டும். பெண்கள் திறந்த மார்புடன் உலாவுவதே எங்களுக்கு அளிக்கும் மரியாதை என்றனர் பார்ப்பனர்கள். அதனை மீறி மேலாடை அணிந்தால், அந்த ஆடை கிழிக்கப்பட்டு மரண தண்டனை அளிக்கப்படும்.
பெண்களுக்கு மட்டுமல்லாமல், ஆண்கள் மீசை வைத்திருந்தால் அதற்கு வரி விதிக்கப்பட்டது. கைத்தடி வைத்திருந்தால் வரி, கைப்பிடி இருக்கும் குடை வைத்திருந்தால் அதற்கு வரி என கொடுமைகள் செய்தது பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்த திருவிதாங்கூர் சமசுதானம். இதில் கொடுமை என்னவெனில் சோறு என்ற வார்த்தையை கூட சொல்லக்கூடாது, கஞ்சி என்று தான் சொல்ல வேண்டும் என்றளவிற்கு அடக்குமுறைகள் ஏவப்பட்டது.
மார்பகங்களின் அளவிற்கேற்ப வரி !
பெண்கள் மார்பகங்களை காட்டுவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் மார்பகங்களின் அளவிற்கு ஏற்றவாறு வரி செலுத்த வேண்டும் என்றும் புதிய சட்டம் போடப்பட்டது. இதனை எதிர்த்து பல பெண்கள் போராடினார்கள். அதில் குறிப்பிடத்தக்க பெண் தான் வீரமங்கை நாஞ்செலி.
30 வயதான நாஞ்செலி கேரளாவின் சேர்தலா என்ற பகுதியில் வசித்து வந்தார். பார்ப்பனர்களின் இந்த கொடுமையை எதிர்த்து மார்பு வரி செலுத்த முடியாது என்று போராடி வந்தவர், வரியையும் செலுத்தாமல் இருந்தார். பல மாதங்களாக வரி செலுத்தாத நிலையில், வரியை வசூல் செய்யும் பிராவதியார் என்ற அதிகாரிகள் நாஞ்செலி மீது கோபமடைந்தனர்.
நாஞ்செலி வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் வரியை தருமாறு கேட்டனர். இருங்கள் வருகிறேன் என்று உள்ளே சென்ற நாஞ்செலி, வாழை இலையையும் கையில் ஒரு அரிவாளையும் எடுத்து வந்தார். என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்த்த அதிகாரிகள் மத்தியில், யாரும் எதிர்பாராத விதமாக, தான் வைத்திருந்த அரிவாளால், தனது இரண்டு மார்பகங்களையும் அறுத்து வாழையில் இலையில் வைத்து, மார்பகம் இருந்தால் தானே வரி கேட்பீர்கள் என்று கேட்க, அரண்டு போயினர் சமசுதான அதிகாரிகள்.
மார்பகத்தை வெட்டியதால் அதிக இரத்த போக்கு ஏற்பட்டு நாஞ்செலி இறந்து போனார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் செய்த தொடர் போராட்டத்தால், வேறு வழியில்லாமல் மார்பக வரியை இரத்து செய்தது திருவிதாங்கூர் சமசுதானம்.
நாஞ்செலியின் மார்பகம் அறுந்த உடலை பார்த்த அவளது கணவர் சிருகந்தன், அவரது இறுதி சடங்கில், உடலுக்கு தீ வைத்து விட்டு, அதன் மீது பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார். நாஞ்செலி வாழ்ந்த இடம் முலைச்சிபரம்பு என்று அழைக்கப்பட்டது.
பார்ப்பனர்களுக்கு எதிராக போராடிய எல்லா வரலாறுகளையும் தற்போது மறைத்து வரும் பா.ய.க அரசு, நாஞ்செலி வரலாறை வெறும் கதை என்றும் அதற்கு ஆதாரம் இல்லை என்றும் கூறி, கடந்த 2016 ஆம் ஆண்டு பாடப்புத்தகத்தில் இருந்த நாஞ்செலி வரலாறை நீக்கியது குறிப்பிடத்தக்கது.
[வரலாறு தகவல்கள் அடிப்படையில் உள்ள பதிவு]