குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 16 ம் திகதி செவ்வாய் கிழமை .

தமிழாற்றுப்படை: மறைக்க முடியா மலை!தமிழுக்கான மறைமலையடிகளின் துணை துாண்போன்றது!!- வைரமுத்து, கவிஞர்.

02.02.2049-16.02.2018-மறைமலையடிகளின் வரவு தமிழ் நெடுவெளியில் நிகழ்ந்த பெருநிகழ்வு என்றே கட்டுரைக்கிறேன். அவரை ஒரு நூற்றாண்டின் வெடிப்பு என்று சொல்லலாம். 1800 ஆண்டுகளாய்த் தமிழ் மொழியில் அப்பிக் கிடந்த அந்நியப் பாசிகளை முற்றும் களைய வந்த மொழிச் சலவையாளர் என்றும் கணிக்கலாம். இப்படிப்பட்ட முத்திரை வாக்கியங்களோடு இந்தக் கட்டுரையைத் தொடங்கக் காரணம் . 2ஆம் முறை வெளியிடும் பக்கல் 03.03.2019-17.02.2050

 

ஒன்பதாம் வகுப்போடு பள்ளியிலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு பைஞ் சிறுவன், பல்கலைக்கழகங்கள் ஆற்ற வியலாத பெரும் பணிகளைப் போற்றி முடித்துப் போந்ததற்கன்று...

தொல்காப்பியம் - திருக்குறள் போன்ற தலைத்தமிழ் நூல்களையும், சிவஞான போதம், சிவஞான சித்தியார், திருச்சிற்றம்பலக் கோவையார், நன்னூல் விருத்தி, இறையனார் அகப்பொருள் என்ற இடைத்தமிழ் நூல் களையும் 21 வயதுக்குள் நெட்டுருச் செய்து முடித்த நினைவாற்றலுக்குமன்று...

தாமே தோற்றுவித்துக்கொண்ட ‘இந்து மதாபிமான சங்க’த்தின் வாயிலாய் ஆற்றொழுக்கான பேச்சாற்றலைப் பெருக்கிக்கொண்டு ‘நாகை நீலலோசினி’, ‘பாஸ்கர ஞானோதயம்’, ‘திராவிட மந்திரி’ போன்ற இதழ்களில் எழுதிய விருப்பக் கட்டுரைகளாலும் மறுப்புக் கட்டுரை களாலும் தம் எழுத்தாற்றலை இளமைப் பருவத்திலேயே செழுமை செய்துகொண்டதற்குமன்று...

23 வயதிலேயே சென்னை கிறித்துவக் கல்லூரிக்குத் தமிழாசிரியராய் விளங்கும் தகுதி பெற்றமைக்குமன்று...

டி.கே.சி. என்னும் ரசிகமணிக்கும், நாவலர் சோமசுந்தர பாரதிக்கும், வையாபுரிப் பிள்ளைக்கும், திருப்புகழ்கிருஷ்ணசாமி அய்யருக்கும், தணிகைமணி செங்கல்வராய பிள்ளைக்கும் கல்லூரியில் பாடம் பயிற்றுவித்த தமிழா சான் என்ற தகைமைக்குமன்று...

தாம் பாடமாய்ப் பயிற்றுவித்த முல்லைப்பாட்டுக்கு உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உரையை மெச்சவியலாமல், 28 வயதில் தாமே ஒரு புத்துரை எழுதி மாணவர்க்குப் பயிற்றுவித்த மாண்புக்காகவுமன்று...

தமிழ் - ஆங்கிலம் சம்சுகிருதம் என்ற மும்மொழி களிலும் முறைபோகிய மூதறிவுக்காகவுமன்று...

வேதாசலம் என்று பெற்றோரிட்ட பெயரை மறைமலை என்று மாற்றிக்கொண்ட புரட்சிக்காகவுமன்று...

இலக்கியம் - சமயம் - தத்துவம் - வரலாறு - ஆய்வியல் - பண்பாட்டியல் - மருத்துவம் - மறைபொருள் முதலிய துறைகளில் 74 ஆண்டுகளுக்குள் 54 நூல்கள் படைத்த நுண்மாண் நுழைபுலத்துக்குமன்று...

பின் எற்றுக்கு?

தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தை என்ற ஆழ்ந்த அடையாளத்திற்காகவே; எம்மொழித் துணையும் இன்றித் தனித்தியங்கவல்ல செம்மொழி என்ற நம்பிக்கை யைத் தமிழுக்குத் தந்ததற்காகவே!

முத்தெடுக்கப்போனவன் பவளப் பாறையைக் கண்டு பிடித்த கதைபோல், மொழித் தூய்மை காக்கப்போய் இனப்பெருமை காத்ததுதான் மறைமலை அடிகளின் திருவரலாறு.

பன்னூறாண்டுகளாய்த் தமிழ் மீது படிந்து கிடந்த அயன்மொழிச் சாம்பல்களை ஓர் ஊழிக் காற்றாய் அவர் வந்து ஊதிப் பார்த்தபோதுதான் உள்ளிருந்த தணல் “நான்தான் தமிழ் தமிழ் தமிழ்” என்று தகித்தது. சொல் என்பது வெறும் ஒலிச்சுட்டோடு, பொருட்குறிப்போடு ஒழிந்துபோவதில்லை. ஒரு சொல் துலக்கப்படும்போது மறைக்கப்பட்ட வரலாற்றின் - பண்பாட்டின் மீட்டுருவாகவும் அது திகழ்கிறது என்பதும் தெற்றன விளங்கியது.

வேதாரண்யம் என்று சுட்டும்போது அந்த ஊரின் வயது - வரலாறு - பண்பாடு என்ற மூன்றும் நமக்கு முற்றும் விளங்கவில்லை. திருமறைக்காடு என்று சுட்டப்படுமிடத்து அதன் நூற்றாண்டுகளை நம்மால் நுகர முடிகிறது. கபிஸ்தலம் என்ற பெயரை அகழ்ந்து பார்த்தால் உள்ளே ‘குரங்காடுதுறை’ தோன்றுகிறது. அருணாசலம் என்ற சொல்லின் நதிமூலம் தேடி நகர்ந்தால் அது ‘திருவண்ணாமலை’யில் முடிகிறது. ஜம்புகேஸ்வரம் என்ற ஊர்ப் பெயரை ஊடுருவிப் பார்த்தால், உள்ளே ‘திருவானைக்கா’ தென்படுகிறது. இப்படித்தான் தமிழ் மொழியின் மீது வந்து படிந்த பிற மொழிகள் தமிழரின் வரலாற்றைத் துடைத்துவிட்டு, தம்மிலிருந்தே வரலாறு தொடங்கப்பெற வேண்டும் என்று சூழ்வினையாற்றின.

இந்தப் பெயர் மாற்றம் என்ற பெருஞ்செயலைப் போகிற போக்கில் புறந்தள்ளிவிட முடியாது.

மறைமலை என்ற அலை மட்டும் அடித்திராவிடில், காலப்போக்கில் தமிழ் இலக்கியங்களின் மூலங்களும்கூட முகம் மாறிப் போயிருக்கலாம். தொல்காப்பியம் ஐந்திர மாகியிருக்கலாம்; தொல்காப்பியர் திரணதூமாக்கினி ஆகியிருக்கலாம்; திருவள்ளுவர் ஸ்ரீவல்லபராய்த் திரிந் திருக்கலாம்; தமிழ்நாடு என்பது வட இந்தியாவின் தென்துண்டு என்று வரலாறு வளைக்கப்பட்டிருக்கலாம்.

சொல்லில் என்ன இருக்கிறது என்று சொல்வார்க்கு ஒன்று சொல்ல வேண்டும். ராமசாமி - ராமஸ்வாமி என்ற பெயர்களின் எழுத்து மாற்றத்தால் ஒருவன் தன் சொத்துகளை இழக்கிறபோது அறிவான் பெயரில் என்ன இருக்கிறது என்ற பேருண்மையை.

மறைமலையடிகளுக்கு எப்படித் தோன்றிற்று இந்தத் தனித்தமிழ்க் கருத்தியல்?

“விழுமிய தமிழ்ப் பழநூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளந்தைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்பதாயிற்று” என்று மறைமலையடிகள் முன்மொழிந்திருந்தாலும், அவர்தம் தொடக்க காலத்து உரைநடையில் வடசொற்கள் சிலவும் வாராமல் இல்லை. தனித்தமிழ் ஊற்று எப்போது வெடித்து வீறிட்டது என்பதற்குச் சுவையான நிகழ்வொன்று சுட்டப்பெறுகிறது அவரது வாழ்வில்!

அந்திக் கதிரவன் மண்ணைப் பொன் செய்யும் ஒரு மாலைப் பொழுதில், வீட்டு முற்றத்தின் வெளிச் சோலையில், கலைபயில் தெளிவும் கட்டுரை வண்மையுங்கொண்ட தம் நிறைதிருமகள் நீலாம்பிகையோடு உலாவிய காலையில், ‘ஒரு திருப்பாட்டுப் பாடு திருமகளே’ என்று கலைக் கட்டளையிடுகிறார் தமிழ்த்தந்தை.

வள்ளலார் பாட்டுக்கு இசைகூட்டுகிறார் நீலாம்பிகை.

“பெற்றதாய்தனை மகமறந் தாலும்

பிள்ளையைப் பெறுதாய் மறந்தாலும்

உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்

உயிரை மேவிய உடல்மறந் தாலும்

நமச்சி வாயத்தை நான்மற வேனே..”

இந்தப் பாடலைக் கண் மூடி, உயிர் திறந்து உள்வாங்கிக்கொண்டிருந்த அடிகளாரின் நெஞ்சில் ஆழப் பாய்ந்த தொரு மின்னல்.

“நீலா! இப்பாடலில், தேகம் என்றொரு வடசொல் வந்துளது. அவ்வொன்றையும் நீக்கி அவ்விடத்தில் ‘யாக்கை’ என்னும் தமிழ்ச் சொல் பெய்யப் பெற்றிருக்குமானால் இச்செய்யுளின் ஓசையின்பம் எவ்வளவோ மேம்பட்டதாக இருந்திருக்கும். பிறமொழிச் சொற்கள் கலப்பதால் தமிழின் இனிமை குறைகின்றது. அன்றியும், நாளடைவில் தமிழில் கலந்த பிறமொழிச் சொற்கள் நிலைபெற்று, அச்சொற்களுக்கு நேரே வழங்கிவந்த நம் அருமைத் தமிழ்ச் சொற்கள் மறைந்துவிடுகின்றன” என்றார். அந்த நொடி யில் உடைந்து சிதறியது ஆயிரக்கணக்கான ஆண்டு களாய்த் தமிழை அழுத்திக்கிடந்த அயற்பாறை. அன்று முதல் மறைமலையடிகளின் வாழ்வும் வாசிப்பும் மீள்பார்வைக்குள்ளாயின.

தம் எழுத்திலும் பேச்சிலும் அயற்சொல் விரவாத தனித்தமிழையே வாழ்நாள் முழுவதும் வழங்குவதென்று உறுதிகொண்ட மறைமலையார், தாம் அவ்வண்ணமே வாழ்ந்ததன்றித் தமிழர்களையும் அவ்வண்ணமே பயிற்றுவித்தார்.

‘எழுத்தெண்ணிப் பயின்றவர்’ என்பது ஆழங்காற்பட்ட கல்வியாளர் ஒருவர் அடையும் அதிகப்படியான அடைமொழியாகும். மற்றவர்க்கது பொருந்துமோ இல்லையோ அடிகளார்க்கு மட்டும் அப்படியே பொருந்தும்.

“12 நூற்பாக்களையும் 41 வரிகளையும் 216 சொற் களையும் 624 எழுத்துகளையும் கொண்டது சிவஞானபோதம்” என்று கணக்கிட்டு ‘எண்ணித் துணிக கருமம்’ என்ற குறளுக்கு மற்றுமொரு பொருளாய் விளங்கியவர் மறைமலை அடிகளார். சைவப் பொருளாராய்ந்த இந்தப் பெரும் பயிற்சிதான் முல்லைப் பாட்டையும் எண்ணிக் கற்கும் எண்ணம் தந்தது. 103 அடிகளையும் 500 சொற் களையும் கொண்ட முல்லைப்பாட்டில் 9 மட்டுமே வடசொற்கள் 2 மட்டுமே திசைச்சொற்கள் என்று ஆராய்ந்து அறிவித்த அறிஞர் பெருமான், முல்லைப்பாட்டில் இரண்டே விழுக்காடுதான் பிறமொழிச் சொற்கள் என்று அறுதியிட்டு உறுதிசெய்தார். ஆனால் 2,810 முதன்மைச் சொற்கள் கொண்ட திருவாசகத்தில், 373 வடசொற்களை ஆராய்ந்துகண்ட அடிகளார், திருவாசகத்தில் 7 முதல் 8 விழுக்காடு வடசொற்கள் நின்று நிலைத்திருப்பதைக் கண்டு சொன்னார்.

தனித்தமிழ் எண்ணம் தலையெடுத்த பிறகு, தாம் எழுதிய பழைய நூல்களிலும் அயன்மொழிச் சொற்களைக் களைய வேண்டும் என்று கட்டளையிட்டுக்கொண்டார். முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரையின் முதல் பதிப்புக்கும் நான்காம் பதிப்புக்கும் 28 ஆண்டு கால இடைவெளியிருந்தது. நான்காம் பதிப்பின் முகவுரையில் “முற்பதிப்புகளில் இடையிடையே விரவியிருந்த சிற்சில வடசொற்களையுங் களைந்தெடுத்து, இவ்வுரை நடையைச் சாலவுந் தூய தனித்தமிழாக்கியிருக்கின்றோம்” என்று எழுதியவரின் ஊட்டம் உணர்தற்குரியது.

அதன் பின்னர், அவரது பேச்சு மடைமாற்றம் கண்டது; எழுத்து நடைமாற்றம் கொண்டது. சுடர்கொண்ட சொல்லும் - உயிரள்ளும் பொருளும் - உணர்ச்சியும் - உண்மையும் கூடிக் கும்மியடிக்கும் இந்தக் கொழுந்தமிழ் நடை தமிழ்நாட்டு அரசியலையே புரட்டிப்போட்ட ஒரு புரட்சிக்கு வித்திட்டது. அடிகளாரின் எழுத்து புலவர் களுக்கு மட்டுமன்று - தலைவர்களுக்கும் ஒரு கோட்பாட் டுப் பொருளானது.

மறைமலையடிகள் ஊதியத்திற்கு எழுதிய பிழைப் பெழுத்தாளர் அல்லர்; எழுதியே பிழைக்கும் காலமும் அதுவன்று. “பட்டினப்பாலை ஆராய்ச்சியின் முதற்பதிப்பு முதன்முதல் 1906-ல் வெளிவந்தது. அப்போது அதில் 250 படிகளே பதிப்பிடப்பட்டன. அவ்விருநூற்றைம்பது படிகளுஞ் செலவாகப் பதின்மூன்றாண்டுகள் சென்றன” என்று அவர் எழுதுகிறபோது, ‘அச்சோ’ என்று எரிகிறது அடிவயிறு.

தமிழ் ஆட்சி பெறவும் தமிழர் மீட்சி பெறவுமே அவர் எழுத்தும் பேச்சும் மூச்சுள்ளவரை இயங்கின என்று உணர முடிகிறது.

தண்ணீரைத் தேடிப் பயணித்த கடப்பாரை, புதையலில் முட்டிப் பொறி தட்டியதுபோல, மொழி மீட்சிக்குத் தோன்றிய தனித்தமிழ் இயக்கம், இனமீட்சியில் போய் முடிந்தது.

திராவிட இயக்கத்தைக் கொழுந்துவிட்டு எரியச் செய்த கொள்கைகளுள் ஒருபாதி இனம்; மறுபாதி மொழி. அந்த மொழிக்கொள்கை மறைமலையடிகளின் மூளைக் குழந்தை என்பதை மறைக்கவோ மறுக்கவோ இயலாது. ஒருவரைப் பாராட்டுவதில் பணத்தைவிடச் சிக்கனமாய்ச் சொற்களைப் பயன்படுத்துகிற பெரியார், மறைமலை யடிகளைத் தன் கரமென்று சொல்லியிருக்கிறார்.

“மறைமலையடிகளும் எம்.எல்.பிள்ளையும் எனக்கு வலக்கையும் இடக்கையும் போன்றவர்கள். எனக்குப் பகுத்தறிவுப் பாதையில் ஏதேனும் அய்யம் உண்டாகும் போதெல்லாம் அவர்களிடமே தீர்த்துக்கொள்வேன்” என்ற பெரியாரின் கூற்றை நான் பெரிதினும் பெரிதாய்க் கருதுகிறேன்.

தனித்தமிழ் என்ற கருத்தியலைக் கண்டறிந்ததோடு நின்றிருந்தால் மறைமலையடிகளுக்கு இந்த மாண்பு இருந் திருக்காது. தம் செம்மாந்த புலமையால் அதைச் செயற் படுத்தி, நிறுவனமாக்கி நிலைப்படுத்தியதே அவரது மாட்சிக்குச் சாட்சி. அவர் பெற்றிருந்த மும்மொழிப் புலமை என்ற பெருந்தகுதி அவர்கொண்ட கொள்கையை அறிவியல் அடிப்படையில் நிறுவி முடிக்கப் பெருந்துணை புரிந்தது.

ஒரு மொழியை ஊடறுத்துப் பிறமொழிச் சொற்கள் உள்நுழைவது எதனால் நேர்கிறது? ஓர் இனத்தார் தம் மொழிவெளி கடந்து பிறவெளி புகுந்தாலும், பிறமொழி பேசுவார் தம்வெளி கழிந்து உள் நுழைந்தாலும் பண்பாட்டு வணிகப் பரிமாற்றங்கள் எவ்வழியில் நிகழ்ந்தாலும் ஒரு மொழி பிறமொழியை உள்வாங்கியே தீரும். ஆனால், அதன் விழுக்காடு எவ்வளவு - விளைவுகள் என்னென்ன என்பதையே ஒரு மொழி வல்லான் கருதுவான்; கவலை கொள்வான்.

மாற்றம்தானே மானுடக் கோட்பாடு. மொழியும் ஓர் உயிரிதானே! ஆதலால் அதுவும் மாறித்தானே ஆக வேண்டும். பிறமொழிக் கலப்பால் ஒரு மொழி செழுமையுறும்தானே என்று எதிர்மறைச் சிந்தனைகளை உண்மைபோல் தோற்றுவிப்பார் சில உரை வல்லார். இந்தத் தவறான கருத்தை உடைத்தெறிய வேண்டும்; அதற்குத் தருக்க அறிவு வேண்டும். கொண்ட கொள்கையை நிறுவத்தக்க தருக்க அறிவு வாய்க்கப்பெறாததால், தமிழர்கள் தங்கள் நீண்ட வரலாற்றில் நிறைய இழந்திருக்கிறார்கள்.

மறைமலையடிகளார் தமிழுக்கு வாய்த்த ஒரு தருக்கப் பேரறிஞர். ‘தனித்தமிழ் மாட்சி’ என்னும் கட்டுரையில் அவர் எழுதுகிறார் :

‘மாறுதல் என்னுஞ் சொல்லால் உணர்த்தப்படும் பொருள் என்னை? ஒன்று தன் றன்மை திரிந்து மற்றொன்று ஆதலா? அல்லது அது தன் இயல்புக்கு ஏலாதவற்றொடு கலக்கப்பெற்றுத் தன்நிலை குலைதலா? அல்லது தன்னிலைக்கு ஏற்றவாறு பிறவற்றின் உதவியால் தானே வரவர வளர்ந்து திரிபுறுதலா? எனின், இம்மூன்றும் அம்மாறுதல் என்னுஞ் சொல்லுக்குப் பொருளேயாம்.

முதலிற் சொன்ன பொருளின்படி, தவளையினத்திற் சேர்ந்த சில சிற்றுயிர்களும் பட்டுப்பூச்சி முதலியனவும் முதலில் ஒருவகை யுருவத்திலிருந்து, பிறகு அவ்வுரு முழுதுந் திரிந்து தவளையாகவும் பட்டுப்பூச்சி முதலியனவாகவும் மாறுகின்றன. இரண்டாவது சொன்ன பொருளின்படி, மக்கள் முதலான எத்தகைய உயிர்களுந் தம்முடம்பின் இயல்புக்கு ஏலாத நோய்ப் புழுக்களோடும் பாம்பின் நஞ்சையொத்த நச்சுப் பொருள்களோடுங் கலக்கப் பெறுமானால் தம்முடம்பின் நிலை குலைந்து மாறி விரைவில் அழிந்துபோகின்றன. இனி, மூன்றாவது சொன்ன பொருளின்படி, உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுந் தத்தம் நிலைக்கு ஒத்த பொருள்களின் சேர்க்கையால், தமது நிலை கெடாமலே வளர்ந்து திரிபெய்தி வருகின்றன.

தம் நிலைகுலைந்து மாறுதலாகிய வேண்டாத தொன்றைக் கடைப்பிடியாய்ப் பிடித்துக்கொண்டு, அதன்படி நமது அருமைச் செந்தமிழ் மொழியுந் தனது தூய நிலை குலைந்து மாறுதல் அடையவேண்டும் என்று உரைப்பது அறிவுடையோரால் ஏற்றுக்கோடற்பாலதாமோ?’

தவிர்க்க முடியாத இந்தத் தருக்கம், தமிழ்ப் பகைவர்களைக் கட்டிப்போட்டது. பெய்த பெருமழையின் பேரீரம் வெவ்வேறு தாவரங்களில் காலங்கடந்தும் காட்சிப்படுவதுபோல் மறைமலையடிகள் அன்று கொளுத்திப்போட்ட நெருப்புதான் இன்றளவும் வெவ்வேறு திரிகளில் விளக்குகளாய் விளக்கமுற நிற்கிறது.

முதலில் அது ஊடக மொழியை உருமாற்றிப்போட்டது. சில ஏடுகள் ‘ஜல சப்ளை ரத்து’ என்று தலைப்பிட்டுக்கொண்டிருந்தன. இதனுள் ஜலம் - சம்ஸ்கிருதம்; சப்ளை - ஆங்கிலம்; ரத்து - உருது. இது ‘தண்ணீர் வரத்து நிறுத்தம்’ என்று தமிழாகியது மறைமலையடிகளால்.

திராவிட இயக்க மேடைகளும் மறைமலையடிகளின் தாக்கத்தால் ஆக்கமுற்றன. ‘அக்ராசனர்’ தலைவரானார்; ‘மகாஜனங்கள்’ பொதுமக்கள் ஆயினர்; ‘பிரேரணை’ தீர்மானமாயிற்று; ‘நமஸ்காரம்’ வணக்கமாயிற்று. மாநில அலுவல் மொழியாகத் தமிழாவதற்கு ஒரே வழி ஆங்கிலத்தை எழுப்பிவிட்டுத் தமிழ் ஏறி அமர்வதுதான். ‘முனிசிபாலிட்டி’ நகராட்சி ஆயிற்று; ‘கார்ப்பரேஷன்’ மாநகராட்சி ஆயிற்று; ‘கமிஷனர்’ ஆணையாளரானார்; ‘ஜி.ஓ’ அரசாணையானது; ‘சர்க்குலர்’ சுற்றறிக்கை ஆனது. மறைமலையடிகளின் நீண்டு விழுந்த நிழல்களே இவையெல்லாம்.

அறிஞர் அண்ணா இந்த மண்ணுக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியதும், தமிழ்நாட்டுத் தலைநகரத்திற்கு கருணாநிதி ‘சென்னை’ என்று பெயர் சூட்டியதும் மறை மலையடிகளால் நேர்ந்த மங்கலங்களாகும்.

மாறிவரும் உலகச் சூழலில் முற்றிலும் தனித்தமிழால் இயங்கவியலாது என்பதையும் அடிகளார் அறிவார். அதற்கு ஒரு புறனடையும் வழங்கியிருக்கிறார்.

“இன்றியமையா இடங்களில் வடசொற்கள் சிலவற்றை எடுத்தாளுதல் வழுவென்று யாங் கூறவில்லை. பொருள்களைக் குறிப்பிடுவதற்கு ஏராளமான தமிழ்ச் சொற்கள் இருக்கையில் அவற்றை விடுத்துப் பிறவற்றைப் புகுத்தலையே பெரியதொரு குற்றமாக நினைக்கின்றோம்” என்று ‘தனித்தமிழ் மாட்சி’யில் எழுதுகிற அடிகளார், தாம் உள்ளூர்த் தமிழர் மட்டுமல்லர்; உலக மானுடன் என்பதை உறுதிசெய்கிறார்.

மறைமலையடிகளின் தேவை இன்னும் தீர்ந்துவிடவில்லை. உலகமயமாதல் என்ற ஊழி அலை உலகத்தின் கரைகளிலெல்லாம் விசிறியடிக்கும் இந்த வேளையில் தான் தூணைப்போல் தேவைப்படுகிறது மறைமலை யடிகள் துணை.

தனித்தமிழ் இயக்கத்தின் ஊற்றுக்கண்களைத் தமிழர்கள் காலந்தோறும் காத்துவர வேண்டும்.

தமிழ் மொழியின் பெயர்ச் சொற்களெல்லாம் தமிழ்தானா என்ற வினாவுக்கு முன்னால், தமிழின மாந்தர்களின் பெயர்களெல்லாம் தமிழ்தானா என்று ஓர் எரியும் வினாவோடு நம்மை எதிர்கொள்கிறது நிகழ்காலம். தமிழ்நாட்டு உழைக்கும் மக்களே தம் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டி வழிவழியாக வழங்கினார்கள். திராவிட இயக்க எழுச்சியில் தனித்தமிழ்ப் பெயர்கள் வீடுகள்தோறும் விளங்கின. தற்காலத்தில் பொருளறியா ஓசைகளும் கிரந்த எழுத்துக்களின்றி இயங்க முடியாத ஒலிக்கூட்டமும் தமிழர்களின் பெயர்களாகத் துலங்கத் தொடங்கியிருப்பது இன வரலாற்றுக்கு எதிர்மறையாகும். ஒலியும் பொருளும் அழகும் கொண்ட நற்றமிழ்ப் பெயர்களை நாடுதோறும் விதைக்க வேண்டும்.

அனிச்சம், ஆதிரை, இன்பா, ஈழச்செல்வி, எழிலி, ஏந்திழை, உறங்காமலர், ஊஞ்சல்நிலா, ஐம்பொன், ஒண்டொடி, ஓவியா என்பன போன்று பெண்பாற் பிள்ளை களுக்கும், அன்பன், ஆதவன், இனியன், ஈழவன், என்னவன், ஏரழகன், உறங்காப்புலி, ஊரன், ஐயன், ஒப்பிலான், ஓவியன் என்பன போன்று ஆண்பாற் பிள்ளைகளுக்கும் பெயர் சூட்டினால் நாளடைவில் அந்த ஓசை மீதே நமக்கு ஆசை வரும்.

உலகச் சந்தையை வென்றெடுக்க வேண்டுமென்ற வேட்கையில் உள்ளூர் அடையாளங்களைத் தொலைத்துவிடக் கூடாது. முத்துக்குளிக்கும் அவசரத்தில் மூச்சை இழந்துவிடக் கூடாதல்லவா?

தமிழர்கள் அனைவரும் தமிழ்ப் பெயர் சூடிக்கொண்டால், பள்ளி - கல்லூரி ஆவணங்களில் - அடையாள அட்டைகளில் - குடும்பக் கோப்புகளில் - வங்கிகளில் - அரசு - தனியார் அலுவலகங்களில் - நீதிமன்றங்களில் - காவல் நிலையங்களில் - ஊடகங்களில் - பயணங்களில் - உலகவழக்கில் எட்டுக் கோடித் தமிழ்ப் பெயர்கள் எல்லா நாட்களிலும் புழங்கப்பெறும். அந்த எட்டுக் கோடிப் பெயர்ச் சொற்களின் மீது ஒரு மொழி தன்னை ஊன்றி நடக்கும் உறுதி கிட்டும்.

தமிழர்காள்! இப்போது துலங்கும் பெயர்கள் இப்படியே துலங்கட்டும்; இனிவரும் தலைமுறைகளுக்குத் தமிழ்ப் பெயர்களே விளங்கட்டும்.

மீண்டும் இயற்கைக்குத் திரும்ப வேண்டும் என்று சுற்றுச்சூழல் சொல்கிறது. மீண்டும் தாய்மொழிக் கல்விக்கே திரும்ப வேண்டுமென்று உலகக் கல்விக்கொள்கை உரக்கக் கூவுகிறது. நாமும் திரும்ப வேண்டும். மறைமலைகள் மீண்டும் வேதாசலங்களுக்குத் திரும்ப வேண்டாம்; வேதாசலங்கள் மறைமலைகளுக்குத் திரும்பட்டும்!

- வைரமுத்து, கவிஞர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.