குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

சிந்துப்பா மேடை - 2

சிந்துப்பா மேடை - 2

 

கிளிக்கண்ணி

 

விண்மகன் கிளிக்கண்ணி

 

விண்ணின் திருமகனார்

மண்ணில் பிறந்தாரடீ!

கண்ணில் நிறைத்தேனடீ - கிளியே!

பண்ணில் குழைத்தேனடீ!

 

பனிநிறை காலத்திலே

நனிதேவர் வந்தாரடீ!

கனிச்சுவை ஊறுதடீ! - கிளியே!

தனிச்சுவை ஏறுதடீ!

 

அந்தத் தொழுவத்திலே

வந்து சிரித்தாரடீ!

விந்தை விளைத்தாரடீ - கிளியே!

சிந்தை நிலைத்தாரடீ!

 

அன்பைப் பொழிந்திடவே

பண்பர் மலர்ந்தாரடீ!

துன்பம் துடைத்தாரடீ - கிளியே!

இன்பம் படைத்தாரடீ!

 

வேதம் இசைத்திடவே

துாதர் உதித்தாரடீ!

ஓத எழுவோமடீ - கிளியே!

பாதம் பணிவோமடீ!

 

பொல்லா உலகிடையே

நல்லார் நடந்தாரடீ!

கல்லால் துவண்டாரடீ! - கிளியே!

முள்ளால் வதைந்தாரடீ!

 

பாவச் சுமையகற்றத்

தேவர் சுடர்ந்தாரடீ!!

ஏவல் புரிந்தாரடீ - கிளியே!

காவல் தொடர்ந்தாரடீ!

 

நேயம் உரைத்திடவே

ஆயர் அலர்ந்தாரடீ!

தாயாய்த் திகழ்ந்தாரடீ - கிளியே!

ஓயா துழைத்தாரடீ!

 

பேணிப் புவியணைக்க

ஞானி ஒளிர்ந்தாரடீ!

ஆணிச் சிலுவையினைக் - கிளியே!

மேனி தரித்தாரடீ!

 

தேவி திருவயிற்றில்

மேவி எழுந்தாரடீ!

கூவி அழைத்தாரடீ - கிளியே!

ஆவி அளித்தாரடீ!

 

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

 

இந்தக் கிளிக்கண்ணியில் நான்கு அரையடிகள் ஓரெதுகையில் அமையும். நேரசையில் தொடங்கும் அரையடி 7 எழுத்துக்களையும், நிரையசையில் தொடங்கும் அரையடி 8 எழுத்துக்களையும் பெற்றுவரும். ஒற்றுகளை நீக்கி எழுத்துகளை எண்ண வேண்டும். மூன்றாம் அரையடிக்குப் பின் கிளியே - தனிச்சொல் வரும். இச்சொல்லைக் கணக்கில் சோ்க்கவேண்டாம்

 

இந்த வகையில் விரும்பிய பொருளில் ஐந்து கிளிக் கண்ணிகள் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்:

கம்பன் கழகம் பிரான்சு

உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

26.12.2018