குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய்க்கு பாடிய பாடல்

26.08. 2018-பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய்க்கு இறுதிச்சடங்கு செய்தபோது பாடிய பத்து பாடல்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். “அவருடைய ஈமச்சடங்கை நான் எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன்” என்று வாக்களித்திருந்த படி பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டிற்கு வந்து சேர்ந்தார்.

அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதையடுக்கி, “ஐயிரண்டு திங்களாயங்கமெலா நொந்து பெற்று” என்று பாடத் தொடங்கி, தம் தாயாரை தீயுண்ணச் செய்து தம் தாய்க்குரிய கடனைக் கழித்தார்.

அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.

தாயாருக்குத் தகனக்கிரியை செய்யும்போது பாடியவை.

 

1. ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்

பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்ய இரு

கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை

எப்பிறப்பில் காண்பேன் இனி ?

 

2.முந்தித்தவம் கிடந்து முந்நூறு நாள் அளவும்

அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் – தொந்தி

சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ

எரியத் தழல் மூட்டுவேன் ?

 

3. வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும், தோள்மேலும்

கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து – முட்டச்

சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ

விறகிலிட்டுத் தீமூட்டுவேன் ?

 

4. நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை

தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே – அந்தி பகல்

கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ

மெய்யிலே தீமூட்டுவேன் ?

 

5. அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு

வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் – உருசியுள்ள

தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ

மானே என அழைத்த வாய்க்கு ?

 

6. அள்ளி இடுவது அரிசியோ ? தாய் தலைமேல்

கொள்ளிதனை வைப்பேனோ ? கூசாமல் மெள்ள

முகம்மேல் முகம்வைத்து முத்தாடி “என்றன்

மகனே” என அழைத்த வாய்க்கு ?

 

7. முன்னை இட்ட தீ முப்புரத்திலே;

பின்னை இட்ட தீ தென் இலங்கையில்;

அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

யானும் இட்ட தீ மூள்க! மூள்கவே!

 

8. வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்

ஆகுதே பாவியேன் ஐயகோ! – மாகக்

குருவிபறவாமல் கோதாட்டி என்னைக்

கருதி வளர்த்தெடுத்த கை.

 

9. வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில்

வந்தாளோ! என்னை மறந்தாளோ – சந்ததமும்

உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்துஎன்

தன்னையே ஈன்றெடுத்த தாய் ?

 

10. வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்!

நேற்றிருந்தாள்; இன்று வெந்து நீறானாள்; – பால்தெளிக்க

எல்லீரும் வாருங்கள்! ஏதென்று இரங்காமல்

எல்லாம் சிவமயமே யாம்!

 

துறவியே ஆகிப் போனாலும் ஒவ்வொரு ஆண்மகனும் தம் தாய், தந்தையருக்கு செய்யும் கடமைகளை மறவாது நிறைவேற்றி முன்னோர்கள், ஞானிகள், சித்தர்கள் ஆகியோரின் ஆசிகளை பெற்றுய்வோம்.

 

வாழ்க வையகம்!

வாழ்க வளமுடன்!!