குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

எரிகல் பொழிவால் கிடைக்கும் தங்கம் மற்றும் பிளாட்டினம்

சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமி உருவாகும் பொழுது அதன் மய்யத்தில் உருகிய இரும்பு கூழ்கள் அதிகளவில் இணைந்து புவி மையத்தை தோற்றுவித்தன. இரும்புடன் தங்கம் மற்றும் பிளாட்டினம் உள்பட பல விலைமதிப்பற்ற தனிமங்களும் மய்யத்தில் சேர்ந்தன. ஆனால் தற்பொழுது நமக்கு கிடைக்கும் தங்கம் மற்றும் பிளாட்டினம் ஆகியவை எவ்வாறு கிடைக்கின்றன என்றால் பூமி தோன்றி பல வருடங்களுக்கு பின்பு 20 பில்லியன் டன்களுக்கு மேற்பட்ட எடை கொண்ட எரிகல் ஒன்று பூமியின் மீது மழை போன்று பொழிந்துள்ளது.

அதிலிருந்து தான் இன்றளவும் கிடைத்து கொண்டிருக்கும் தங்கம் மற்றும் பிளாட்டினம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பல தனிமங்கள் வந்துள்ளன என்ற புவியியலாளர்களின் கூற்றை நிரூபிக்கும் விதமாக பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்களான வில்போல்ட் மற்றும் எலியட் ஆகியோர் பூமியைப்பற்றி ஆய்வொன்று மேற்கொண்டனர். இதற்கு ஆதாரமாக கிரீன்லாந்தில் கிடைத்த 4 பில்லியன் வருடத்திற்கு முந்தைய பாறை படிவங்களை ஆராய்ந்தனர்.

அதில், மிக அரிதான தனிமமான டங்ஸ்டனின் பல அய்சோடோப்புகள் கண்டறியப்பட்டன. அவை தற்பொழுதுள்ள பாறைகளில் கிடைத்த அய்சோடோப்புகளுடன் மிக சிறிய அளவில் அதாவது ஒரு மில்லியனுக்கு 15 பங்கு என்ற அளவில் மட்டுமே வேறுபாட்டை கொண்டிருந்தன. எனவே இந்த ஆய்வானது, புவியியலாளர்களின் கருத்தின்படி, பூமியின் மீது எரிகல் மழையாக பொழிந்த பின்பு தான் தங்கம் போன்ற மதிப்புமிக்க பொருள்கள் கிடைக்கின்றன என்பதற்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.