வருமானவரித்துறையின் பிடியில் சிக்கிய கரூர் அன்புநாதனை பயன்படுத்தி அவருக்கு பணம் கொடுத்த ஓ.பி.யையும், நத்தம் விசுவநாதனையும் வருமானவரித்துறை மடக்கியது.
அதே பாணியில் ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் மாஃபா பாண்டியராயனையும் வழிக்கு கொண்டு வந்தது.
அருண்யெட்லியின் நெருங்கிய நண்பரான மைத்ரேயன் மூலம் பத்துக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், பதினோரு எம்.எல். ஏ.க்கள் என அ.தி.மு.க.வை அருண்யெட்லியும் பா.ய.க.வும் உடைத்தது.
ஆனாலும் கூவத்தூர் திட்டம் மூலம் எடப்பாடியை முதல்வராக்கினார் சசிகலா.
அ.தி.மு.க. உடைப்பு முயற்சி தோல்வி அடைந்ததை பற்றி அருண் யெட்லியிடம் பேசிய மைத்ரேயன், எம்.எல்.ஏ.க்களுக்கு சசிகலா தரப்பு 3 கோடி ரூபாய் பணமும், 3 கிலோ தங்கமும் கொடுத்தது. அதனால் அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடியை ஆதரித்தார்கள்' என்றார்.
மைத்ரேயன் பேச்சை பழனியில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் நத்தம் விசுவநாதன் எதிரொலித்தார்.
மூன்று கிலோ தங்கத்திற்கும் மூன்று கோடி ரூபாய்க்கும் ஆசைப்பட்டு மக்களின் நன்மதிப்பை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இழந்து விட்டார்கள். இனி அவர்களால் கவுன்சிலராகக் கூட ஜெயிக்க முடியாது என்றார்.
இதன் பின்னணியை விசாரித்தோம்.கூவத்தூரில் அ.தி.மு.க. எம். எல்.ஏ.க்களை சசிகலா தங்க வைத்திருக்கும்போதே எம்.எல்.ஏ.க்களின் வங்கிக் கணக்குகள், அவர்களது உறவினர்களின் வங்கி கணக்குகளையெல்லாம் தங்களது கண்காணிப்பில் கொண்டு வந்தனர்.
சபாநாயகர் தனபால், நிதி அமைச்சர் யெயக்குமார், தி.நகர். எம்.எல்.ஏ. சத்யா போன்றவர்களின் வங்கிக்கணக்கு விபரங்களின் அடிப்படையில் அவர்களது ஆடிட்டர்களிடம் சில கேள்விகளையும் முன் வைத்தனர்.
அந்த ஆபரேசனின் விளைவாகத்தான் மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் கூவத்தூரிலிருந்து தப்பித்து வந்தார்.
வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கைகளை சசிகலா டீம் டெக்னிக்கலாக எதிர்கொண்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டுப் போடுவதற்கு முன்பு எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு ஒரு பெரிய தொகையை அனுப்பி வைத்தது.
அதன் அடிப்படையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றார்.
எம்.எல்.ஏ.க்களின் மனைவி மற்றும் குடும்பத்தார் தங்க நகைகளில் மின்னுகிறார்கள்' என்று ஓ.பி.எசு. குழு கொடுத்த தகவல் சரியானதுதானா என வருமானவரித்துறை விசாரித்த போது உண்மை என தெரிந்தது.
தங்கம் எப்படிப் போனது என நகைக் கடைகளை வருமானவரித்துறை ஆராய்ந்தது.
நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு, ஒரு சவரன் நகை என்றாலும் கூட அதற்குரிய சான்றிதழ்கள் இல்லாமல் விற்கக்கூடாது என நகைக்கடைகளுக்கு வருமானவரித்துறை கட்டுப்பாடு விதித்தது.
இதையெல்லாம் மீறி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தாருக்கு சசிகலாவின் ஆட்கள் தங்க நகைகளை அளித்திருப்பார்கள் என புலனாய்வு செய்தது வருமான வரித்துறை.
யெயலலிதா உயிருடன் இருந்த போதே, அ.தி.மு.க. பிரமுகர்களான நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமி ஆகியோர் வீடுகளில் வருமானவரித்துறை ரெய்டு நடத்திய போது அவர்களுக்கு நெருக்கமான ஒரு நகைக்கடையிலும் சோதனை நடத்தியது.
அமைச்சர்கள், ஐ.பி.எசு. அதிகாரிகள் பலரின் லஞ்சப்பணம் வைரங்களாக அந்த நகைக் கடையில் மாற்றப்படுகிறது என புகார் சொல்லப்பட்ட நகைக் கடைதான் இந்தியாவிலேயே வைர வியாபாரத்தில் சிறந்து விளங்கும் கீர்த்திலால் ஜுவல்லரி.
அந்த நகைக் கடையிலிருந்து 500 கிலோ தங்கம் 121 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு விநியோகிக்கப் பட்டுள்ளது என வருமான வரித்துறை கண்டுபிடித்தது.
கீர்த்திலால் நகைக் கடையின் உரிமையாளரை விசாரணைக்கு அழைத்தது. ஏற்கனவே வருமானவரித்துறையின் வழக்குகளில் சிக்கியுள்ளதால் உண்மையை ஒப்புக் கொண்டார் கீர்த்திலால் உரிமையாளர்.
22 கரட் மதிப்புள்ள தங்கத்தின் இன்றைய மதிப்பு ஒரு கிராமுக்கு 2853 ரூபாய். ஒரு கிலோ 28 லட்சத்து 53,000 ரூபாய். மொத்தம் 500 கிலோ தங்கத்தை 142 கோடியே 65 லட்சத்துக்கு வாங்கினேன்.
அதை 121 எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுத்தார்கள். ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் 4.13 கிலோ வீதம் சராசரியாக கொடுத்தேன். அதன் மதிப்பு 1 கோடியே 18 லட்ச ரூபாய்.
அ.தி.மு.க. கட்சி அலுவலகம், அவர்கள் நடத்தும் திருமண விழாக்களுக்காக என்னிடம் தங்கம் வாங்கும் தமிழக அரசும் தாலிக்கு தங்கம் வழங்குவதற்கு என்னிடம் தங்கம் வாங்கும். அதனால் அ.தி.மு.க. கட்சி தலைமை கேட்டதால் தங்கம் கொடுத்தேன்.
அவர்கள் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் அவர்கள் குடும்பத்தில் மகள்கள் இருந்தால் கொஞ்சம் அதிகமாகவும், ஆண்பிள்ளைகள் இருந்தால் குறைவாகவும் கொடுத்தார்கள்.
இவற்றையெல்லாம் அந்தந்த எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கே கொண்டு போய் கொடுத்தோம். இந்த தங்கத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பமும் 400 சவரன் நகை செய்து கொள்ளலாம்.
ஆனால் இதுவரை எனக்கு சேர வேண்டிய 142 கோடியே 65 லட்ச ரூபாயை அ.தி.மு.க. தலைமை தரவில்லை என விசாரணையில் சொல்லியுள்ளார்.
அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டு "இந்த 500 கிலோ தங்கத்திற்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் என்ற கண்டிசனுடன் அனுப்பி வைத்துள்ளது வருமானவரித்துறை.
இதுவரை இரகசியமாக உள்ள வருமானவரித்துறையின் இந்த விசாரணை விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.