சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவில் மட்டுமல்ல பொதுமக்களும் ஆதரவு தந்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வீட்டுக்கு வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் இதுநாள் வரை தீபாவை ஆதரித்து வந்த அதிமுக தொண்டர்கள் இப்போது முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இல்லம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் தீபா இணைந்து செயல்பட வேண்டும் என அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இன்று காலை முதலே தொடர்ந்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் கிரீன்வேஸ் சாலை இல்லம் முன்பாக அணி அணியாக அதிமுகவினர் திரண்டு வருகின்றனர். அதேநேரத்தில் சசிகலா இருக்கும் போயஸ் கார்டன் பங்களா பகுதியானது ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது.