பதில்:- யெயலலிதா முதல் அமைச்சராகப் பதவியேற்ற நிகழ்ச்சிக்கு தி.மு.கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர், தம்பி மு.க.ஸ்டாலின் அரசியல் நாகரிகம் கருதிச் சென்றிருந்தபோது, அவர் கூட்டத்தோடு கூட்டமாக அமர வைக்கப்பட்டதையும், எவ்வித “புரொட்டக்கால்” அம்சங்களும் அனுமதிக்காத பலர், முதல் வரிசையில் இடம் பெற்றிருந்ததையும் சுட்டிக்காட்டி நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
உடனே யலலிதா வெளியிட்ட அறிக்கையில், “மு.க.சுடாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து, அதிகாரிகள் தன்னிடம் முன்பே தெரிவிக்கவில்லை எனவும், அப்படி தெரிவித்திருந்தால் அவரை முதல் வரிசையில் அமர வைக்க விதிகளை தளர்த்தி ஏற்பாடு செய்ய உத்தரவிட்டிருப்பேன் என குறிப்பிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாகத்தான், யெயலலிதா ஏதோ அரசியல் நாகரிகம் போற்ற முன் வந்திருப்பதாகவும், நான் அதைப் புரிந்து கொள்ளாமல் கெடுக்க முயற்சி செய்வதாகவும் சிலர் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
முன்பொரு முறை, யெயலலிதா பதவியேற்பு நிகழ்ச்சிக்குக் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சென்றிருந்தபோதும், உரிய மரியாதை கொடுத்து இருக்கை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அப்போது யெயலலிதா என்ன விளக்கம் அளித்தார்?
8-3-2002 அன்று ஒரு ஆங்கில நாளேடு வெளியிட்ட செய்தியில், தனக்கு, வி.ஐ.பி.-க்கள் அமரும் இருக்கைகள் குறித்து எந்தவித தகவல்களும் தெரியாது எனவும், பதவியேற்பு விழா தொடங்கிய பின்புதான் அன்பழகன் ஆறாவது வரிசையில் அமர்ந்திருந்ததை கவனித்ததாகவும் ஜெயலலிதா விளக்கம் அளித்திருந்தார்.
யெயலலிதா 2002 ஆம் ஆண்டு அளித்த விளக்கத்திலிருக்கும் அரசியல் நாகரிகத்திற்கும், பதினான்கு ஆண்டுகள் கழித்து இப்போது அளித்திருக்கும் விளக்கத்தில் உள்ள அரசியல் நாகரிகத்திற்கும், ஏதேனும் வித்தியாசம் உண்டா என்றால் நிச்சயமாக இல்லை என்பதை யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
அதுமட்டுமா? புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் பதவியேற்க, சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது.
அதில் கலந்துகொள்ள ஐந்தாண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நான் பேரவைக்குள் சென்றேன். நான் பேரவைக்குள் செல்வதை அறிந்த யெயலலிதா, “விருட்”டென்று எழுந்து வெளியேறினாரே; அவருடைய வெளிநடப்பு, அவர் திருந்திவிட்டார் என்பதையா காட்டுகிறது? அவர் அப்படி வெளியேறியது எவ்வகை அரசியல் நாகரிகத்தின்பாற்பட்டது? தொடர்ந்து யெயலலிதாவின் தொலைக் காட்சியிலும், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேட்டிலும் என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும், தி.மு.கழகத்தைப் பற்றியும் பண்பாடற்ற - அநாகரீகமான மொழியில் தானே அர்ச்சிக்கிறார்கள்.
அண்ணா சொன்னபடி “வாழ்க வசவாளர்கள்” என்று அனைத்தையும் கண்டும், கேட்டுக் கொண்டும் அமைதியாகத்தான் அரசியல் பயணம் செய்கிறேன். அவரது தொலைக்காட்சியில் நடப்பதும், நாளேட்டில் அர்ச்சிக்கப்படுவதும் யெயலலிதாவுக்குத் தெரியாமலா நடக்கிறது?
பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் கலையை பிறர் அவருக்குப் போதிக்க வேண்டுமா, என்ன? இப்படி ஒரு பக்கம் அரசியல் நாகரிகத்தையும், பண்பாட்டையும் அடித்துத் துவைத்துக் காயப்படுத்துவதும்; மறு பக்கம் “இணைந்து செயல்பட” விருப்பம் தெரிவிப்பதைப்போல் நயவஞ்சக நாடகமாடுவதும்தான் அரசியல் நாகரிகம் என்றால்; நாடகத்தில் அடுத்து நடக்கப் போகும் காட்சி என்ன?இவ்வாறு அதில் கூறி உள்ளார்.