குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

பழந்தமிழ் இலக்கியம் சார்ந்த அறிவு மட்டும், ஒரு வரலாற்று ஆய்வுக்கு போதுமானதா?

பழந்தமிழ் இலக்கியம் சார்ந்த அறிவு மட்டும், ஒரு வரலாற்று ஆய்வுக்கு போதுமானதா? பொதுவாக வரலாறு, மரபுக்கதைகள் ஆகியவற்றை, அறிவியல் உண்மையை போல துாக்கி வைத்து கொண்டாடுவது அல்லது அவற்றில் ஒன்றுமே இல்லை என்பதை போல துாக்கி வீசுவது என்னும் இருவேறுபட்ட நடைமுறை, நம் இலக்கிய வாதிகள் உள்ளிட்டோரிடம் நிலவுகிறது. இந்த இரண்டு துருவங்களுக்குள் நின்று கொண்டு தான், நாம் உண்மையை ஆராய வேண்டி உள்ளது. 

ஆய்வு என்பது இலக்கியம், புவியியல், வரலாறு, மானிடவியல், நாணயவியல், மொழியியல், தொழில்நுட்பம் போன்ற பல்துறை அறிவு சம்பந்தப்பட்ட விஷயம். அதே போல், ஆய்வாளன் ஏற்கனவே எடுத்த முடிவோ அல்லது அவனுக்கு சரி என்று காட்டப்பட்ட வழியோ அல்லது அவன் உணர்ச்சியோ அவனுக்கு வழிகாட்டக் கூடாது.மேலும், ஏற்கனவே அவன் செய்த ஆராய்ச்சி முடிவுக்கு முரணான தகவல்கள், மறு ஆராய்ச்சியில் கிடைத்தால், அதையும் பரிசீலித்து, முடிவுகள் எடுக்கக் கூடிய தெளிந்த மனநிலை வரவேண்டும். அதற்கு உள்நோக்கம் இல்லாதவனாக ஆய்வாளன் இருக்க வேண்டும்.

அது ஒரு நாகரிகத்தின் வரலாறு. சிந்துவெளி விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே. சிந்துவெளி நாகரிகம் எப்படி முடிவுக்கு வந்தது என்ற கேள்வியும், தமிழர் தொன்மங்களின் பின்னணி எது என்ற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

மனிதனின் வரலாறு என்பது, உண்மையில் பயணங்களின் வரலாறு. பயணங்களால் பட்டை தீட்டப்பட்ட பட்டறிவு, பகுத்தறிவின் வெளிப்பாடே, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உன்னதமான புரிதல். உணர்ச்சிவசப்படாத, அரசியல் கலப்பற்ற ஆய்வுகளே, இந்திய வரலாற்றின் புதிர்முடிச்சுகளை அவிழ்க்க முடியும். அதை எடுத்துச் செல்வது நமது கடமை