குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.
பசுமைமிக்க வன்னி பசிமிக்க வன்னியாகி
சிவந்தவன்னியாகி சிதறியவன்னியாகி
பிணக்குவியலாய் சாம்பல்மேடாய்
வெட்டையாய் அரசமரமும்  

 

சந்திரவட்டக்கல்லும் வைத்து வளர்க்கப்படும்
வஞ்சகுதேசமாய் தட்டாம் தரையாய் காய்கிறது.

வன்னிபற்றிச் செய்தி அறிகையில் தலைகலங்கி கைதடுமாறுகிறது.

விருந்தினர் வந்தால் ஆவை அழைத்து
பால்பிதுக்கி சுவையாக ஆற்றிய கைகள்
இன்று வெறுங்கையாக

நிவாரணத்திற்காக மட்டும் ஒப்பமிடும்
உணா்வற்ற கையாக உதவிகள்

ஏந்தக் காத்துக் கிடக்கிறது.

மயில் பறந்தவானில் வானுார்திகள் பறக்கிறது
மான்பாய்ந்த புற்தரையில் இராணுவம் நடக்கிறது.
என்ன நடக்குதென்று எவர்க்கும் தெரியாத
மூடுமந்திரம் அங்கே நடக்கிறது.

சாட்டுப்போக்காக துணுக்காயில்

மல்லாவியில் கண்துடைப்பு நடக்குது
வயிறு பட்டினி கிடக்குது.

பள்ளிகளில் படுக்க எழும்ப ஏற்பாடு நடக்குது
மேடை மாறினாலும் கதையும் காட்சியும்

ஒன்றாகவே நாடகம் நடக்கிறது.

வீட்டை உடைத்தார்கள்
சுற்றி நிறைந்து கிடந்த

வளங்களைத் தகர்த்தார்கள்
பயிர்களையும் பயன்தரு

மரங்களையும் தகர்த்தார்கள்

உலகத்தரத்திற்கு ஒப்ப இருந்த

வைத்தியசாலைதனை சாம்பல் மேடாக்கினர்.

பாற்பொருள் ஆலைகளை அழித்தார்கள்
பலர் உண்ட உணவகங்களை அழித்தார்கள்.

அய்ரோப்பாவிற்கு ஈடான தொழில்நுட்ப

வசதிகளை அழித்தார்கள்.

எல்லாநாட்டுச் செல்வங்களையும்

அள்ளி அள்ளி ஏற்றி மகிழ்ந்தார்கள்..
கன்னியரைக் காயப்படுத்தினர்.
நகைகளை அள்ளினர்..

தாலிக்கொடிகளைக் கழற்றினர்..

பவுன்களைப் பதுக்கினர்.

இத்தனையும் தேடியோரை எதனையும் காணதபடி

வவுனியா செட்டிகுளக் காட்டில்

அடைத்து அடிமைப்படுத்தினர்.

மறக்ககூடிய மறைக்ககூடிய

கொடூரமா நடந்தது.. மறக்கவும் முடியுமா?

இத்ததனையும் செய்துவிட்டு

நலன்புரி நிலையங்களில்

சுதந்திரமாய் நடமாட அனுமதியாம்

என்று நாடகம் வேறு காட்டுகிறார்கள்.
தவறேதும் செய்யாதோரும் கொல்லப்பட்டு

கொழுத்தப்பட்டு சாட்சியமில்லாது

செய்த திறன் இன்றுவென்றது நாளை..?

மக்கள் பட்டினியில் மன்றாடியபோது

ஒன்றாகிப் பேசி வழிசெய்யாத மேதைகள்

மக்களின் வாக்கு வாங்க வந்திறங்கி

வட்டமேசைக்கு கட்டுண்டு

திட்டமுடன் காத்திருக்கும் கதை

நல்லகதை ஆகாது போனால்

இந்தப் போக்கத்த தலைவர்கள்

நாக்கை துாங்கவிட்டுச் சும்மா

ஒடித்தரியாது விட்டாலே போதும்..

திம்புவிறக்குப் பின் சுவிசில்

ஒன்றான தமிழ்கட்சிகள்

வம்பு ஏதும் செய்யாது வந்துபோய் என்னபயன்?

ஒன்றாய் இருந்து பேசவந்தகதை அறிந்து

ஆறுதல் அடைந்தோம்.

அலரிமாளிகைக்கும்..

அயலுக்கும் தகவல்

கடத்த வந்த தந்திரசாலிகள் எத்தனை பேர்..

பிரிந்து பிரிந்து வந்தாலும்

போகும்போது சேர்ந்து போங்கள்.

நாங்கள் வாழ வழிதேடுங்கள்...!

நீங்கள் ஒன்று சேராவிட்டால்

உங்களுக்குக்குள்ளே பலரைப்பிரித்து

தங்களுக்குள்ளே சேர்க்கத்திட்டம்

போட்டு பார்த்திருக்கு பருந்து.

இதை மறந்து நாட்டுக்கு பறந்து போவீர்கள் ஆனால்


வெற்றிலையைப் போட்டுக்கொண்டு

வெற்றிலைக்குப் போடுங்கள் என்று

வெற்றுப் பேச்சு பேசித்திரிவீர்கள்.

அன்றும் இன்றும் மிதிக்கும்

யானைக்கு போடு என்ற கேட்பீர்கள்

ஒன்றுக்கும் போடவேண்டும் என்றும்

உலகசனநாயகத்தை துாக்கி எறிந்து

மதில்மேல் பூனையாய் பதுங்கி இருப்பீா்கள்.

எம்மண்ணில் அரசுமரம் வளர்ந்தால் என்ன 
எம்மண்ணில் விகாரை எழுந்தால் என்ன
எம்மனம் தமிழ் மனமாக தமிழ் அறம் வளர்க்கவேண்டும்.

எம் வாழ்வு தமிழ் வாழ்வாக இருந்தால்

அரசு பட்டமரமாகும் நட்டகல் விட்டகல்லாகும்.

தமிழ் ஆலமரம்போல் வளரும்
தமிழ் அறுகுபோல் படரும்.
மனம் திருந்தி வாழ்வோம். மீள்வோம்..

கன்னிகள் இல்ல வன்னி கண்ணிகள் நிறைந்து

பசுமைகலைந்த வன்னி சீருடைப் பச்சையால் காயுது..

பொ.முருகவேள்