18.04.2016-தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக ராயிவ் காந்தி கொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலையில் அதிமுக அபார வெற்றி பெற்றது. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே தலைதூக்கிய சர்வாதிகாரம் 5 ஆண்டுகளும் நீடித்தது. தேர்தல் வெற்றிக்கு பின்னர் ராயிவ் காந்தி மரணத்தை கொச்சைப்படுத்தியது, வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சென்னையில் ஆடம்பரமாக திருமணம் நடத்தியது
, பல்வேறு துறைகளில் கொடி கட்டி பறந்த ஊழல், ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி முதல்வர், அமைச்சர்கள் என சகல தரப்பினரும் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்தது என அதிமுக அரசின் நடவடிக்கைகள் கடும் விமர்சனத்திற்குள்ளாகின.
ஆனால் பல இடங்களில் மக்களின் அடிப்படை தேவைகள் கூட நிறைவேற்றப்படவில்லை. பல இடங்களில் ஒரு குடம் குடிநீருக்காக மக்கள் தவியாய் தவித்தனர். பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்களும் நடந்தன. ஆனாலும், 5 ஆண்டு ஆட்சி முடியும் வரை அனைத்தையும் பொறுமையாக கவனித்த மக்கள், 1996 தேர்தலில் அதிமுகவுக்கு கொடுத்த பலத்த அடி, அரசியலில் பல தரப்பினரும் எதிர்பாராதது.
1996 தேர்தலுக்கு முன்பாக திமுகவில் இருந்து வை.கோபால்சாமி தலைமையில் ஒரு தரப்பினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். திமுகவில் இருந்து அவர் சென்றதால் கட்சியில் செங்குத்து பிளவு எனக்கூறி மார்க்சிஸ்ட், சனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் மதிமுகவுடன் கை கோர்த்தனர். இனி திமுகவின் எதிர்காலமே முடிந்து விட்டது என விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
திரை உலகில் கொடி கட்டி பறக்கும் நடிகர் ரயினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் இந்த தேர்தலுக்கு முன்பாக போர்க்கொடி உயர்த்தினர். இதனால் ரயினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடும் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியிலும் அதிமுகவுக்கு எதிரான மனநிலை ஒலித்தது.
தமிழகத்தின் அரசியல் எதிர்காலம் குறித்த பல்வேறு சந்தேகங்கள் நிலவின. 1996 ஏப்ரல் 27ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டது. திமுகவுடன் ஆரம்பத்தில் கூட்டணி அமைக்க முன் வந்த பாமக விலகி சென்றது.
திமுகவுடன் இந்திய கம்யூனிசுட், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் மட்டுமே கூட்டணி அமைக்க முன் வந்தன. காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் டெல்லி தலைமை அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவெடுத்தது. இதனால் தமிழகம் முழுவதும் காங்கிரசில் கொந்தளிப்பு ஏற்பட்டு மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானது. பின்னர் திமுகவுடன் கூட்டணி சேர்ந்தனர்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரசும், மதிமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் மற்றும்சனதாதளம் ஆகிய கட்சிகள் சேர்ந்தன. பாமக, திவாரி காங்கிரஸ் ஆகியன தனி அணியாக போட்டியிட்டன. தேர்தல் தேதி நெருங்கும் சமயத்தில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டன. ஏற்கனவே திமுக-தமாகா வலுவான கூட்டணி அமைந்திருந்த நிலையில், இந்த அணிக்கு ஆதரவாக நடிகர் ரயினிகாந்த் குரல் கொடுத்தார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் இனி தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாது. தமிழகத்தில் நல்லாட்சி அமைய திமுகவை ஆதரிக்கவேண்டும் என தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனால் அரசியல் களம் பல்வேறு திருப்புமுனைகளை கண்டது.
திமுக கூட்டணியில் தமாகாவுக்கு 40 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் 11 இடங்களிலும் போட்டியிட்டது. திமுக 182 தொகுதிகளில் போட்டியிட்டது. அதிமுக 168 இடங்களிலும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 64 இடங்களிலும் போட்டியிட்டது. மதிமுக177 இடங்களிலும், கூட்டணி கட்சியான மார்க்சிசுட் 40 இடங்களிலும், ஜனதாதளம் 16 இடங்களிலும் போட்டியிட்டன. பாமக 116 இடங்களில் போட்டியிட்டது.
மொடக்குறிச்சி தொகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1033 விவசாயிகள் தேர்தலில் போட்டியிட்டனர். அந்த தொகுதி தவிர மற்ற தொகுதிகளில் ஏப்ரல் 27ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் பல இடங்களில் அதிமுக அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் முற்றுகை போராட்டங்கள் நடத்தினர். ஓட்டு கேட்க சென்றவர்களை மக்கள் துரத்தியடித்தனர். அதிமுக பொது செயலாளர் யெயலலிதா பெரும்பாலான இடங்களுக்கு வானுார்தியில் சென்றும், சாலை மார்க்கமாகவும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
திமுக தலைவர் கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியிலும், மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியிலும் போட்டியிட்டனர். பர்கூர் தொகுதியில் அதிமுக பொது செயலாளர் யெயலலிதா, விளாத்திகுளத்தில் மதிமுக பொது செயலாளர் வை.கோபால்சாமி ஆகியோர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன. அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தான் போட்டியிட்ட பர்கூர் தொகுதியில் தோல்வியடைந்தார். அதேபோல் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அனைவரும் தோல்வியடைந்தனர். அதிமுகவில் திருநாவுக்கரசு, ராசிபுரம் சுந்தரம், சங்கரன்கோவில் கருப்புசாமி, வில்லிபுத்தூரில் தாமரைக்கனி ஆகியோர் மட்டும் வெற்றி பெற்றனர். காங்கிரசில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரத்திலும், பத்மநாபபுரத்தில் பா.ய.,வின் வேலாயுதமும் வெற்றி பெற்று சட்டசபையில் கணக்கை தொடங்கினர்.
இத்தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சியான தமாகா 39 இடங்களிலும், இந்திய கம்யூனிசுட் 8 இடங்களிலும் வெற்றி பெற்றனர். பாமக 4 தொகுதிகளை கைப்பற்றியது. மூன்றாவது அணி அமைத்து போட்டியிட்ட மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியவில்லை. விளாத்திகுளத்தில் வை.கோபால்சாமி தோல்வியடைந்தார். மார்க்சிசுட், யனதாதளத்திற்கு தலா ஒரு இடம் கிடைத்தது. மீண்டும் நான்காவது முறையாக தமிழக முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றார். அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட 32 பேர் அமைச்சர்களாயினர். ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற மு.க.சுடாலின் பின்னர் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக சோ.பாலகிருச்ணன் தேர்வு செய்யப்பட்டார். சட்டசபை சபாநாயகராக பிடிஆர் பழனிவேல்ராயன் தேர்வு செய்யப்பட்டார்.